Thursday, February 13, 2014

மீபத்தில் ‘கரைசேரா அலை' அரசனின் த்ங்கை திருமணத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு பஞ்ச(த்தில் அடிபடாத)பாண்டவர்களாக நான், சீனு, ஸ்.பை., கோவை ஆவி மற்றும் ரூபக் (கார் கொணர்ந்த வள்ளல்) ஆகியோர் குடுமியான் மலை, நார்த்தா மலை, சித்தன்ன வாசல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஸ்தலங்களுக்கு விசிட் அடித்தோம். இவை பற்றிய பய(ண)க்குறிபுகளை சீனு தன் தளத்தில் திடங்கொண்டு விளக்கி வருவதால் இங்கே சில சிப்ஸ்களை மட்டும் நான் தூவுகிறேன்.

* மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை சாப்பிடாததால் நந்திவரத்துக்குச் சற்று முன்னால் ‘காரைக்குடில்' என்ற உணவகத்தின் முன் காரை நிறுத்தினார் ரூபக். உணவகத்தின் வாசலில் அருவி கொட்டுவதைப் போல் அமைத்து, அருவியின் அருகில் குகையின் வாசல் போல அமைத்திருந்தார்கள். உள்ளே போய்ப் பார்த்தால், மரத்தை வெட்டித் தள்ளியபின் அதன் அடிப்பாகம் இருக்குமில்லையா... அதைப் போல சேர்களை அமைத்திருந்தார்கள். கை கழுவ வாஷ் பேஸினுக்குப் போனால்... ஒரு பீப்பாயைக் கவிழ்த்து வைத்து அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி செட்டப். சரிதான்... உடம்பில் இலை தழைகளைச் சுற்றி அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டு ‘ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பக ஜிம்பா' என்றபடி வெயிட்டர் (வெயிட்டி வந்தால் நல்லா இருக்குமேன்னு ஜொள்ளு விட்டது ஒருபக்க மனசு) வருவாரோ என்று எதிர்பார்த்தேன். கையில் கால்குலேடடர் போன்ற வஸ்துவுடன் நாகரீக யுவர்கள்தான் வந்தார்கள்... சரி, நாம் ‘கிவ்'வி வெச்சது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு ஆர்டர் பண்ணினோம். உணவு வகைகள் ஏமாற்றாத நல்ல ருசியில் இருந்தது ஒரு பெரும் ஆறுதல்.

* ‘ரூபக்கின் கார் வலிமையானதா, இல்லை நாங்கள் வலிமையானவர்களா தெரிந்து கொள்கிறோம்’ என்று அஃறிணைகள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன போலிருக்கிறது! திடீரென்று ஒரு பைரவர் ரூபக்கின் காரில் மோதி, ரூபக்கைத் திடுக்கிட வைத்து, ‘உன் கார்தான் பெரிசு, எனக்கு வலிக்குதுப்பா' என்று தன் பாஷையில் கத்தியபடி ஓட்டமெடுத்தார். பிறிதொரு ஏரியாவில் அசால்ட்டாக ஒரு ரிஷபர் குறுக்கிட்டு ரூபக்கின் பொறுமையைச் சோதித்தார். தலைநகரம் தவிர மற்றப் பகுதிகளில் தமிழ்நாடெங்கும் மிருகங்களின் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது போலும்! எதிர்பாராத இந்த நிகழ்வுகளெல்லாம் எங்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது - ரூபக்கைத் தவிர! ஹி... ஹி...!

* பல பத்திரிகைக்காரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ‘இணையத்தில் எழுதுபவர்கள்' என்றால் ஒரு எள்ளல் இருப்பதைக் கவனித்ததுண்டு நான். என்னைப் பொறுத்தவரையில் இணையத்தில் எழுதுகிற ஒருவனாக நான் இருப்பதில் மிகவும் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். ஏனென்றால்... மாமனாகவோ, மச்சானாகவோ இல்லாமல்... இணைய நண்பர்கள் என்பதற்காக எங்களை வரவேற்று, உபசரித்து நட்பைக் கொட்டிய ‘சிவகாசிக்காரன்’ ராம்குமார் போன்றவர்கள் எமக்குக் கிடைப்பது இணையத்தின் வலிமையாலன்றோ...! உண்மையில் சிவகாசிக்காரனை முதன்முறையாகச் சந்திக்கப் போவதால் எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஏனெனில் நண்பர்கள் அனைவருக்கும் அவரின் எழுத்து பரிச்சயமாகியிருக்க, நான் அவரின் எழுத்துக்களில் ‘நாய்' பற்றி எழுதிய ஒரு பதிவு தவிர வேறெதுவும் படித்ததில்லை. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் எனக்குள். ‘‘மின்னல் வரிகள் படிச்சதுண்டா நீங்கள்?" என்று நான் ராம்குமாரிடம் கேட்க, ‘‘எதுவுமே படிசசதில்ல..." என்று பதிலிறுத்து என் வயிற்றில் பாலை வார்த்தார் அவர். ‘நண்பேன்டா' என்று அவரை கை குலுக்கி கட்டிக் கொண்டேன். ஹா... ஹா... ஹா...!

* நார்த்தா மலையை நாங்கள் அடைந்தபோது நடுப்பகல் ஒன்றரை மணி இருக்கும். அந்த படைபடைக்கும் வெயிலில் மலையேற விரும்பவில்லை என்று நானும் ஆவியும் காரிலேயே தங்கிவிட முடிவு செய்ய.. மற்ற மூவரும் மேலே போய்ப் பார்த்து வந்தார்கள். வந்ததும் ‘‘ச்சே...! மிஸ் பண்ணிட்டிங்க நீங்க. அருமையான இடம். வந்திருக்கணும்..." என்றெல்லாம் பசங்க (எங்க வ.எரிச்சலை கிளப்பணும்னே) செம பில்டப் கொடுத்தார்கள். ‘ஹி... ஹி... ஹி... இதுமாதிரி நெறைய பில்டப்பப் பாத்திருக்கோம்ல நாங்க' என்று நானும் ஆவியும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை சீனுவின் பதிவில் படிக்க அவலுடன்... ஸாரி, ஆவலுடன் காத்திருக்கிறேன்!

* கங்கைகொண்ட சோழபுரம் நிறையவே பிரமிப்பைத் தந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்கதாக, சோழர் காலத்தியதாக இருந்த போதிலும் நேற்றுச் செதுக்கியவை போல சிற்பங்கள் அப்படி அழகாக இருக்கின்றன. ஆலயம், கோட்டையைச் சுற்றிலும் அழகாக புல்வெளி வளர்த்திருப்பதால் வெயிலின் கடுமை தெரியவில்லை. நாங்கள் சென்றது முகூர்த்த தினமாக இருந்ததால் கல்யாண ஜோடிகளும், துணையாக வந்த நிறைய ‘அம்மணி’களும் பார்வைக்குக் குளிர்ச்சி தந்தார்கள். ஹி... ஹி...! ஒவ்வொருவரின் காமிராக்களிலும் சலிக்கும் வரை புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளிவிட்டு (அட, கோயிலை, சிற்பங்களைத் தாங்க...) புறப்பட்டோம்.

* வார்த்தைகளை உபயோகிப்பதில் படுசிக்கனத்தைக் கையாளும் ஸ்கூல் பையன்(ர்?) இந்தப் பயணத்தில் கொஞ்சம் பேசியும், என்னை தூங்கும் சமயத்திலும், டைஐஐஐட் குளோசப்பிலும் தன் காமிராவால் சுட்டு, அராஜகனாக அவதாரமெடுத்து அசர வைத்தார். (எலேய்... தப்பித் தவறி எதையும் பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிராத... இங்க கொள்ளைப் பேருக்கு உன்னால ஹார்ட் அட்டாக் வந்துரும்டியோய்...!) மணிரத்னத்தின் பட ஹீரோக்கள் மாதிரி பேசுகிற ரூபக்கிடமும் இப்போது சற்று முன்னேற்றம் - பேசுவதில்! இவையெல்லாம் பயணம் எங்களுக்குத் தந்த அனுகூலங்கள்!

* ஆவி என்றால் மிருகங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. சித்தன்னவாசலில் ஆவியின் மீது பாசம் கொண்டு அவரைத் துரத்தியது ஒரு ஆஞ்சநேயர் அம்சம்! அரியலூரிலோ தனிமையானதொரு தோப்பில் இயற்கையன்னையின் மடியில்(?) அரசன் எங்களுக்கு மதிய விருந்து படைக்க, தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், ஆவியின் முதுகுக்கு வெகு பின்னால், ஏதோ நீண்டநாள் நண்பர் போல நாக்கைத் தொங்கப் போட்டபடி வந்து அமர்ந்தார் ஒரு பைரவர். நாங்கள் அதைக் கவனித்துச் சொல்ல, திரும்பிய ஆவி அத்தனை அருகில் ‘நண்பரை’(!) எதிர்பார்க்காததால் ஜெர்க் ஆனார். ஹா... ஹா... ஹா...!

* புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி, பைபாஸ் ரோடைப் பிடித்த சமயத்தில் அரியலூருக்கு எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற குழப்பம் வந்தது. அப்போது சிவகாசிக்காரன், ‘‘அங்க ரெண்டு பொண்ணுங்க போவுது, அவங்ககிட்ட கேளுங்கப்பா..." என்று தூண்ட, முன் இருக்கையிலிருந்த ஆவி, ஜன்னலின் வெளியே தலைநீட்டி வழி கேட்க, ‘‘தெரியாது" என்ற அந்தப் பெண்களில் ஒருத்தி, ‘‘நமக்கே இங்க ஒரு மண்ணும் தெரியாது. இதுங்க நம்மகிட்டப் போயி வழி கேக்குது பாரு..." என்று தன் தோழியிடம் சொன்னது காருக்குள்ளிருந்த எங்களுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்க, சிவகாசிக்காரரின் திருமுகத்தில் சற்றே அசடு வழிய, படுகுஷி எனக்குள்! மத்தவங்க பல்பு வாங்கினா, நமக்கு எப்பவும் குஷிதானே..! அப்புறம் சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்பட்ட ஒரு ஆட்டோக்காரர் ஆபத்பாந்தவனாக வழிசொல்லி உதவினார்.

மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது இந்தப் பயணம். ஊருக்குத் திரும்பியதுமே ஆவியின் ‘ஆவிப்பா’ வெளியீட்டு விழா நடந்தது. அதைப் பற்றி பின்னர் ஆவி விரிவாக எழுதுவார் (என்று நம்புகிறேன்).

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube