Wednesday, July 22, 2015

ர்... ரா.. ராதிகா மிஸ்..!!!

Posted by பால கணேஷ் Wednesday, July 22, 2015
கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப நீங்க படிக்கப் போற ‘ராதிகா மிஸ்’.

ராதிகா மிஸ்ஸை உடனே பார்த்து, அவள் கன்னத்தில் ‘ரப்’பென்று ஒரு அறை விடவேண்டும் போல கோபம் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குள். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் ராதிகா மிஸ்ஸை நீங்கள் சந்திக்க வேண்டும். என் மகளை நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கச் சென்ற போதுதான் ராதிகா மிஸ் எனக்கு அறிமுகமானாள். இரண்டு குண்டு பன்களை ஒட்ட வைத்தது போன்ற கன்னம், ஜெய்சங்கருக்கிருப்பது போன்ற சின்னக் கண்கள், அதற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி, அறிவின் அடையாளமாய் பரந்த நெற்றி, தடித்த உதடுகள், குள்ளமான, குண்டான உருவம் என்று மொத்தமாக அவளைப் பார்த்த போது சற்றே பெரிய சைஸ் பூசணிக்காய் கை கால் முளைத்து வந்தது போல் தோற்றமளித்தாள். தன் கையிலிருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு ‘‘உங்க பொண்ணு பேர் என்ன மாநந்தியா..?’’ என்று கேட்டாள். நான் திடுக்கிட்டுப் போய் அவள் கையிலிருந்த லிஸ்டை எட்டிப் பார்த்தேன். 

‘‘சரியாப் போச்சு போங்க... எம்.ஆனந்திங்க அது. என் பேர் முரளி’’ என்றேன். ‘‘ஆபீஸ்ல இருக்கறவங்க புள்ளி வெக்க மறந்துட்டாங்க போல. ஸாரி ஸார்’’ என்று சிறிதும் வருந்தாத குரலில் கூறி இலவச இணைப்பாக குமரிமுத்துவின் சிரிப்பை ஆல்டர் செய்தது போலச் சிரித்தாள். நான் கடுப்பாகி, ‘‘என் பக்கத்து வீட்டு மூவேந்தன் தன் பொண்ணு தேவிய இங்க சேக்கலாம்னு இருந்தான். நல்லவேளை... வேற ஸ்கூலுக்குப் போய்ட்டான்..’’ என்க, நான் சொன்னது புரியாமல் ‘ழே‘ என்று விழித்தபடி நின்றிருந்தாள். தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

என்ன அவசரமாக இருந்தாலும் என் மகளைப் பள்ளியில் விடுவது நான்தான். அதை மட்டும் அவளுக்கு விட்டுத்தரவே மாட்டேன். மாலையில் போய் அழைத்து வருவது என் மனைவி ஜெயாதான். குழந்தைகள் வகுப்பு முடிந்து வருவதற்குள் பாகுபலியின் பிரம்மாண்டத்திலிருந்து மெகாசீரியலின் வில்லிகள் வரை எல்லா சப்ஜெட்டுகளையும் அலசி முடித்திருப்பார்கள் அங்கு காத்திருக்கும் தாய்மார்கள். இப்படி என் மனைவிக்கு நிறையத் தோழிகள் அங்கே. எப்போதாவது மற்ற சப்ஜெக்ட்டுகள் போரடித்தால் குழந்தைகளின் படிப்பு பற்றியும் பேசிக் கொள்வார்கள் நேரிலும் சிலசமயம் கைபேசி மூலமும். 

இப்படி நான் நினைத்திருந்தது மகாத்தப்பு என்பது அலுவலகத்துக்கு மட்டம் போட்ட ஒரு தினத்தின் மாலையில் ஆனந்தியை அழைத்துவரப் போயிருந்தபோது தெரிந்தது. மகள் வரும்வரை கைபேசியில் முகநுலில் திரிந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் அவர்கள் மெல்லிய குரலில் பேசியது கேட்டது. ‘‘ஏய்.. அவர்தாண்டி ஜெயா வீட்டுக்காரர்..’’ ‘‘இவரா..?’’ ‘‘ஆமாடி. எப்பப் பாரு ஃபேஸ்புக்ல மேஞ்சுட்டிருப்பாருன்னு சொன்னால்ல..?’’ ‘‘கதைல்லாம் எழுதுவாருன்னு சொன்னா. ஆளப் பாத்தா சேட்டு வீட்டுப் பிள்ளை மாதிரில்ல இருக்காரு...’’ ‘‘மெதுவாப் பேசுடி. காதுல விழுந்துரப் போவுது.’’ ‘‘அதெல்லாம் விழாது. நாளைக்கு நீ ஜெயாட்ட நான் இப்டிச் சொன்னேன்னு மாட்டிவுடாம இருந்தாச் சரி..’’ திரும்பி, பேசியவளை முறைக்கலாம் என்று ஆசை துடித்தாலும், வாலண்டியரா வண்டில ஏறாதடா என்று அறிவு தடுத்ததால் பேசாமல் ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து வீட்டில் சும்மாவே இருந்தாலும்கூட மகளை அழைத்துவர நான் போவதில்லை. ஹி.. ஹி... 

நான் சொல்லவந்தது ராதிகா மிஸ்ஸின் மீது எனக்கு வந்த கோபம் பற்றித்தான் இல்லை..? அதைப் பேசலாம். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஏகப்பட்ட ஆணிகள் பிடுங்கிய அலுப்பில் அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றுவதற்கு முன்பே, ‘‘அப்பா, ஸ்கூல்ல என்னை மிஸ் அடிச்சுட்டாங்க..’’ என்றாள். ‘‘நீ க்யூட் பேபி இல்லையா...? அதான் கிஸ் அடிச்சிருப்பாங்க. விடும்மா..’’ என்றேன். ‘‘ஐயோ அப்பா.. மிஸ்... மிஸ்... அடிச்சுட்டாங்கன்னு சொல்றேன்..’’ என்றாள் சலிப்பாக. ‘‘அவ யார் அடிக்க?’’ என்று நான் கேட்க, ‘‘இவ என்ன செஞ்சான்னு கேளுங்க மொதல்ல’’ என்றாள் ஜெயா. ‘‘நீ என்ன செஞ்ச கண்ணூ?’’ ‘‘மிஸ் உக்கார வெச்ச எடத்துல உக்காராம மாறி உக்காந்துட்டேன்னு அடிச்சிட்டாங்கப்பா’’ 

எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்தே சேட்டைக்காரிதான். அடம் பிடித்து எங்களை நிறையத் தொந்தரவு செய்திருக்கிறாள். என்றாலும் ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை, அவள் முகத்தைப் பார்த்தால் அடிக்கவும் மனசு வராது. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளுக்குக் கைநீட்டுமளவு தைரியம் வந்துவிட்டதா? என் முகத்தின் கோபத்தைப் படித்த ஜெயா, ‘‘ஏன் இப்டி டென்ஷனாகறீங்க..? மிஸ் லேசாத்தான் கன்னத்துல தட்னாங்களாம். அவ அடிச்சதா சொன்னதும் பதறிட்டாங்க. உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க.’’ ‘‘அதான் மறக்காம சொல்லிட்டியாக்கும்..? ஆனந்தி என்ன நினைச்சிருப்பா? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மளை அழஅழ ஸ்கூல்ல தள்றாங்க போலன்னு நினைச்சிருக்க மாட்டா? இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம்னு அவளத் திட்டறத விட்டுட்டு எனக்கு அட்வைஸ் வந்துட்டா பெரிசா..’’ ஜெயா கூலாக ‘‘நாய்னா கடிக்கறதும், மிஸ்னா அடிக்கறதும் சகஜம்தாங்க. சின்ன வயசுல நான் வாங்காத அடியா..? விட்டுட்டு வேலயப் பாருங்க.’’ என்றாள். அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசுவது ஆபத்து என்பதை அனுபவ அறிவு உணர்த்தியதால் மவுனமானாலும், ‘இதச் சும்மா விடக்கூடாது’ என்று மனதினுள் முடிவு செய்தேன்.

றுதினம் காலை சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்று விட்டேன். ஆனந்தியை வகுப்பில் அமர வைத்துவிட்டுக் காத்திருக்க, பூசணிக்காய்க்குப் பதில் காற்றில் பறந்து விடுகிற உடல்வாகில் ஒரு முருங்கைக்காய் வந்தது. ‘‘ராதிகா மிஸ்..?’’ ‘‘அவங்க லீவ் ஸார். நீங்க போங்க நான் பாத்துக்கறேன்’’ என்றது. அடுத்த தினமும் காத்திருப்பு, மு.காயின் வருகை, நான் திரும்புதல் என்று டிட்டோ. ரெண்டு நாள் பாக்காட்டா கோபத்தின் சதவீதம் குறைந்துவிடுமே என்று அதை அவ்வப்போது ஊதிவிட்டுக் கொண்டேன். மூன்றாம் தினமும் அதே மு.காய் வர, ‘‘ராதிகா மிஸ் வரலையா..? என்னாச்சு..?’’ என்று கேட்டே விட்டேன். வந்த பதில் என்னை அதிரச் செய்தது. ‘‘திடீர்னு அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு சார். அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’’ என்றது அந்தப் பெண் வெட்கமாக. ‘அதுக்கு இவ எதுக்கு வெட்கப்படணும்’ என்ற கேள்வியுடன் திரும்பி விட்டேன்.

ன்றிலிருந்து மூன்றாவது தினம் தான் ராதிகா மிஸ் வந்தாள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள். ‘‘நீங்க ஆனந்தியோட அப்பா இல்ல..?’’ ‘‘என் மகளை அடிச்சீங்களாமே..?’’ என்றேன் கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு. ‘‘அடிக்கல்லாம் இல்ல. கொஞ்சம் குறும்பு பண்ணினா. அதான் லேசாத் தட்டினேன். அவங்கம்மாட்ட கூட ஸாரி கேட்டேனே..?’’ ‘‘நீங்க ஸாரி கேட்டா என்ன, வேஷ்டி கேட்டா என்ன.? ஆயிரக்கணக்குல பீஸ்கட்டி நாங்க குழந்தையப் படிக்க அனுப்பினா அடிப்பீங்களோ..? என்ன நெனச்சுட்டிருக்கீங்க மனசுல..?’’ முகத்தைக் கடுகடுவென மாற்றிக் கொண்டு கோபமாக நான் இரைய, கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் ராதிகா மிஸ். பயந்துவிட்டாள் போலும்! 

‘‘குழந்தை தப்பு பண்ணா எங்ககிட்டதான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்குப் பெத்தவங்களுக்கே உரிமை இல்லைங்கறப்ப நீங்க எப்படி அடிக்கலாம்? சைல்ட் சைகாலஜியப் படிக்காமயா வேலைக்கு வந்தீங்க..? நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி.இ.ஓ. கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், உங்க வேலை போயிரும்.’’ ‘‘பெரிய கவர்மெண்ட் வேல... போங்க ஸார் வெளையாடிக்கிட்டு...’’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வகுப்பறையினுள் ஓடிவிட்டாள். சில விநாடிகளில் அங்கிருந்து சிரிப்பொலி கேட்க, நான் குழப்பமாக என் வாகனத்தைக் கிளப்பினேன்.

ன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.

அப்போதும் ஆனந்தி வரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்திருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். "ஏண்டா செல்லம்? என்ன கோவம் உனக்கு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... உனக்குப் புடிச்ச ப்ளாக் கரண்ட் கேக், பொம்மை.." பதிலில்லை. ஒருவேளை நான் வந்தும் அந்த குண்டு பூசணிக்காய் என் மகளைத் திட்டியிருக்குமோ..? "கண்ணூ... நான் கோவிச்சுக்கிட்டதுக்காக மிஸ் உன்னைத் திட்டினாங்களா..? சொல்றா.. அவள ஒரு வழி பண்ணிடறேன். என்ன நெனச்சுட்டிருக்கா அவ மனசுல..?" என்றபடி அவள் கையில் பொம்மையைத் தர கோபத்துடன் தூக்கி எறிந்தாள் ஆனந்தி. 

‘‘போங்க டாடி.. உங்களை யார் காலைல மிஸ்ஸைத் திட்டச் சொன்னது..? உங்களால எனக்கு பெரிய இன்சல்ட்டாப் போச்சு’’ என்றாள் கோபமாக. ‘‘இன்சல்ட்டா..? என்னம்மா சொல்ற..?’’ நான் வழக்கம்போல பாக்யராஜ் முழி முழிக்க, அவளே தொடர்ந்தாள். ‘‘அமுல் பேபி மாதிரி உங்க மூஞ்சி இருக்காம். அதுல நீங்க கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைச்சுகிட்டதப் பாத்ததும் ராதிகா மிஸ்க்கு சிரிப்பை அடக்க முடியலையாம். கையால வாயப் பொத்தி கஷ்டப்பட்டு அடக்கிருந்திருக்காங்க. நீங்க போனதும் க்ளாசுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அவங்க சொன்னதக் கேட்டு என் ப்ரண்ட்ஸ்லாம் கூடச் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு தெரியுமா..’’ என்று அவள் கோபமாகச் சொல்ல, நான் திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். அடிப்பாவி... நான் குண்டுப் பூசணிக்காய் என்று அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தால் இப்படியா எனக்கு அமுல்பேபி என்று பட்டப் பெயர் வைத்து குழந்தைப் பிள்ளைகள் முன்னால் மானத்தை வாங்குவாள்..? அவ்வ்வ்வ்... ‘இனி ஆனந்தியை பள்ளியில் விடப் போனால் தலையில் போட்ட ஹெல்மெட்டைக் கழற்றாமல் அப்படியே திரும்பி ஓடி வந்துவிடத்தான் வேணும்.’ மனதிற்குள் சொல்லியபடியே திரும்ப, அறை வாசலில் நின்று என்னைக் கேலியாகப் பார்த்த ஜெயாவின் பார்வையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை..!!!

Saturday, July 4, 2015

குறும்(பட) பயண அனுபவம்!!

Posted by பால கணேஷ் Saturday, July 04, 2015
வனைச் சேர்ந்தவர்கள் குறும்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், இயன்ற சமயங்களில் பங்களிப்புச் செய்து கொண்டும் இருந்த இவனுக்குக்கூட குறும்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் துளசிதரன். (என்னா தெகிரியம்!) சரி, அவரே துணிஞ்சப்பறம் நமக்கு என்ன வந்தது என்கிற அசட்டுத் துணிச்சலில் இவன் சம்மதித்தான். சேரநன்நாட்டின் வளமையை, செழுமையை …ஹலோ, இயற்கையைக் குறிப்பிடுகிறேன்… ரசிக்கலாமென்கிற சபலம்தான் இவனுக்கு. சம் என்று சொல்லி மதம் என்று முடிப்பதற்கு முன்னேயே பாலக்காடுக்கு போக, வர மின்வண்டி பயணச்சீட்டை புக் செய்து தந்து அசத்தினார் சகோதரி கீதா ரங்கன். (என்னா திட்டமிடல்!!). சரி, நமக்கு சின்னப் பாத்திரம், இரண்டே வசனங்கள்தானே, சமாளிச்சிரலாம்னு இவனும் புறப்பட்டு சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தாயிற்று.

மின்வண்டிப் பயணங்களில் மேல் இருக்கைதான் பெரும்பாலும் கிடைக்கும் இவனுக்கு. அருகிலேயே மின்விசிறி இருப்பதால் அது வசதி என்றும் தோன்றும். ஆனால் பக்க மேல் படுக்கை வாய்க்கப் பெறுபவர்கள் அபாக்கியவான்கள் என்றொரு திடமான நம்பிக்கை இவனிடம் உண்டு. கால் நீட்டவும் வசதிக் குறைவாய், மின்விசிறிக் காற்றும் எட்டாமல், கழிவறைக்குப் போகிற வருகிற பயணிகள் சத்தத்தையும் சகித்துக் கொண்டு… பெருந்துன்பம்! துரதிர்ஷ்டவசமாக அன்று இவன் அபாக்கியவானாக ஆனான். பக்க மேல் படுக்கையா.. என்று நொந்து கொண்டே கட்டையைச் சாய்த்தால் உறக்கமும் வரவில்லை, மின்வண்டி கிளம்பியும் எதிர் இரண்டு மேல் படுக்கைகளுக்கு ஆட்களும் வரவில்லை.

கட்பாடி.. ஸாரி, காட்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு சேரநன்நாட்டிளம் பெண்கள் வந்து மேல் படுக்கைகளை ஆக்ரமித்தனர். இவன் கண்படும்படி எதிரே இருந்தவளின் பெயர் ஆஷா என்று மற்றவள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. மலையாளத்தில் அம்சா என்றால் அம்சை, உஷா என்றால் உஷை என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஆஷை!!! ஹா.. ஹா… ஹா.. இரண்டு மனோஹரமாய பெண்குட்டிகளும் நான்ஸ்டாப் மலையாளத்தில் மூக்கால் சம்சாரித்துக் கொண்டிருக்க, இவன் ரசித்து, பின் சற்றே யோசித்து, நிங்ஙள் எவிட இறங்குன்னது? என்று கேட்க, ஒரு மாதிரியாகப் பார்த்தபடி ட்ரிவாண்ட்ரம் அங்கிள் என்றது ஆஷை. எனிக்கு ஒரு சகாயம் வேண்டே. சப்போஸ் ஞான் உறங்கிட்டெங்கில் என்னை பாலக்காட்டில் இறப்பிக்குமோ..? இதானு பர்ஸ்ட் டைம் ட்ராவல் என்றான் இவன். கண்டிப்பாச் சொல்றேன் அங்கிள்.. அதுக்காக தயவுபண்ணி மலையாளத்தைக் கொல்லாதீங்க ப்ளீஸ் என்று ஆஷை ஸ்பஷ்டமாகத் தமிழில் சொன்னதும் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியப் படுத்துறங்கி விட்டான் இவன்.

வாக்குத் தவறாத அந்த வனிதை, சரியாக காலை நான்கு மணிக்கு எழுப்பி விட்டாள் - இதான் பாலக்காடு ரயில்நிலையம் அங்கிள் என்று. நன்றி சொல்லி இறங்கி வெளியே வந்தால், பாலக்காடு இவன் நினைத்த மாதிரி பெரிய ஸ்டேஷன் இல்லை. தம்மாத்தூண்டாக இருந்தது. (ஊரே பெரிய சைஸ் கிராமம் போல்தான் என்று பிறகு சொன்னார்கள்). ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் கோவை ஆவியின் தொலைபேசிக்கு அழைத்தான் இவன். அவன்தான் வந்து இவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எங்கே அவன் நம் ‘இலக்கியக் காட்டாறு போல ஒலிக்கும் தொலைபேசியைக் கவனிக்காமல் விட்டால் என்ன செய்வது என்றொரு பயம் இவனுள் இருந்தது. நல்லவேளையாக ஆவி, உடனே எடுத்துப் பேசினான். இதோ கிளம்பிட்டன் என்றான். பொழுதைப் போக்க எதிரிலிருந்த கடையில் ஒரு குளம்பி பருகினான் இவன்.

பத்து நிமிடங்களின் இறப்பில் இவனின் கைபேசி ஆவி அழைப்பதாகச் சொல்ல, உயிர்ப்பித்தான் இணைப்பை. சார், நான் வந்துட்டேன். எங்க இருக்கீங்க? என்றான் ஆவி. ஸ்டேஷன் வாசல்லயேதானடா இருக்கேன்.. என்றான் இவன். ஓ… அந்தப் பக்க கேட்ல எறங்கிட்டீங்க போல.. இருங்க, சுத்தி வரேன் என்றான் ஆவி. காத்திருப்பில் கழிந்த இரண்டு நிமிடங்களின் பின் இவன் ஆவியை அழைத்து, எங்கடா இருக்க..? இவ்ளவு நேரமா இந்த கேட்டுக்கு வர..? என்று கேட்க, ஸார், இங்க இருக்கற ரெண்டு கேட்டையும் பாத்தாச்சு. நீங்க இல்ல… பக்கத்துல எதாவது லாண்ட் மார்க் சொல்லுங்க.. என்று ஆவி சலித்துக் கொள்ள, இவன் கண்ணில் பட்ட அருகாமை லாட்ஜ் பெயரைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான். இரு நிமிடத்தில் மீண்டும் ஆவியின் அழைப்பு. ஸார், அப்டி ஒரு லாட்ஜே இங்க இல்லங்கறாங்க. நான் ஆலுக்காஸ் ஜ்வல்லரி பக்கத்துல நிக்கறேன். விசாரிச்சு வாங்க.. என்று வைத்துவிட்டான்.

என்னடா இது..? நாம்தான் ராங்சைடில் இறங்கிட்டோமோ என்று இவன் பயந்து நிலையத்தின் படிகளில் ஏறி மறுபுறம் சென்று பார்க்க, அங்கே ஒரு மைதானமும் முட்டுச் சந்தும் போல இருக்க, சாலையே இல்லை. நொந்து கொண்டே மீண்டும் படிகளேறி இந்தப் புறம் மீண்டும் வந்து ஆலுக்காஸை விசாரித்தால் அவிட அந்தக் கடை இல்லையென்றனர். இந்தச் செயல்பாடுகளில் மேலும் ஐந்து நிமிங்கள் கரைந்திருக்க, இந்தத் தடியன் இப்படிப் படுத்தறானே..? என்று சலித்துக் கொண்டான் இவன். எலேய்… நீரென்ன நாகேஷ் மாதிரி ஒடம்புன்னு நெனப்பா..? இந்நேரம் அவனும் உம்மை தடியர்னு திட்டிட்டிருப்பான் வேய் என்று மனஸ் கொக்கரிக்க, அதன் தலையில் பலமாகத் தட்டி அடக்கினான் இவன்.


இப்போது மீண்டும் கைபேசியை எடுத்து ஆவியை அழைத்தான். அழைப்பு போய்க் கொண்டிருக்க, தான் குளம்பி பருகிய கடையின் போர்டை எதேச்சையாக நிமிர்ந்து அப்போதுதான் கவனித்த (வழக்கமாக சம்சாரத் தாக்குதல் பெறும்) இவன் இப்போது மின்சாரத் தாக்குதல் பெற்றான். போர்டில் ‘ஒலவக்கோடு’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அழைப்பை ஏற்ற ஆவியிடம், என்னவோ தப்பு நடந்திருக்குடா. இங்க ஸ்டேஷன் வாசல் கடைல போர்டுல ஒலவக்கோடுன்னு இருக்கு. தப்பான ஸ்டேஷன்ல எறங்கிட்டனோ? என்று புலம்பவாரம்பித்தான் இவன். இல்ல ஸார். நானும் இங்க டவுட் வந்து விசாரிச்சேன். கோவைலருந்து வர்ற ரயில்லாம்தான் நான் இருக்கற ஸ்டேஷன்ல நிக்குமாம். இது சிட்டி ஸ்டேஷனாம். சென்னைல இருந்து வர்ற வண்டிங்க ஒலவக்கோட்லதான் நிக்கும்னாங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன். என்றான் ஆவி.

அடப்பாவிகளா… இப்படி இரண்டு நிலையங்களை வைத்துக் கொண்டு ஏனடா படுத்துகிறீர்கள்..? என்று சலித்துக் கொண்டு இவன் காத்திருக்க மேலும் ஏழு நிமிடங்கள் கழித்து ஆவியானவன் வந்து சேர்ந்தான். நடந்த கூத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டு, சிரித்து, மேலும் ஒரு குளம்பி பருகி, தங்க வேண்டிய விடுதியை அடைந்தபோது மணி ஐந்தரையை நெருங்கி இருந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கண்ணாமூச்சு விளையாட்டில் பலியாகி இருந்தன. அறையில் ஒரு குட்டி உறக்கம் போட்டுப் பின் கிளம்பலாம் என்றிருந்த இவன் திட்டத்தில் மண். அவ்வ்வ்வ்… நடந்ததை கீதாவிடமும், இவர்களின் இயக்குனர் துளசியிடமும் விவரிக்க துளசியின் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே… தெய்வீகச் சிரிப்பையா அவருடையது. படப்பிடிப்பிற்குச் சென்ற இடங்களையும், அங்கே நடந்த சுவாரஸ்யங்களையும் துளசி அவரின் தளத்தில் விரிவாக எழுதிவிட்டார்.

குறும்படத்தில் இவனை நடிக்க வைக்க அவர் பட்ட பாட்டைத்தான் எழுதவில்லை அவர். இவன் சிகையைக் குறுக்கில் சீவி, அதில் சற்றே நீட்சியாக சிறுமுடிகளை இணைத்து நம்பூதிரி ஸ்டைலில் கொண்டையிட்டு, வாளைக் கையில் தந்து குடந்தையாரைக் கொல்லடா என்றால் வசனத்தைச் சரியாகத்தான் பேசிவிட்டு, வாளைச் செருகினான் இவன். கோபமாப் பாத்து கத்தியால குத்துங்க சார். முகத்துல சிரிப்பு வந்துடுது. அது இருக்கக் கூடாது என்றார் துளசி. சிரித்த முகமாகவே வாழ்ந்து பழகிவிட்ட இவனுக்கு முகத்தில் சினத்தை வரவழைப்பது பெரும்பாடாக ஆயிற்று. இப்படியாக இரண்டு மூன்று டேக்குகள் எடுத்தபின் ஓகே சொன்னார். மறுதினமும் ஒருமுறை அதே ஷாட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று ட்ரை பண்ண, அப்போது செய்தது தான் சரியாக ஓகே ஆனது. (அதன் காரணம் ஆவிக்கு மட்டுமே தெரியும். ஹா.. ஹா.. ஹா..)

பாலக்காட்டில் துளசி படப்பிடிப்பை நடத்திய இடங்கள் யாவும் பசுமை போர்த்தியிருந்தன. இயற்கையின் வனப்பை ரசித்தபடி இரு தினங்கள்!! இரண்டாவது தினத்தில் இரவுப் படப்பிடிப்பை நடத்தித்தான் முடிக்க வேண்டிய நிலையை மழை உண்டாக்கிவிட, சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தினால் குடந்தையூரானும் இவனும் மட்டும் குழுவினரிடம் விடைபெற்று விடுதி அறைக்குத் திரும்பினார்கள். சரவணர் ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட, இவன் சற்று சிரமபரிகாரம் செய்து கொண்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து ஒலவக்கோடு சென்று மின்வண்டியைப் பிடித்தான். இரண்டு நாள் வேலை செய்த அசதியில் கண்கள் சொக்க, தன் இருக்கையைத் தேடி இவன் அடைந்தபோது, இப்போதும் நீ அபாக்கியவான் தானடா என்று கூறி உரக்கச் சிரித்தது விதி. எதிர் மேல் இருக்கையில் இப்போது ஆஷைக்குப் பதிலாக ஒரு ட்ராக்டர் படுத்துக் கொண்டு மூன்றாவது கியரில் ஓடிக் கொண்டிருக்க, விதியின் கூற்றை ஆமோதித்து அவ்வ்வ்வ்வியபடி சென்னை திரும்பினான் இவன்.

POET THE GREAT என்கிற அந்தக் குறும்படம் காண… இங்கே க்ளிக்குக.



  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube