Wednesday, March 26, 2014

மின்னல் திரை : குக்கூ

Posted by பால கணேஷ் Wednesday, March 26, 2014
ரு காதல் கதை திரைப்படமாகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்...? காதல் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு வரும். ‘எதை நம்பிடா உனக்கு பொண்ணு குடுக்கறது?’ என்ற கேள்வி வரும். . காதலி தன் வீட்டில் சத்யாக்கிரகம் செய்து காதலுக்காக போராடுவார். கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைத்து (பலசமயம் ஒரே பாடலில்) பணம் சம்பாதித்து விடுவார். அதைத் தந்து காதலில் வெல்வார். அல்லது அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்து விட்டு காதலியுடன் ஊரைவிட்டு ஓடுவார் அல்லது காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளும். இவற்றுக்கிடையில் அவர்கள் காதலுக்கு பலர் உதவுவார்கள். கதாநாயகன் சிலபல சண்டைகளைச் செய்வார். கனவில் டூயட் பாடுவார். ----இவையெல்லாமே (இன்னும் நிறைய இருக்கு) பொதுவாகக் காதல் படங்களுக்கான பொதுவான ஃபார்முலா என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றில் பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டு, கதாநாயகனும் நாயகியும் பார்வைத்திறன் அற்றவர்கள் என்கிற வித்தியாசமான பின்புலத்தால் நல்ல படம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம்.

+ தன் ‘வட்டியும் முதலும்’ கட்டுரைத் தொடர்கள் மூலம் சாதாரண மனிதர்களின் உணர்வுகளைத் தொட்ட அசாதாரண எழுத்துக்களால் கவனம் ஈர்த்தவர் ராஜு முருகன். அவரின் முதல் திரைப்படமான இதில் பார்வையற்றவர்களின் உலகத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். நிறத்தை இளையராஜாவின் பாடல்கள் மூலம் அறிவதாக நாயகி சொல்வது, நாயகன் மற்றும் அவரின் நண்பர்களின் அனாயாசமான ஹாஸ்யப் பேச்சுகள் என்று பல விஷயங்களை நுணுக்கமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

- கதாநாயகன் தன் காதலிக்காக ரோட்டில் தாறுமாறாகச் செல்லும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் (பலரின் சாவுகிராக்கி போன்ற திட்டுகளைத் தாங்கி) ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று. இந்தப் படத்தில் பார்வையற்ற ஹீரோ அதைச் செய்கிற அரிய காட்சிதனைக் கண்ணுற என்ன புண்ணியம் செய்தனை யான்!

+ சந்திரபாபுவை நினைவுபடுத்துகிற ஒரு கேரக்டர் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம. அதில் நடித்துள்ளவரின் இயல்பு மீறாத அருமையான நடிப்பு, எம்.ஜி,ஆராக நடித்தவர் படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் நடமாடுவது (வாத்யார் வேஷம் போட்டதாலயோ என்னவோ நாயகன் கஷ்டத்தில் இருக்கும்போது தன் தங்கச்சங்கிலியை தானம் வழங்குகிறார்) இப்படி இயல்பான நடிப்பை நடித்தவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார் இயக்குனர். அவரே கதைசொல்லியின் கதாபாத்திரம் ஏற்று நடிததிருக்கும் உத்தியும் நன்று. நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் என்பவர் நன்றாகவே செய்திருக்கிறார். எனினும் நடிப்பில் அவரைவிட அதிகம் ஸ்கோர் செய்வதென்னவோ நாயகியான மாளவிகாதான்.

- 3 லட்ச ரூபாயுடன் காதலியின் அண்ணனைச் சந்திக்க வரும் நாயகனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து பின் இன்ஸ்பெக்டர் அவனை தன் பைக்கிலேயே சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிராப் செய்து, அவன் பணப்பையை அவரிடத் தர, பார்வையுள்ள நமக்கே அந்தப் பணத்தை எண்ண பல நிமிடங்கள் பிடிக்கும் என்ற நிலையில் பார்வையற்ற நாயகன் அதை சில விநாடிகளிலேயே எண்ணி. “சார் அம்பதாயிரம் குறையுது” என்று கூவியபடி சிலஅடி தூரமே சென்றுவிட்ட அவரைத் துரத்துகிறான். அடாடா...! அதேபோல க்ளைமாக்சில் வேகமெடுத்து ஓடும் ரயிலிலிருந்து குதிப்பதும், பிளாட்பாரக் கடைகளில் இடித்தும்., தூணிலும் இடித்துக் கொண்டு வரும் காட்சி இருக்கிறதே... நானும் உணர்ச்சிவசப்பட்டு அருகிலிருந்த கோவை ஆவியின் தோள்களில் முட்டிக் கொண்டேன்.

+ பார்வைத்திறன் குறைந்தவர்கள் சிலரிடம் தங்களின் அந்தக் குறையைப் பயன்படுத்தி பணம் சேர்க்கும் குணம் இருக்கும். வேறு பலரிடம் தங்கள் ஊனத்துக்காக மற்றவர்கள் அனுதாபப்படுவது பிடிக்காத மிகை தன்னம்பிக்கை இருக்கும். கதாநாயகி நாயகன் செய்யும் உதவியை ஏற்க மறுப்பது. தன் கைடின் காதலி தரும் பழந்துணிகளை புறக்கணிப்பது ஆகிய காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜுமுருகன். அதேபோல் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவையுணர்வை நாயகனின் நண்பனின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பது அருமை. பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறது அவரின் நகைச்சுவை. குறிப்பாக.. சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.

- நாயகனைப் போல ஷார்ப்பான கேட்கும் திறன் தனக்கு இல்லையென்பதால் அவனுக்கு செண்ட் வாங்கித் தந்து அதன் மூலம் அவனை அடையாளம் காண நினைக்கிறாள் நாயகி. நாயகன் அந்த செண்ட்டை நண்பர்களுக்கும்., ஸ்டேஷன் மாஸ்டருக்கும் அடித்துவிட, அனைவரிடமும் அவனாக எண்ணிப் போய் பேசி ஏமாறுகிறார் நாயகி. க்ளைமாக்ஸ் காட்சியில் ரயில் நிலையத்தில் நாயகியைத் தேடியலையும் நாயகன் அவள் கிடைக்காத ஏமாற்றத்தில் படிக்கட்டில் நின்று அவர்களின் காதல் சந்திப்புக் குறியீட்டின்படி வாக்கிங் ஸ்டிக்கால் பலமாகத் தட்டுகிறான். பல கஷ்டங்களைச் சந்தித்த அந்த காதலர்கள் பிரிவதைப் பொறுக்காத வாயுதேவன் பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒலிகளைப் புறக்கணித்து நாயகியின் செவிகளில் அந்த ஒலியை மட்டும் கொண்டு சேர்க்கிறார். நாயகி மற்ற சப்தங்களால் துளியும் பாதிக்கப்படாமல் (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?) ஒலி வந்த இடத்தைக் கண்டடைந்து நாயகனைத் தொட்டுணர்ந்து கட்டித் தழுவ, படம் முடிகிறது. (ஹப்பாடா!)

+ இயல்பான, ரசிக்கத்தக்க வசனங்கள் படத்தின் பலம். “செல்போன் இல்லாத காலத்துல காதலிச்சவன்லாம் புண்ணியம் பண்ணவங்கடா” என்கிற வசனத்திற்கு தியேட்டரில் பலத்த சலசலப்பு. இதுபோல படம் நெடுகிலும் ரசிக்க வைக்கிற வசனங்கள் அருமை. உறுத்தாத பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். நள்ளிரவில் ஹைவேஸில் தவிக்கும் கதாநாயகிக்கு ஆதரவு தந்து வேனில் அழைத்துச் செல்பவர் (இதற்குமுன் பார்த்த படங்களின் பாதிப்பில்) அவளுக்குத் தொல்லை தருபவராக மாறுவார் என்ற நம் எண்ணத்திற்கு மாறாக அவளுக்கும் நாயகனுக்கும் உதவுபவராக அவரைக் காட்டியிருக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் அருமை.

- “நான் போகிறேன்” என்று கோபித்துக் கொண்டு செல்லும் நாயகி அசால்ட்டாக மும்பை வரை போய் விடுவதும். அங்கே கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து சேவை செய்யும் பணி அவளுக்குக் கிடைப்பதும்., மும்பையில் அவளைப் பார்த்ததாக ராஜுமுருகன் தகவல் தந்த அடுத்த நிமிடம் நாயக்ன் மும்பை ரயிலைக் கண்டறிந்து பயணிப்பதும்.... நடைமுறையில் எத்தனை தூரம் சாத்தியமோ தெரியவில்லை...!

“மொத்தத்துல என்னதான்யா சொல்ல வர்றே?” என்று கேட்பவர்களுக்கு...! ‘இதுபோன்ற வித்தியாசமான படங்களை உற்சாகப்படுத்தினா தான் நல்ல படங்கள் நிறைய வரும்’ என்று என் நண்பரொருவர் சொன்னார். புதிய பாட்டிலிலில் பழைய கள்ளையே தந்திருப்பதை வித்தியாசம் என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சமுதாயத்தைக் கெடுக்கிற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பதாலேயே, க்ளிஷேக்களைத் தவிர்ப்பதாலேயே... (அப்படியும் சொல்ல முடியாதபடி ஏகப்பட்ட அபத்தங்கள் படத்தில்) ஒரு படம் நல்ல படமாகி விடாது ஒருநாளும். ஆக, என் பார்வையில்... முதல் பாதி ஓ.கே. பின் பாதி ஐயையோ! (என்ன பார்வைடா உன் பார்வைன்னு யாரும் பாயாதீங்க. உலகசினிமாக்களைப் பார்த்து உயர்தர ரசனை வளர்த்துக் கொண்ட அறிவாளியல்ல நான். உள்ளூர் சினிமாக்களை விசிலடித்துப் பார்க்கும் பாமர ரசிகன் நான். என். பார்வை இந்த லட்சணம்தான்!.)


Saturday, March 15, 2014

சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.

 இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.

வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.

த்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

டம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்!  படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)

நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!

ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!

Friday, March 7, 2014

கதாநாயகனின் கதை!

Posted by பால கணேஷ் Friday, March 07, 2014
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.

இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.

அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.

இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி,  வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!


Monday, March 3, 2014

மொறு மொறு மிக்ஸர் - 24

Posted by பால கணேஷ் Monday, March 03, 2014
‘‘அப்போது எனக்கு 17 வயது. பம்பாயில் ஹெமு அதிகாரி நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். முகாமின் மற்ற விவரங்களைக் கவனித்துக் கொண்டவர் தாராபூர். கடும் வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்குப் பயிறசி நடக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. இடையில் ஓய்வும் கிடையாது. முதல் நாள் பயிற்சி முடிந்து பகல் உணவுக்கு உட்கார்ந்தோம். இரண்டு சப்பாத்திகளும், கொஞ்சம் காய்கறிகளும் பரிமாறினார்கள். எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட, சாப்பிட மறுத்தேன். 

நான் வடக்கில் இருந்து வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். வேகமாகப் பந்து வீசுகிறேன். பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அதுமாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்! தாராபூர் என்னிடம் சீறிக்கொண்டு வந்தார். ‘நாங்கள் தரும் சாப்பாடு உனக்குப் பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். ‘இல்லை சார். நான் வேகமாகப் பந்து வீசுபவன். எனக்கு நிறையச் சாப்பாடு வேண்டும்' என்றேன். தாராபூர் ஏளனமாகச் சிரித்துவிட்டு, கிண்டலாகச் சொன்னார்: ‘இந்தியாவில் ஃபாஸ்ட் பௌலர்களே கிடையாது!'. பொங்கி வந்த கண்ணீரை நான் அடக்கிக் கொண்டேன். இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு வேகப்பந்து வீச்சாளராகத் திகழ வேண்டும் என்று உறுதி கொண்டேன். நன்றி தாராபூர்! அன்று எனக்கு நீங்கள் மிகப்பெரிய சேவை செய்தீர்கள்!"

--- இப்படித் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனான கபில்தேவ் நிகாஞ்ச். அடைந்த அவமானத்தை முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்ட இவரின் மன உறுதியை நாமும் கைக்கொள்ள ஆசைப்படுவோமாக!

=================================================

நாம் பார்க்கும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு என்று ஒன்று இருககிறது (தானே?). கலாசசாரத்துக்கு ஒவ்வாத, ஆபாசக் காட்சிகள் வந்தால் ‘ஏ’ என்கிற சர்டிபிகேட் தரப்படுவதன் மூலம் ‘‘அலர்ட் ஆகிக்கங்கப்பா" என்கிறார்கள். அசைவம் சாப்பிடாதவர் நீங்கள் எனில், நீங்கள் வாங்குகிற ஆயில் முதல் பிஸ்கட் பாக்கெட் வரை சுத்த சைவமாக இருந்தால் பச்சையில் ஒரு வட்டத்தை அச்சிட்டு, ‘‘அசைவம் கலக்கலைப்பா. சாப்பிடலாம் நீங்க" என்கிறார்கள். இபபடி எலலாத்துலயும் உஷாரா இருந்து வாங்குற நம்மால எளவு... நாம படிக்கிற புத்தகத்துல சூதானமா இருந்து வாங்க முடியலையேப்பு...! தலைப்பையும், அவங்க தர்ற பில்டப்பையும் நம்பி ஏதோ நாலு நல்ல விஷயம் எழுதியிருப்பாங்கன்னு நெனச்சு வாங்கிப் படிச்சோம்னா... ‘சமூகத்துல நடக்காததையா எழுதிட்டோம்'னு ஒரு சாக்குச் சொல்லிட்டு சாங்கோபாங்கமா பாலுறவுகளையும், பெண்களின் உறுப்புகளை அப்பட்டமாக வர்ணித்தும், ஒருபாலின :உறவுகளை விரிவாகவும் எழுதித் தொலைக்கிறான்கள். இந்த மாதிரி புத்தகங்கள்ல அட்டைப்படத்துல ஒரு நீலக்கலர் கத்திரிக்கோலை போடணும்னு யாராச்சும் சட்டம் கொண்டு வந்தீங்கன்னா.... ரெம்பப் பேரு பொழச்சுப்போம் சாமிங்களா...!

=================================================

டாக்டர் காந்தன் ரொம்பவும் நல்லவர் என்று அவ்வூரில் நல்ல பெயர் எடுத்தவர். கொஞ்சம் வயசுதான். முப்பபதுக்குள் இருக்கும். ஜனங்கள் அவரிடம் ரொம்ப மரியாதை வைத்திருந்தனர். அவர் டாகடர் தொழிலை ஆரம்பித்து இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளாகவே அதில் விரக்தியடைந்து, அத்தொழிலை விட்டுவிட்டு இளம் சன்னியாசியைப் போல அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார். அதற்குக் காரணம்... அவரிடம் வைத்தியம் செய்து கொண்ட நோயாளிகள் யாரும் அவருடைய திறமையை மற்றவர்களிடம் சொல்லி விளம்பரப் படுத்தாமலேயே பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

--- ‘மாயமாய் மறையும் மந்திர மனிதன்' மர்மநாவலில் சிரஞ்சீவி. (நோ.. நோ... நீங்க நினைக்கிற தெலுங்கு நடிகரில்லை. பழைய தமிழ் எழுத்தாளர் இவர்!)

=================================================

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது ‘புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது' ‘மது அருந்துவது உடல்நலத்தக்குக் கேடானது' என்று திரைப்படங்கள்/தொலைக்காட்சிகளில் அறிவிப்பை திரையில் ஓர் ஓரமாக மின்ன வைக்கிறார்கள் சமீபகாலமாக. அந்நாளைய படங்களில் சிவாஜியோ, சுருளிராஜனோ சிகரெட் பிடித்தால்கூட இப்போது இந்த அறிவிப்பைச் சேர்த்துத்தான் தொ.கா. ஒளிபரப்புகிறது. இந்த சமூக அக்கறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. திரைப்படம்/தொலைக்காட்சி அன்பர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் வேறுசில அறிவிப்புகள்:

* கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்... ‘வன்முறை வெகுஜன நலத்துக்குக் கேடானது!'
 
* சீரியலில் மாமியாரும் மருமகளும் மற்றொரு மருமகளைத் தீர்த்துக்கட்ட திட்டமிடும் சமயங்களில் அல்லது ‘அவளைப் பழிவாங்கி நடுத்தெருவுல நிறுத்தாம விடமாட்டேன்டா' என்று அடித்தொண்டையில் வில்லன்/வில்லி கதாபாத்திரங்கள் அலறுகையில்... ‘சதி செய்தல் குடும்ப நலத்துக்குக் கேடானது!'
 
* ஒரு இளைஞனும், இளைஞியும் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதலித்து ஆடிப் பாடும் காட்சிகளில்... ‘காதலிப்பது பெற்றோர் நலத்துக்கு எதிரானது!'
 
* அடியாட்கள் ஒருவனை வெட்டி ரத்தம் தெறிக்க கசாப்பு போடும் காட்சியில் (அ) கதாநாயகன் வில்லன் கும்பலை கதறக் கதற வெட்டித் தள்ளுகையில்... ‘ரத்தவெறி சிறுவர் நலனுக்கு எதிரானது!'
 
--- இதுமாதிரி இன்னும் வேற ஏதாச்சும் போடலாம்னு உங்களுக்குத் தோணுதா? இக்கட நேனு வெய்ட் சேஸ்தானு! செப்பண்டி!

=================================================

ரு பெரிய கோடீஸ்வரர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் இளையமகன் சந்தேகிக்க, அவன் நண்பன் துப்பறிய முயல, இறந்தவரின் அறைக்கு நேர்கீழே தோட்டத்தில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டெடுக்கிறான். டாக்டர் அவை ஒரு மனித விரலின் எலும்புகள் என்கிறார். சிலபல விசாரணைகளுக்குப் பின், பிறிதொரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் குரு எனப்படும் துறவியின் சமாதியில் தோண்டுகையில் எலும்புக்கூட்டில் ஒரு விரல் இல்லை. கண்டெடுத்த விரல் துண்டுகளை அங்கு ஒட்டிப் பார்க்க கச்சிதமாகப் பொருந்துகிறது. அங்கே மறந்து வைத்துவிட்ட வாட்ச்சை எடுக்க நள்ளிரவில் தன்னந்தனியே செல்லும் துப்பறியும் நண்பனுக்கு முன்வந்து அந்த எலும்புக்கூடு "என் சமாதியை ஏன் தோண்டின?" என்று கேட்க, அதிர்ச்சியில் ரத்தம் கக்கி இறக்கிறார் அவர். தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டு பேய் பலர்முன் தென்பட்டு பயமுறுத்துகிறது.

--- என்னன்னு புரியலையா? ‘ஒரு விரல்'ங்கற த்ரில்லர் திரைப்படத்தோட கதையிலதான் இதெல்லாம் வருது. இரண்டு மணி நேரம் ஓடற இந்தப் படத்துல ரெண்டே பாட்டுதான். நல்ல விறுவிறுப்பான கதையோட்டமும் எதிர்பாராத முடிவும் அசர வெச்சது. இந்த மாதிரிக் கதைகள்ல கடைசியில ‘இவனா குற்றவாளி?’ங்கற ஆச்சரியமும், அவன் செய்த விதத்தை விவரிக்கும்போது ‘அட!’ என்கிற வியப்பும் வந்தால் படத்துக்கு வெற்றி எனலாம். அந்த வகையில் இந்தப் படம் வெற்றிப்படம்தான்! என் சின்ன வயசுல நான் பார்க்கிற திரைப்படங்கள்ல ‘ஒருவிரல் கிருஷ்ணாராவ்’ன்னு டைட்டில்ல பாக்கறப்ப ‘இந்த ஆள் மட்டும் எப்படி ஒரு விரலோட பிறந்தார்?’ன்னு வியந்ததுண்டு.  எங்கம்மா அந்த நபரை திரையில இவர்தான்டான்னு அறிமுகப்படுத்தினப்ப அவர் கைகள்ல அஞ்சு அஞ்சு விரல்கள் இருக்கறதப் பாத்துட்டு வியந்ததும், அம்மா தலையில தட்டி ‘‘ஒரு விரல்ங்கற படத்துல நடிச்சதால அந்தப் பேர்டா’’ன்னு சொன்னதும் இப்ப நினைச்சா சிரிப்பு வருது. அதேமாதிரி வழுக்கை மண்டையோட அவரைப் பார்த்துட்டு, இந்தப் படத்துல (முதல் படம்ங்கறதால) இளமையா தலைமுடியோட பாக்கறப்பவும் சிரிப்புத்தான் வந்தது.

ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டிருந்த இந்தப் படத்தோட டிவிடி சமீபத்திய வேட்டையில கிடைக்கவும் உடனே வாங்கிப் பாத்துட்டேன். தேங்காய் சீனிவாசனுக்கும் இது முதல் படம்ங்கறதும், அவர் மிகமிகமிக இளமையா வர்றதும் எதிர்பாராத ஆச்சரியங்கள். அவரின் கேரக்டரிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது மற்றொரு ஆச்சரியம். த்ரில்லர் பட ரசிகர்களாக நீங்க இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம். (இதவெச்சு ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கலாம். சிஷ்யனைப் பாத்தாவது கத்துக்கடா கணேஷா! --- சிரிக்குது மனஸ்!)

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube