Wednesday, March 27, 2013

ஆனானப்பட்ட கணேஷ்! (சிறுகதை)

Posted by பால கணேஷ் Wednesday, March 27, 2013
ல்லூரியின் இரண்டாமாண்டு துவங்கிய இரண்டாம் நாள்!  "மச்சி என்ன பிகருடா அவ... அவள டாவடிக்கிற நம்ம தினேஷ் மெய்யாலுமே கொடுத்து வச்சவன்டா, பொறந்தா அவன மாதிரி கன்னிராசிக்காரனா பொறக்கனும் " கிளாஸ் வாசல்ல நின்னு எவனையோ கடல போட வச்சிட்டு இருந்த ரேவதியப் பார்த்து ஜொள்ளிட்டு இருந்தான் நந்தா. அந்த மன்மதனே பார்த்தாலும் ஜொள்ளுமளவுக்கு ரேவதியாகபட்டவள் சூப்பர் பிகர்களையே பொறமை கொள்ளச் செய்யும் சூப்பர் பிகர்!

கிளாசுக்கு வெளியே ஆரம்பித்த கடலை வாசம் அறை முழுவதையும்  நிறைத்திருக்க, அது யாரை கடுப்பேற்றியதோ இல்லையோ, எங்கள் வாத்தியார் கிறிஸ்டோபரை அதிகமாய் வெறி ஏற்றி இருந்தது.   வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரும் ரேவதியுடன் ஏதோ ஒரு பாரின் லொக்கேசனில் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், நான் மட்டும் ரேவதியை ஒருவித வெறுப்பு கலந்த உணர்வுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த தினேசையும் மணியையும் பார்த்தேன், ஞாயிறு மதியத்தில் சரவணபவனில் காலி டேபிளைப் பிடித்து விட்டவர்கள் மாதிரி என்னைப் பார்த்து அகலமாகச் சிரித்து என் கடுப்பை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
 
நான் கணேஷ்! கணேஷாகப் பிறந்த மற்றவர்களுக்கும் எனக்கும் சிறிதாவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, என் தாத்தாவும் அவரின் புத்திரனும் எனக்கு வைத்த பெயர் பாலகணேஷ். இருந்தும் அனைவரும் வித்தியாசமே இல்லாமல் "கணேஷ்", "கணேஷ்" என்று விளித்துத் தொலைப்பதால் "உள்ளேன் அய்யா" சொல்லும் பொழுது மட்டும் என் பெயர் பால கணேஷ், நேரம் போகாமல் எதையாவது கிறுக்கித்தள்ளும் பொழுது ஒரு சிறுவித்தியாசத்திற்காக ‘பா கணேஷ்’, மற்ற நேரங்களில் கணேஷ்.  என்னைய நீங்க பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, ஆனா என்னைப் போல் ஒருவரையாவது நிச்சயம் பார்த்திருக்கலாம், உடனே சென்று கண்ணாடியில் ஒருமுறை உங்களை உருப்படியாய்ப் பாருங்கள், நீங்கள் என்னைப் போல் இருப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது. நான் வளர வேண்டிய வயதில் காம்ப்ளான் தன் பணியை செய்ய மறந்ததால் என் உயரம் ஐந்தே கால் அடி, சமீபத்தில் எடை பார்த்த பொழுது 55கி. கண்ணாடி போட்டிருப்பேன், எப்போதும் கட்டம் போட்ட மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, எப்பொழுதாவது பூ போட்ட சட்டை. இப்படி எல்லாம் என்னுருவக் குறியீடுகளைச் சொல்வதால் எனக்கு வயதொன்றும் 55 இல்லை. சொன்னால் நம்ப மாட்டீங்க... இரண்டாமாண்டு கல்லூரி மாணவன் நான். என்ன... என்ன சிரிப்பு? என்னைக் கல்லூரி மாணவனாக நினைத்துப் பார்க்க உங்கள் கற்பனை இடம்தர மறந்தால் பிழை என் மீது இல்லை, சூடம் அடித்துச் சத்தியம் செய்வேன்- பிழை உங்கள் கற்பனையில் தான் என்று!

"டேய் கணேஷ்! ஏண்டா அவள பாத்து இப்டி மொறைக்கற? ஒரு பிகர எப்டி சைட் அடிக்கணும்னு கூட தெரியாத பயடா நீ"  இந்த மாதிரி பன்ச் டயலாக்லாம் நந்தா சொல்லி நான் கேக்கணும்ன்னு என்னோட தலையெழுத்து. காரணம், நானாவது சைட் அடிக்கறதுக்காக கிளாஸ் வாசல் வரைக்கும் போவேன். ஆனா இவனோ... முன்னாடி ஒரு சூப்பர் பிகர் வந்து நின்னாக்கூட "ஹலோ, கொஞ்சம் தள்ளி நில்லுங்க போர்ட் மறைக்குது, நோட்ஸ் எடுக்கணும்"ன்னு சொல்லி வெறுப்பேத்துற பய, அதனால தான் கடியாகுது மை லார்ட். இன்னும் நான் அவள வச்ச கண் வாங்காம வெறி கொண்டு மொறச்சு பார்த்துட்டுதான் இருந்தேன்.

"டேய் சொல்லுடா, ஏன்டா தினேஷ்கூட பாலா படத்தை மூணு ஷோவும் தொடர்ந்து பாத்த மாதிரி சீரியஸா இருக்குறான்? அதுசரி... தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தானே?", நந்தா கொஞ்சம் சத்தமாவே கேட்டுட்டான், நல்லவேளை... எல்லாரும் ரேவதிய சைட் அடிக்கிறதுல பிசியா இருக்கறதால, யார் காதுலையும் விழுந்த்ருக்காது. ஏன்னா "தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தான?" அப்டிங்கற கொஸ்டின்ல தான் இந்தக் கதையோட ட்விஸ்டே இருக்கு! (சீரியஸா ட்விஸ்ட்லாம் வெப்போம்ல கதையில- கொஞ்சம் அசட்டுத்தனம் தூக்கலா இருந்தாலும்!)

அதுக்காக நீங்க சீரியஸ் ஆகாதீங்க. இந்தக் கதையில நம்ம வாத்தியார் கிறிஸ்டோபர் தவிர மத்த எல்லாருக்கும் காமெடி ரோல் தான். ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல்- நம்ம பவர்ஸ்டார் மாதிரி... ஹி... ஹி...! அப்போ கிறிஸ்டோபர்க்கு என்ன ரோல்ன்னு கேக்கறீங்களா? இதோ என் தலையில சாக்பீச தூக்கி எறியப்போற இந்த ஆளுக்கு வில்லன் ரோல் கொடுக்காம வேற என்ன ரோல் கொடுக்கிறதாம்? வாத்தி கிறிஸ்டோபர், என்னோட நெத்திக்கு குறிபார்த்து எரிஞ்ச சாக்பீஸ் பத்துநாள் பட்டினியாக் கிடந்த நாய் ப்ரெட்டைப் பாத்ததும் பாயற மாதிரி குறி பிசகாம சுர்ருன்னு என் நெத்தியில வெள்ளைத் திலகமிட்டு நொடி நேர வலி கொடுத்துட்டு கீழ விழுந்தது. நான் கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க வீராவேசத்தோட எந்திரிச்சு அவரப் பார்த்தேன். நான் அடிபட்ட காட்சியப் பார்த்து மொத்த கிளாஸும் விழுந்து விழுந்து சிரிக்குது, போதாக்குறைக்கு வெளியில வேற சூப்பர் பிகர்! இந்தாளு கண்டிப்பா எதோ பெரிய டயலாக் விடப் போறாருன்னு மட்டும் என்னோட மனசு சொல்லுச்சு... ஆமா, நா எதிர்பார்த்தது சரிதான்.

"டேய் கணேஷ், ஒரு பொம்பளப் புள்ளையப் போயி சைட் அடிக்கிறியே வெக்கமா இல்ல உனக்கு?"ன்னாரு கிறிஸ்! எங்களால எத வேணா அடக்க முடியும் ஆனா சிரிப்பை மட்டும்... ம்ம்ஹும், முடியவே முடியாது! மணி கொஞ்சம் சத்தமாவே சிரிச்சிட்டான், அவன் கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டேன், மெதுவா எனக்கு கேக்குற மாதிரி சொன்னான், " சரியான லூசுப்பயடா, பொம்பளப் புள்ளைய சைட் அடிக்காம பக்கத்துல இருக்குற அவனையா சைட் அடிப்பாய்ங்க...!"

இந்தாளு இப்படி எதாவது பேசாட்டா தான் அதிசயம். பேச்சுல கொஞ்சம் பெண்மை இருக்கும், அசைவுகள்ள கொஞ்சம் அபிநயம் இருக்கும், அறச்சீற்றம் வரும் போது மட்டும் பெண்மையும் மென்மையும் கலந்த ‘வரலாறா’ இருப்பாரு. ஆனாலும் வாத்தி கொஞ்சம் ரப் டைப்பாமாம்...! அவரே சொல்லிக்குவாரு அப்படி! காலேஜ்ல வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆவுது... அதுக்குள்ள ரெண்டாயிரம் பட்டப் பேரு வாங்கின அபூர்வ சிகாமணி! நமக்கு இப்போ முக்கியம் கிறிஸ் இல்ல, தினேஷும் ரேவதியும், அவங்களோட லவ்வும் தான், அதத் தெரிஞ்சிக்க ஒரு செமஸ்டர் ரிவேர்ஸ்ல போயே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். வாங்க, போகலாம்...!

எல்லாப் பசங்களும் தனக்குன்னு ஒரு பிகர கரெக்ட் பண்ணகூடிய வசந்த காலம் தான் செகண்ட் செமஸ்டர்.  மதியஉணவுக்குப் பின் வகுப்பறையின் வெளியில் அமர்ந்து இயற்கையை(!) ரசித்துக் கொண்டிருந்த நேரம்,  எங்களைக் கடந்தவள் தான் அழகு தேவதை ரேவதி. "யாருடா அவ, இத்தன நாளு நம்ம கண்ணுல படாம போயிட்டா", அவளைப் பார்த்ததும் தினேஷ் சற்றே சுறுசுறுப்படைந்தான் புள்ளிமானைக் கண்ட வேடன் போல் என்பது அனைவரும் படித்து சலித்துப் போன டயலாக் என்பதால் ரேவதியைக் கண்ட தினேஷைப் போல அவளைப் பின் தொடர ஆரம்பித்தான். நண்பனைத் தொடரும் நிழலாக மணியும் அவனுடன் சேர நானோ "இவிங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லடா, ஆவூன்னா ஃபிகரு பின்னாடி போயிருவானுங்க" என்று அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டே நந்தாவின் அருகில் சென்று அமர்ந்தேன். காரணம் நானும் நந்தாவும் ஃபிகர்கள் எங்களைக் கடக்கும் பொழுது மட்டுமே சைட் அடிக்க பிடிக்கும் சோம்பேறிகள் என்பதால்!

முதல் கட்ட முற்றுகையை முடித்த வெற்றிக் களிப்புடன் இருவரும் திரும்பினர், "டேய் கணேஷ்! நீயெல்லாம் சுஜாதா புக் படிக்க மட்டுந்தான்டா லாயக்கு" என்று என்னை கடுப்பேற்றிவிட்டு, ‘‘அவ EEE பர்ஸ்ட் இயர்! எப்புடி... நாங்க கண்டு பிடிச்சோம்ல! என்ன... பேரு தான் கண்டுபிடிக்க முடியல" என்றான் தினேஷ். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த நியுட்டன் போல் லுக் விட்ட தினேஷைப் பார்த்து பாலா சொன்னான் "ப்பூ... இதுக்கு தான் இப்டி அலட்டிகிறியா? அவ பேரு ரேவதி, ஏரியா கிண்டி, வாராவாராம் மவுண்ட் சர்ச்க்குப் போவா, இன்னும் ஆள் இல்ல, டுலெட் தான்" அசால்ட்டாக அவ டேட்டாவை அள்ளி எறிந்தான் அசல் பாலா.  "அவ டுலெட் தான், பட், டூ லேட் இல்ல தானே... மணி! நா முடிவு பண்ணிடண்டா, இந்த தினேஷ் மோதிரம் மாத்திக்கிட்டா அது அந்த ரேவதி கூடத் தாண்டா" எப்படித்தான் இவனுங்களால மட்டும் நிமிஷத்துல ஒவ்வொரு மதத்துக்கும் மாறி, அதுக்குத் தக்கபடி பஞ்ச் டயலாக் பேச முடியுதோ? அட ஆண்டவா...!

பேஸ்புக்கும், மொபைலும் கைக்குள்ளிருக்க, இதற்குப் பின்னான காட்சிகள் அனைத்தும் அவர்களின் காதலின் வேகத்திலும்  வேகமாக நகர்ந்தன. அண்ணலும் ஏர்டெல், அவளும் ஏர்டெல்! பத்து பைசா பூஸ்டர் காதலுக்கு மேலும் மேலும் பூஸ்ட் ஏற்றிக் கொண்டிருந்தது. செமஸ்டர் லீவில் இருந்த நேரம், திடிரென்று ஒருநாள் தினேஷிடம் இருந்து போன், " மச்சி அவ போன் நம்பர மாத்திட்டாடா, பேஸ்புக்குல கூட என்ன அன்பிரண்ட் பண்ணிட்டா, எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையுமே இல்லடா, ஆனா போன ஒருவாராமா அவ என்கூட ஒழுங்காவே பேசல, அதுனால நானும் கோவத்துல இருந்தேன். இதுக்குலாமாடா போன் நம்பர மாத்துவாங்க" அழாத குறை, ஆனாலும் அவன் அழவில்லை, அவன் அழாததால் இந்தக் கதை ஒரு கண்ணீர்க் கதை ஆகாமல் தப்பித்தது தற்செயலே.

என்னதான் அவன் அவளை உயிருக்கு உயிராய் காதலித்ததாய் சொன்னாலும், மணிக்கணக்கில் வருங்காலம் பற்றி பேசியதாய் சொன்னாலும், அந்த உயிர் இருந்த உறைவிடத்து முகவரி கேட்கவேண்டும் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை, அதை துப்பறியலாம் என்று குத்துமதிப்பாய் வண்டிகளில் ஏறி, கிண்டியைச் சுற்றி, தெண்டமாய் அலைந்து முண்டங்களாய்த் திரும்பியதுதான் மிச்சம்! அவள் முகவரி  கண்டுபிடிக்க முடியவில்லை. நாளொரு புலம்பலும் பொழுதொரு சோகப்பாட்டுமாக இவனது காதல் தோல்வி(?)யைப் போன்ற தோல்வி எங்களை வாட்டத்தொடங்கியது- அதிலும் என்னை மிக அதிகமாக! காதல் தோல்வியானது காதலித்தவனை விட அவனது நண்பர்களை அதிகம் தாக்க வேண்டும் என்பது எவன் விட்ட சாபமோ தெரியவில்லை. எதுவானாலும் அவள் கல்லூரி வந்து தானே ஆக வேண்டும், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தினமும் அவனிடம் உருவேற்றிக் கொண்டே இருப்பேன். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா! இனி கல்யாணம் ஆனவன்கூட மட்டும் தான் பிரண்ட்ஷிப் வாசிக்கணும்டா கணேஷா. முடியல்ல..."      

பரபரப்பான இறுதி கட்டம் என்பதால், இனிவரும் வரிகளில் பரபரப்பே இல்லாவிட்டாலும் சற்றே பரபரப்பாய் இருப்பது போல் படியுங்கள், எங்குலச்சாமி பாடிகாட் முனி உங்களுக்கு நல்லாசி வழங்குவாராக.

அவளைச் சந்திக்க வேண்டிய நாளும் வந்தது, கல்லூரி வராண்டாவில் நண்பிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தளிடம் எந்த மாற்றமும் இல்லை. இவளை இப்படி ஒரு சந்தோசமான சூழ்நிலையில் பார்த்ததும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை, அறச்சீற்றம் என்னுள் கொஞ்சம் அதிகமாகவே பிரவாகம் எடுத்தது. இருக்காதா பின்னே..? இத்தனை நாள் இவளால் தினேஷ் தந்த தொல்லைகளை அனுபவித்தது எதுவுமே அறியாத இந்த பால(கன்) கணேஷ் அல்லவா! மணியும் தினேஷும் என்னைப் பின் தொடர, நான் அவள் அருகில் செல்ல எங்களை மற்றுமொரு புதிய மற்றும் சற்றும் அறிமுகமில்லாத மனித ஜந்து நெருங்கியது. எங்களைப் பார்த்ததும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இயல்பாக பேசத் தொடங்கினாள் "ஹாய் கணேஷ்! சாரிப்‌பா, ரியலி சாரி! உங்க யாரையும் என்னோட மாரேஜ்க்கு கூப்பிட முடியல, இதோ பக்கத்துல நிக்குறாரே மிஸ்டர் கிறிஸ்டோபர்! இவரு தான் என்னோட ஹஸ்பண்ட். உங்க டிபார்ட்மென்ட்ல தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்காரு"

ப்யூஸ் போன மெர்க்குரி பல்பாக வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அதிர்ச்சியில் நடையைக் கட்ட ஆரம்பித்த பொழுது தான் மீண்டுமொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தாள் அந்த மாபாவி...  "அப்புறம் கணேஷ், இனி என் பின்னாடி சுத்துறது, என் நம்பர கண்டுபிடிக்க ட்ரை பண்றது, இதெல்லாம் வேணாம், ஒழுங்கா படிக்கிற வழிய மட்டும் பாருங்க" என்று கறாராக சொல்லிவிட்டு 234 தொகுதியிலும் வெற்றிபெற்ற கட்சித் தலைவி மாதிரி சிரித்தாள். நான் டெபாசிட் இழந்த வேட்பாளராகி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள, அருகில் இருந்த அவளது ஹஸ் கிறிஸ் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்....

"அடிப்பாவி! உனக்கு நூல் விட்டது ஒருத்தன், அல்வா கிண்டினது ஒருத்தன், ஆனா கடைசில ஆப்பு மட்டும் எனக்கா? கணேஷா... நீ பேசாம மாடு மேய்க்கவே போயிருடா கணேஷா..!" உள்ளேயிருந்து உரக்கக் குரல் கொடுத்தது மனஸ்! அவ்வ்வ்வ! ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல் என்று நான் முதல்லயே சொன்னது இதுனால தானுங்கோ...!

========================================================

பி.கு.: ‘அடங்கொண்டு போராடிய சீனு’ என்று நான் கலாய்த்த பதிவைப் படித்த ‘திடங்கொண்டு போராடு’ சீனு இந்தக் கதையை எழுதி அனுப்பி, ‘இது என்னோட பதில் கலாய்ப்பு. இது நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இதுவும் உங்க தளத்துலதான் வரணும்’னு நிஜமாவே அடம் பிடிச்சார். அதனால சீக்கிரமே கு.மி.சி. ஆகப்போற சீனுவை பின்விக்கும்... ஸாரி ஊக்குவிக்கும் விதமாக தான் எழுதின கதை(?)ய எனக்குத் தாரை வார்த்துத் தந்த அவருக்கு நன்றி சொல்லி, அதை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்தேன்!

Monday, March 25, 2013

புதுதில்லியில் நண்பர் வெங்கட் நாகராஜ் பைக்கை விரட்ட, பில்லியனில் அமர்ந்து போய்க் கொண்டிருந்தபோது என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்...! என் சகதர்மிணி சரிதா! ‘‘சொல்லும்மா’’ என்றேன். ‘‘என்னங்க... நாம சென்னைக்குப் போக ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்டாள்.

‘‘இல்லம்மா... அதான் என் ஃப்ரெண்ட் வெங்கட்டைப் பார்த்து அவர் செல்வாக்கை(!) உபயோகிச்சு ட்ரெயின் டிக்கெட் ஏற்பாடு பண்ணச் சொல்லிக் கேட்டேன். இப்ப அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்’’ என்றேன்.

‘‘வேண்டாங்க... உடனே கரோல்பாக்குக்குத் திரும்பிடுங்க. பெரியப்பா உங்களுக்கு, எனக்கு, மாமா-மாமிக்கு எல்லாருக்கும் இன்னிக்கு நைட் ஃப்ளைட்ல டிக்கெட் வாங்கிட்டாராம்’’ என்றாள். நண்பரின் தோளைத் தட்டி, வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். சாலையோரமாக நிறுத்திவிட்டு, ‘‘என்னாச்சு?’’ என்றார் வெ.நா. அவரிடம் சரிதா சொன்னதைச் சொல்லி, என்னை கரோல்பாகில் ட்ராப் செய்துவிடச் சொன்னேன். பழைய சாண்டில்யன்/கல்கி கதைகளில் வருவது மாதிரி விதி மினியேச்சர் சைஸில் அவர் மோ.பைக்கின் ஹாண்டில்பாரில் உட்கார்ந்து என்னைப் பார்த்து ‘ஹா... ஹா...’வென்று சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரியவில்லை.

 அருகாமை ஓட்டலில் ஸ்நாக்ஸ் ப்ளஸ் காபி அருந்தியபடி ஒரு மணி நேரம் அரட்டையடித்தபின் என்னை சரிதாவின் பெரியப்பா வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் நண்பர். விஷயம் இதுதான்... கரோல்பாகில் வசிக்கும் சரிதாவின் பெரியப்பா பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் பார்க்க வந்திருக்கிறோம். இப்போது திரும்புவதற்கான ஏற்பாடுகள்! எதற்கு அவள் பெரியப்பா, சரிதாவின் மாமா-மாமியை என் தலையில் கட்டினார் என்ற கேள்விக்குறியோடு வீட்டுக்குள் நுழைந்தேன். மேலே தொடர்வதற்கு முன் சரிதாவின் மாமா-மாமியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சரிதாவின் மாமா அருணாசல சாஸ்திரிகள் பரம வைதீகர். மூன்று தலைமுறைகளாக வேதம் படி்த்து சாஸ்திரிகளாக இருந்து வரும் குடும்பம் அவருடையது. ஆள் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக, திறந்த மார்பினராக, கட்டுக்குடுமியுடன் பழைய வெஸ்ட் இண்டீஸ்‌ கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு சாஸ்திரிகள் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார். மாமியோ நேர்மாறாக டெல்லியிலிருந்து சென்னையை நோக்கி ஒரு புயல் காற்று வீசினால் ரயில், பிளேன் எந்த டிக்கெட்டும் தேவைப்படாமல் சென்னைக்கு வந்து விடுகிற தினுசில் ஒல்லிப்பிச்சானாக இருப்பார். இந்த ஜோடியைப் பார்த்தாலே எனக்கு குபீரென்று சிரிப்புவர, ‘மொழி’ படத்தில் பிரம்மானந்தத்தைப் பார்த்து பிரகாஷ்/பிரிதிவி ராஜ்கள் சிரிப்பை அடக்க முயற்சிக்கிற மாதிரி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி, சரிதாவின் முறைப்பைப் பெற்றுக் கொள்வேன்.

தஞ்சாவூர்ப் பக்க கிராமத்திலிருக்கும் அவள் மாமாவுக்கு, ரயில் பயணமே அபூர்வம். ப்ளைட்டை வானில் பறக்கையில் மட்டும் பார்த்திருந்த அவர், முதல் விமானப் பயணத்தை எதிர்பார்த்து பல்லெல்லாம் வாயாக இருந்தார். ‘‘வாங்கோ மாப்ளே... நாங்கல்லாம் பேக்கிங் பண்ணிட்டு ரெடியாயிட்டோம்...’’ என்று ‘அம்மா’ ஓட்டலில் இருபது இட்லிகளைச் சாப்பிட்டவர் மாதிரி அகலமான சிரிப்புடன் சொன்னார். இவருடன் பயணம் என்றதுமே என் வயிற்றின் மேல் மண்டியிட்டு அமர்ந்து அட் எ டைம் ஐந்து சிவமணிகள் ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி கலக்கியது.

‘‘ஏழு மணிக்கு ஃப்ளைட்! நாம இங்கருந்து அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிரணும். அப்பத்தான் செக்-இன் பண்ணிட்டுப் போக சரியா இருக்கும் மாமா’’ என்றேன். ‘‘செக்கா...? அண்ணா கேஷா பணம் கட்டிட்டதால்ல சொன்னார்....?’’ என்றார் மாமா. ‘‘அதில்ல மாமா... இவர் சொல்றது செக்-இன்’’ என்று சரிதா அதைப் பற்றி அவருககு விளக்கியபடியே அவள் கஸின் சிஸ்டருக்கு வாங்கிய கிச்சன்வேர் செட், மாமா பையனுக்கு வாங்கின ஷேவிங் செட், அவள் அம்மாவுக்கென்று வாங்கிய போதை, ஸாரி... கீதை புத்தகம் என்று அவசியமான(?) பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தாள். பஞ்சக்கச்ச வேஷ்டியுடன்தான் வருவேன் என்று அடம் பிடித்த அவருக்கு ஒரு சட்டையை மட்டும் மாட்டிவிட்டு ஒருவழியாக அவரைக் கிளப்பி விமானநிலையத்துக்கு டாக்‌ஸியில் கடத்திச் சென்றதும், ‘‘இவ்வ்...வளவு பெரிசா?’’ என்று பிரமித்தார்.

அங்கேயிருந்த கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒரு பெண். சற்றே மேடிட்டிருந்த வயிறுடன் இருந்த அவள், ‘‘ஆர் யூ நான்வெஜ் ஆர் வெஜ்?’’ என்று அமெரிக்கன் ஆக்ஸெண்ட் ஆங்கிலத்தி்ல் கேட்க, ‘‘என்ன கேக்கறா இவ?’’ என்றார் மாமா. சரிதா மு.கொ.தனமாய் ‘‘நீங்க சைவமான்னு கேக்கறா மாமா’’ என்றாள்.

‘‘சைவமாவது...? நான் வைஷ்ணவன்ம்மா! நெத்தில பாரு எவ்ளோ பெரிசா திரிசூர்ணம் இட்டுண்டிருக்கேன்...!’’ என்று கஸ்டம்ஸ் பெண்ணிடம் நெற்றியைக் காட்டி அபிநயத்துடன் அவர் பேச, அவள் ‘ழே’ ‌என்று விழித்தாள்.

‘‘ஹய்யோ மாமா... அவ சாப்பிடற விஷயத்தைக் கேக்கறா. நீங்க செத்த பேசாம இருங்கோ...’’ என்று விட்டு, அவளிடம் ‘‘We all are pure vegetarians madam’’ என்றேன். ‘‘வாட்டீஸ் திஸ்?’’ என்று மாமாவின் பேகிலிருந்து எடுத்த பாட்டிலைக் காட்டிக் கேட்டாள் அவள். ‘‘இதுவா? ஆவக்காய் ஊறுகாய்டிம்மா... ஒரு வாய் சாப்ட்டுப் பாரு... பேஷா இருக்கும்’’ என்று மாமா, ஒரு பீஸை எடுத்து அவள் வாயில் திணித்தே விட்டார். நாக்கைச் சப்புக் கொண்டபடி, ‘‘ம்ம்ம்... வெரி டேஸ்ட்டி! பட், ஐ வி்ல் நாட் அலவ் திஸ்’’ என்று தன் டேபிளில் வைத்துக் கொண்டாள். என்னதான் கஸ்டம்ஸ் ஆபீஸராக இருந்தாலும் மசக்கைக்காரி பாருங்கள்...! ஹி... ஹி...


விமானத்தின் படிக கட்டுகளில் ஏறி உள்ளே நுழைகையில் கையில் ட்ரேயில் சாக்லெட்டுகளை ஏந்தியபடி நின்ற அந்த ஒல்லியான ஏர் ஹோஸ்டஸ், மாமாவைப் பார்த்ததும், ‘‘சாக்லெட் எடுத்துக்கஙக மாமா’’ என்று தமிழ் பேசினாள். ‘‘அப்பாடி...! நீயாவது தமிழ் பேசற பொண்ணா வாய்ச்சியேம்மா...’’ என்று தன் முறம் போன்ற கைகளில் கொஞ்சமே கொஞ்சம் சாக்லெட்டுகளை அள்ளிய மாமா, அவள் காதருகில் ஏதோ கிசுகிசுக்க, கருணாநிதியைச் சந்தித்துவிட்ட ஜெயலலிதா போலானது அவள் முகம்.

அவர் உள்ளே போனதும், மெல்ல அவள் அருகில் சென்ற நான், ‘‘சாஸ்திரிகள் மாமா உங்ககிட்ட என்னங்க சொன்னார்?’’ என்று மெல்லிய குரலில் கேட்க, அதைவிட மெல்லிய குரலில், ‘‘பைலட்டுகிட்ட வண்டியை கன்னாபின்னான்னு ஸ்பீடா ஓட்ட வேணாம், மெதுவா ஓட்டச் சொல்லுடிம்மான்னு சொன்னார்’’ என்றாள். ‘‘முருகல்லாயேசுவே! இந்த மாமாவை சென்னைக்குக் கொண்டு சேர்ககற தெம்பை எனக்குக் குடுங்க’’ என்று பிரார்த்தித்தபடி நானும் உள்ளேறினேன்.

சற்று நேரத்தில் மாமாவிடம் வந்த ஏர்ஹோஸ்டஸ், ‘‘ப்ளீஸ், பெல்ட்டைப் போட்டுக்குங்க’’ என்றாள். ‘‘மாப்ளை பேண்ட் போட்டிருக்கார். பெல்ட் போட்டா நியாயம். வேஷ்டி கட்டிண்டு நான் பெல்ட்லாம் போட்டா சகிக்காதேடிம்மா...’’ என்றார் மாமா. ‘‘நோ அங்கிள்.... ஐ மீன் ஸீட் பெல்ட்’’ என்று அவர் இடுப்பில் அதை மாட்டிவிட்டு, ‘‘ப்ளேன் மேல ஏர்ற வரைக்கும் இதைக கழட்டக் கூடாது. புரிஞ்சுதா?’’ என்றாள். ‘‘இதைக் காதுல அடைச்சுக்கங்க...’’ என்று கொஞ்சம் பஞ்சைக் கொடுத்தாள். இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வாங்கி என் காதுகளில் அடைத்துக் கொண்டு கண்களை மூடி‌க் கொண்டேன்.

மாநகரப் பேருந்து மாதிரி மெல்ல ஊர்ந்த ப்ளைட், ‌சென்னை ஆட்டோக்களைப் போல கன்னாபின்னாவென்று வேகமெடுத்து ஜிவ்வென்று மேலேறியது. பக்கத்திலிருந்த சரிதா என் தோளில் தட்டி, ஏதோ கேட்பது ‌புரிந்ததும் கண் திறந்து பார்த்தேன். ‘‘என்ன சரி?’’ என்றேன்.

‘‘என்னங்க இது.. இப்படியா ஜிவ்னு செங்குத்தா மேல ஏறுது?’’ என்றாள் கண்களில் பயத்துடன். ‘‘அப்படி குபீர்னு ஏர்றதாலதான் அதுக்கு ‘ஏர்ரோ’ப்ளேன்னு பேரு வெச்சிருக்கான்...’’ என்று தன் கண்டுபிடிப்பை விளககி ‘கடி’த்தார் மாமா. பற்களைக் கடித்தேன் நான்.

எதிரே ஓடிக் கொண்டிருந்த டி.வி.யைப் பார்த்த மாமா, ‘‘என்னது... கன்னாபின்னான்னு என்னத்தையோ போடறான்? நல்லதா ஒரு சிவாஜி படம் போடச் சொல்லுங்க மாப்ளே...’’ என்றார். நான் பதில் சொல்வதற்குள் ஏர்ஹோஸ்டஸ் ட்ரிங்ஸ்ஸை ட்ரேயில் ஏந்தி கடந்து செல்ல, சட்டென்று அதில் சிவப்பான திரவம் இருந்த க்ளாஸை எடுத்து - அது என்னவ்னெறு விளக்குவதற்குள் - கடகடவென்று குடித்து வைத்தார் மாமா. நான் அவசரமாக மாமிக்கும் சரிதாவுக்கும் கூல்டிரிங்ஸை எடுத்துத் தந்தேன்.  ‘‘ஆஹா...! கோகோகோலாவை விட காரமா இருக்கே. ஆனா நன்னா இருக்குடிம்மா... இன்னொண்ணு குடேன்’’ என்று இன்னொரு கிளாஸ் அதே திரவத்தை கு(அ)டித்தார் மாமா.

அதுவும் நல்லதாகப் போயிற்று. சில நிமிடங்களில் மாமா கண்ணயர்ந்து (மட்டையாகி?) விட, நிம்மதியாய்க் கழிந்தது பயணம். சென்னையை நெருங்குகையில் பைலட்டின் அனவுன்ஸ்மென்ட் குரல் கேட்டுத்தான் கண் விழித்தார் மாமா. ‘‘என்ன சொல்றாங்க மாப்ளே?’’ என்றார். ‘‘அதுவா? ‘ஏர்ரோ’ப்ளேன் இப்போ ‘இறங்கோ’ப்ளேன் ஆகப் போறதாம். அதத்தான் சொல்றாங்க’’ என்று எரிச்சலுடன் ‘கடி’த்தேன் நான். ‘‘என்னங்க... இது?’’ என்று முறைத்த சரிதாவிடம், ‘‘கடி விதைத்தவன் கடி அறுப்பான்’’ என்று சிரித்தேன். மாமாவுக்கு சீட்பெல்ட் மாட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது- அவர் டில்லியில் மாட்டிய பெல்ட்டை இதுவரை கழற்றவே இல்லை என்பது.

மீனம்பாக்கத்தில் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து என் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ பிடித்தோம். ஆட்டோ விரைய... ‘‘ஐயய்யோ... ப்ளேனே பரவாயில்ல போலயே... இந்தக் கட்டேல போறவன் ப்ளேனைவிட வேகமாப் பறககறானே’’ என்று மாமா அலற, ஆ.டிரை. திரும்பி முறைத்தான். ‘‘சும்மா இருங்க மாமா... நீங்க காலை விரிச்சுக்கிட்டு நின்னா, காலுக்கு நடுவுலகூட வேகமாப் புகுந்து போறவன்தான் சென்னைல ஆட்டோ டிரைவர்’’ என்று பற்களைக் கடித்தபடி சொன்னேன் நான். ‘‘பொடிநடையா நடந்தே ஸ்டேஷன் போயி, அன்ரிசர்வ்டா இருந்தாலும் பரவால்ல... நைட் ட்ரெயின்லயே ஊருககுப் புறப்படறேன் மாப்ளே...’’ என்று மாமியுடன் கிளம்பிச் சென்றார் மாமா. ஏனோ தெரியவில்லை... சரிதா வருந்தி வருந்திக கூப்பிட்டால்கூட சென்னை என்றாலே இப்பவும் அலர்றாருங்கோ!

Saturday, March 23, 2013

உருப்படியாய் சில உருப்படிகள்!

Posted by பால கணேஷ் Saturday, March 23, 2013
மீபத்தில் நான் படித்த சில பயனுள்ள தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ‘இதான் எனக்குத் தெரியுமே’ என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல... தொகுத்தது மட்டுமே நான்!  அதுசரி... நீங்கள் என்ன வாகனம் வைத்திருக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் உங்களுக்காக சில...

* எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அது மூச்சு வாங்காமல் ஹாயாய் ஓட வேண்டுமானால் பெட்ரோல் கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். தரமான பெட்ரோல் என்றால் அதன் டென்சிட்டி, அதாவது அடர்த்தி எண் சரியானபடி இருக்க வேண்டும்.  இதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு காட்டும் மீட்டர்களுக்கு மேல் ‘டென்சிட்டி’ என்று எழுதி, பெட்ரோலின் அடர்த்தி இவ்வளவு சதவீதம் உள்ளது என்று குறிக்கப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் அதைப் பார்த்து பெட்ரோலின் அடர்த்தி எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

* எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோலைப் பாதுகாத்து வைக்க பூமிக்கடியில் சேமிப்புக் கலன்களைப் பதித்திருப்பார்கள். காரணம், பெட்ரோலின் அடர்த்தி ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டுமானால் அந்த இடம் சற்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பூமிக்கு மேல் வைத்தால், பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பெட்ரோல் ஆவியாகி, அதன் அடர்த்தி குறைந்துவிடும் என்பதால் பூமிக்கு அடியில் வைக்கிறார்கள். எனவே.....

* வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்குச் சரியான நேரம் இரவு அல்லது அதி‌காலை நேரம்தான். குளிர்ச்சியாக இருக்கும் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ பெட்ரோல் போட்டால் அதன் அளவு சரியாய் இருக்கும். சில நேரங்களி்ல சற்று அதிகமாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. நன்றாக வெயிலடிக்கும் நேரத்தில் பெட்ரோல் போட்டால் நிச்சயம் அளவு குறைவாக இருக்கும். இதை சிந்தித்துச் செயல்பட இந்த அவசர உலகில் எவருக்கும் நேரமில்லை!

* வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது எப்‌போதும் டேங்க் முழுவதும் நிரப்பக் கூடாது. பலர் இந்தத் தவறை செய்கின்றனர். பெட்ரோலை டேங்க் முழுவதும் நிரப்பும்போது டேங்க்கின் உள்ளே காற்று இருக்காது. காற்று இல்லாத காரணத்தால் வெப்பம் அதிகமாகி பெட்ரோல் ஆவியாக ஆரம்பிக்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் வரை ஆவியாகி வீணாகிவிட வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் டாங்க்கின் பாதி அளவுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டால் இந்த ஆவியாதலைத் தவிர்க்கலாம். அதுவே உத்தமம்.

* வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அதிமுக்கிய விஷயம்... நீங்கள் பெட்ரோல் ‌போடச் செல்லும் சமயம் பங்கில் அப்போதுதான் லாரி மூலம் பெட்ரோல் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அங்கே பெட்ரோல் போடாதீர்கள். காரணம்... புதிதாய் பெட்ரோல் நிரப்பப்படும் போது டேங்கின் அடியில் தேங்கி இருக்கும் கசடுகளை மேலே கொண்டு வந்து டேங்கைக் கலங்கலாக்கியிருக்கும். அப்படிப்பட்ட பெட்ரோலைப் போட்டால் அது உங்கள் வாகன இன்ஜினைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க! அதுமாதிரியான சமயங்களில் ஒரு மணி நேரம் கழித்து அந்த பங்க்குக்குப் போவதே சிறந்தது!

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது இனி இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்வீர்கள் தானே... இனி, நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் செல்/அலை/கை பேசி குறித்த சில குறிப்புகள் உங்களுக்காக...

* ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு எதிர்முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியதும் கை பேசியை முகத்துக்கு சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

* வீட்டிலும் அலுவலகத்திலும் செல்பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம்.

* இரவு உறங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு. அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.

* இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல்போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.

* பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலைபேசி ஒரு இடதாங்கி போலச் செயல்பட்டு, இடி, மின்னல உங்களை நோக்கி ஈர்த்துவிடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.

முடிப்பதற்கு முன்... போனஸாக ஒரு ஆச்சர்யத் தகவல் உங்களுக்கு! ‘‘இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்’’ -இப்படி செல்போன்களின் தினசரிப் பயன்பாட்டை யூகித்து 1930ம் ஆண்டிலேயே சொன்னார் ஒருவர். அவர் யார் என்பதை அறிவீர்களா...? வெளிநாட்டறிஞர் எவரும் இல்லீங்க... தந்தை பெரியார் என்று தமிழர்கள் அழைக்கும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1930ம் ஆண்டில் தொலைநோக்குப் பார்வையுடன் வெளியிட்ட கருத்து இது!

Wednesday, March 20, 2013

தெரியுமா இவரை - 5

Posted by பால கணேஷ் Wednesday, March 20, 2013

                                  லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci)

எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் அவரின் அப்பா, ‘‘ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம திரியறே? நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வரணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?’’ என்பார். ‘‘போப்பா... ஒரே ஆள் எப்படி டாக்டரா, வக்கீலா, இஞ்சினீயரா வர முடியும்?’’ என்பார் எஸ்.வி.சேகர். அரங்கம் சிரிப்பலையில் மூழ்கும். ஆனால் நிஜவாழ்வில் மிகச் சிறந்த ஓவியராக, சிற்பியாக, நில அளவையாளராக, தச்சராக, விஞ்ஞானியாக, பொறியியலாளராக, மருத்துவராக, அரசியல் ஆலோசகராக என்று பல நிலைகளில் வாழ்ந்த சாதனையாளர் லியனார்டோ டாவின்சி.

1452ம் வருடம் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி இத்தாலியிலுள்ள வின்சி என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையான செர்.பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர். தாய் கத்தரீனா ஒரு விவசாயக் குடும்பப் பெண். டாவின்சியில் இளமைக்காலம் புளோரசன்சில் கழிந்தது. டாவின்சி இடதுகைக்காராக இருந்தாலும் சிறு வயதிலேயே இரண்டு கைகளாலும் எழுதவும், வரையவும் திறமை பெற்றிருந்தார். உள்ளூர்க் குடியானவன் ஒருவன் லியனார்டோவிடம் ஒரு வட்டப் பலகையில் படம் வரைந்து தருமாறு கேட்க, பாம்புகள் தீயை உமிழ்கிற காட்சியைப் படமாக வரைந்திருக்கிறார். அவரின் தந்தை அந்தப் படத்தின் அழகை அதிசயித்து அதை நல்ல விலைக்கு கலைப்‌பொருள் கூடத்திற்கு விற்றுப் பணமாக்கி விட, வேறொன்று வரைந்து குடியானவனுக்குத் தந்திருக்கிறார் லியனார்டோ.

1466ல், டாவின்சியின் 14வது வயதில், அந்நாளில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea di Cione) என்பவரிடம் லியனார்டோ ஓவியம் பழகுவதற்காகச் சேர்ந்தார். அப்போது புகழ் பெற்றிருந்த பல கலைஞர்கள் வெரோக்கியாவின் கலைக்கூடத்தில்  தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். அதனால் லியனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்தது.  வேதியியல், உலோகவியல், உலோகவேலை, தோல் வேலை, இயந்திரப் பொறிகள் செய்தல், தச்சுவேலை போன்றவற்றோடு ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் முதலிய பல திறமைகளையும் வளர்த்து தன்னை கூர் தீட்டிக் கொள்ள ஒரு சிறந்த பயிற்சிக் களமாக அவருக்கு அது அமைந்தது.

‘கிறிஸ்துவின் ஞானஸ்நானம்’ என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியனார்டோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியனார்டோ வரைந்த விதம், குருவையும் விஞ்சியதாக இருந்ததால், அசந்துபோன வெரோக்கியோ அதன் பின்னர் வரைவதையே நிறுத்தி விட்டார் என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் நன்கு ஆராயும்போது, அந்த ஓவியத்தில் லியனார்டோவின் முத்திரை அழுத்தமாக இருப்பதை உணரலாம். அதன்பின்னர் குருவை மிஞ்சிப் புகழ்பெற்ற லியனார்டோ வரைந்த பல ஓவியங்களில் 1498ல் வரைந்த ‘இயேசுவின் கடைசி விருந்து’ ஓவியமும், 1503-1506ல வரைந்த ‘மோனாலிசா’ ஓவியமும் உலகப் புகழ் பெற்றவை. ஆகாய விமானம், பாராசூட், பீரங்கி போன்ற அக்காலத்தில் இல்லாத பல விஷயங்களை ஒரு விஞ்ஞானியாக முன்கூட்டியே கற்பனை செய்து, ஓவியங்களில் வரைந்திருக்கிறார் டாவின்சி. அவரது மேதைமை அவர் வாழ்ந்த காலத்தில் உணரப்படவில்லை, கொண்டாடப்படவில்லை என்பதே வேதனையான உண்மை. (நமது மகாகவி பாரதியார் போல).

1472 ஆம் ஆண்டளவில், லியனார்டோ 20 ஆவது வயதில், மருத்துவர்கள் மற்றும் கலைஞர்கள் குழுவான ‘சென்-லூக்’ குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். 1482 இலிருந்து, 1498 வரை மிலானில் லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். அதன்பின் போரின் காரணமாக அவர் வெனிஸ் சென்றடைந்தார். பின், புளோரன்சில் செஸாரே போர்கியா என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், மிலானுக்குத் திரும்பினார்.

1515ல் பிரான்ஸ் மன்னர் பிரான்சிஸ்-Iக்கும் போப் லியோ X-க்கும் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியனார்டோ அமர்த்தப்படார். அதுதான் அரசருடன் அவரின் முதல் சந்திப்பு. 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் ஒரு வீடும் சிறப்பான ஊதியமும் வழங்கப்பட்டன.

ஒரு கல்லைக்கூட கைகளிடையில் வைத்து நசுக்கிவிடும் அளவுக்கு லியனார்டோ வியக்கத்தகு உடல் வலிமை படைத்திருந்தார். ஆனாலும் இறப்புக்கு விதிவிலக்காக எவர் இருந்துவிட இயலும்?  1519ம் ஆண்டு லியனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது... பதியைக் கொன்ற பாவை-4

Friday, March 15, 2013

பழமை இன்றும் இனிமை!

Posted by பால கணேஷ் Friday, March 15, 2013
‘‘வேலாயுதம்... திருப்பதிக்குப் போகணும்னு லீவு வாங்கிண்டு போனியே, அங்கே என்ன விசேஷம்? ஏதாவது கல்யாணமா?’’

‘‘ஆமாங்க...!’’

‘‘யாருக்குடா?’’

‘‘அது ஒரு பெரிய கதைங்க...!’’

‘‘என்ன கதைடா...? சொல்லு, கேக்கலாம்...’’

‘‘என் பொண் இருக்குது பாருங்க, கண்ணம்மா...’’

‘‘ஆமாம். அவளுக்கா கல்யாணம்?’’

‘‘கேளுங்க பூராவையும். அது தாயில்லாப் பொண்ணாச்சே... அதுக்குக் காலாகாலத்துல கல்யாணத்தப் பண்ணி வச்சடலாம்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணி, சரியான மாப்பிள்ளையையும் தேடி... எல்லாம் தயாரா வச்சிருந்தேனுங்க! கடைசியிலே அந்த அசட்டுப் பொண்ணு என்ன சொல்லிடுச்சுடன்னா...’’

‘‘அந்த மாப்‌பிள்ளை வேண்டாம்னுட்டாளா?’’

‘‘அந்த மாதிரி ஏன் சொல்றா அவ? அவளும் அவனும் அடிக்கடி மாந்தோப்புல சந்திச்சு பேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சுதானே நான் அந்த மாப்பிள்ளையயே நிச்சயம் பண்ணினேன்! ஆனா, அவ என்ன சொல்றான்னா, தான் கல்யாணம் பணணிண்டு புருசன் வீட்டுக்குப் போயிட்டா நான் சோத்துக்குத் திண்டாடுவேனாம்! எப்படி இருக்குதுங்க... இவ்வளவு அசடா யாராவது இருப்பாங்களா/’’

‘‘உன்னைத் திண்டாட விட்டுட்டுப் போக அவளுக்கு மனசில்லே! அவளைப் போய் அசட்டுப் பொண்ணுங்கறியே!’’

‘‘பொண்ணுன்னு பொறந்தா புருசன் வீட்டுக்குப் போய்த்தானே ஆகணுங்க? எத்தனை நாளைக்குத்தான் அப்பன் வீட்டிலேயே இருக்க முடியும்?’’

‘‘அது சரிதாண்டா! அவளோ தாயில்லாப் பொண்ணு. அவளுக்கு நீதான் தாயார், தகப்பனார் எல்லாமே. அதோட சின்ன வயசிலேருந்தே நீ அவளை வளர்த்துண்டு வந்திருக்கே! அதனாலே அவளுக்கு உன்கிட்டே அத்தனை பிரியம் ஏற்பட்டிருக்கு!’’

‘‘அதுக்காக, கல்யாணம் பண்ணிண்டு சுகமா இருக்க வேண்டிய காலத்தையெல்லாம் அநியாயமாப் பாழாக்கணுங்களா?’’

‘‘அதை நல்லதனமா எடுத்துச் சொல்லணும் நீ...’’

‘‘சொல்லாம இருப்பேனுங்களா... ‘எனக்கோ ஐம்பது வயசாகுது. நான் இன்னிக்கெல்லாம் உசுரோட இருந்தா இருபது வருஷம்தான் இருப்பேன். சந்தோஷமா இருக்க வேண்டிய காலத்தைப் பாழாக்காதே’ன்னு நான் எவ்வளவோ படிச்சுப் படிச்சு சொன்னேன். கேட்கலே. இனிமே இவளுக்காகக் காத்திருந்தா ஊரார் சிரிப்பாங்கன்னு எனக்குத் தோணிப் போச்சுங்க...’’

‘‘ஊரார் ஏன் சிரிக்கறாங்க?’’

‘‘பின்னே சிரிக்க மாட்டாங்களா? இந்த ஐம்பது வயசிலே கல்யாணம் பண்ணிக்கறதையே எல்லாரும் பரிகாசம் பண்ணிக்கிட்டு இருகு்காங்க. இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கிட்டா சிரிக்காம இருப்பாங்களா சொல்லுங்க...?’’

‘‘என்ன.... என்னது... உனக்கா கல்யாணம்?’’

‘‘பின்னே யாருக்குங்க? அதுக்காகத்தானே லீவு வாங்கிட்டு திருப்பதிக்குப் ‌போனேன். ஏன் அப்படி முழிக்கறீங்க? கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க வேண்டிய காலத்தை என் பொண்ணு பாழாக்கறான்னுதானே இத்தனை நாழி சொல்லிட்டு இருந்தேன். உங்களுக்குக் கூடப் புரியலீங்களா?’’

‘‘ஹும்! புரிஞ்சுது.... புரிஞ்சுது.... கண்ணம்மா உண்மையிலேயே அசட்டுப் பொண்ணு தான்டா!’’

-ஆனந்தவிகடன் இதழில் 1950-60களில் ‘அசட்டுப் பெண்’ என்ற தலைப்பில் ‘சசி’ என்பவர் எழுதிய விஷயத்தைத் தான் மேலே தந்திருக்கிறேன். பிடிச்சிருந்துச்சா?

 நான் சின்ன வயசிலயே பல நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை. படித்து வேலைககு வந்தபின் எனக்குப் பயணங்கள் அமைவது மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது இன்றிரவு நண்பர்களுடன் கொடைக்கானல் டூர் கிளம்புகிறோம். மீண்டும் செவ்வாயன்று திரும்புவதாக உத்தேசம். வந்தபின் புதிய விஷயங்களுடன் சந்திக்கிறேன். (முடிந்தால் பயண அனுபவங்களை எழுதி அறுக்கலாமா என்ற உத்தேசமும் இருக்கிறது. உஷார்!) பை தி பை... நான் இளவயதில் சென்று வந்த நாடுகள் - செட்டிநாடு, ராம்நாடு! ஹி... ஹி....!

Wednesday, March 13, 2013

நிலவொளிர் கடற்கரை!

Posted by பால கணேஷ் Wednesday, March 13, 2013
ற்றார் உறவினரைப் பிரிந்து வெளிநாட்டில் சென்று வேலை செய்து பொருளீட்டி வரும் குடும்பத் தலைவர்கள் இன்று அதிகம். அவர்களைப் பிரிந்து வாடும் மனைவியும், அவர்தம் மழலைகளும் ‘அவர் எப்போதாடா வருவார்’ என்று ஏங்கி வாடி நிற்பார்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தாலும், அந்நாட்டுடன் ஒட்ட இயலாமல் மனம் மட்டும் தன் குடும்பத்திடம் தன் நாட்டில் இருக்க, வாடி நிற்கும் இளைஞர்கள் அனேகம். இத்தனை கவலைகள் இருந்தாலும் இன்றைய தினத்தில் கவலையைச் சற்றே மறந்து இளைப்பாறுதல் பெற, ஷாப்பிங் மால்களும், தொலைக்காட்சியும், நினைத்த நேரம் பேசி மகிழ அலைபேசியும் ஆக.. பல சாதனங்கள் உதவுவதற்கு இன்று இருக்கின்றன.

ஆனால் சங்க காலத்தில் வாழ்ந்த தலைவனுக்கும் தலைவிக்கும்... பாவம், இத்தகைய வசதிகள் ஏதுமில்லை. பொருளீட்டத் தலைவன் வெளிநாடு சென்று விட்டால், வசதி படைத்தவராக இருப்பின் புறா மூலம் தூது அனுப்பி கருத்தினைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லாதவர்கள் இயற்கையிடமும், தங்களுக்கு வாழ்த்த தோழியர் ஆகியோரிடம் தலைவியும், பொருள் தேடச் சென்ற தேசத்தில் தனக்குக் கிடைத்த நண்பனுடன் தலைவனும் தத்தம் ஏக்கங்களைப் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறுவதுதான் ஒரே வழி. சங்கப் பாடல்களில் பல இத்தகைய கையறு நிலையினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சில பாடல்கள் தலைவனுக்கோ, அல்லது தலைவிக்கோ ஆறுதல் கூறுவதாக அமைந்து மனதைத் திருடுவதுமுண்டு. அத்தகைய பாடல்களில் ஒன்றை இன்று இங்கே காணப் போகிறோம்...!

ங்களின் நல வாழ்விற்கான பொருள் தேடலின் பொருட்டு தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் வருவதாகச் சொன்ன காலத்தை எதிர்பார்த்து அவனுடைய ‌பெண்மயில் ஏங்கித் தவித்து, வழி மேல் விழி வைத்து பாதையைப் பார்த்துப் பார்த்து ஏங்கிப் போகிறாள். தலைவன் வந்த பாடில்லை. நாட்கள் ஓடுகின்றன. ஊரார் எல்லாம் ‘‘இனி அவன் எங்கே வரப் போகிறான்? பொருள் தேடச் சென்ற இடத்திலேயே தங்கி வி்ட்டனன் போலும்!’’ என்ற ஏளனம் பேசுகின்றனர். ஊராரின் புறணிப் பேச்சுகள் சுட, தலைவி மனம் வருந்தி, அவள் உடல் வாடி நிற்கிறாள்.

உடல் மெலிந்து, துயர் படிந்த முகத்தினளாய் வாடி நிற்கும் தலைவியைப் பார்த்து கவிஞர் உலோச்சனார் ஆறுதலாகப் பாடுகிறார். அவர் தன் பாடலின் மூலம் தலைவன் வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவளுக்கு அழகாய் எடுத்து உணர்த்தி, ‘‘வாட்டம் நீங்கிடு பைங்கிளியே!’’ என்று கூறி ஆறுதல் தருகிறார். நற்றிணையில் சொல்லப்படும் அந்த நற்றமிழ்ப் பாடலைச் சற்றே படிக்கலாமா?

பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினை அவர் செய்குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி யுட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்த் தானே;
புனரி பொருத பூமணல் அடைகரை
ஆழி மரங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றாற் கான லானே.


இந்தப் பாடலுக்கான பொருள்: ‘‘சூடாத மலர் மாலையினைப் போல உடல்வாடி நிற்கிறாய் நீ! உன்னவர் வருவதாகச் சொன்ன நாளும் தாண்டிவிட்டது. ‘இனி அவர் வரமாட்டார்’ எனறு ஊரார் பேசும் பேச்சை நினைத்து வருந்தாதே நீ! உன் நெஞ்சிலிருந்த அத்தகைய நினைவுகள் முற்றாக அகலட்டும்! அலையடித்து பொடி மணல் எங்கும் படர்ந்து கிடக்கும் கடற்கரையில் தேர்ச்சக்கரத்தில் நண்டுகள் மிதிபடாத வண்ணம் தேரை விலக்கி ஓட்டுமாறு தேரோட்டியிடம் எடுத்துச் சொல்கிறான் உன் தலைவன். அவன் வரும் வழியில் கானலிடத்தில் நிலவும் விரிந்து சில்லென்ற தன் ஒளியைப் பரப்பியுள்ளது பார்!’’ என்பது.

இந்த வார்த்தைகளின் மூலம் எத்தனை அழகாக, உன் தலைவன் வந்து கொண்டிருககிறான் என்பதையும், பொருள் வளம் சேர்த்து வரும் அவனுடன் ஒரு இன்ப வாழ்வு காத்திருக்கிறது என்பதையும், தலைவிக்கு ஆறுதல் சொல்லும் பாடலினூடாக கடற்கரை மற்றும் நிலவொளியின் இயற்கை அழகையும் வர்ணித்து ஒரே பாடலில் எத்தனை ஜாலம் காட்டியிருக்கிறார் சங்கப் புலவர்! நினைக்க நினைக்க வியப்பே மேலிடுகிறது! இன்னும் இன்னும் சங்கத் தமிழை அருந்தி மகிழ மனம் அலைபாய்கிறது. இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு தந்தது தானே...!

Monday, March 11, 2013

மேதைகளின் நகைச்சுவை!

Posted by பால கணேஷ் Monday, March 11, 2013
னைவருக்கும் வணக்கம்!

நண்பர் சிரிப்பானந்தா என்னுடைய ஜோக்குகளால உங்களைச் சிரிக்க வெப்பேன்னு சொன்னார். நான் என் ‌ஜோக்கு(!)களைச் சொல்லி இங்க கூடியிருக்கற கூட்டத்தைக் கலைக்க விரும்பாததால நான் படிச்ச ‘மேதைகளின் நகைச்சுவை’களை உங்க எல்லாரோடயும் ஷேர் பண்ணிக்கப் போறேன். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை உங்க எல்லாருக்கும் தெரியும். அவர் ஒருநாள் ஓய்வில் தன் வீட்டில் உட்கார்ந்து வயலின் வாசிச்சுக்கிட்டிருந்தார். அவரோட வயலின் இசையைப் பொறுக்கமுடியாம பக்கத்து வீட்டில் குடியிருந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் ஓடிவந்தார். ‘‘ஐன்ஸ்டீன்! வாசிப்பதை நிறுத்துங்கள் என்னால் சகிக்க முடியவில்லை!’’ என்று கத்தினார். ஐன்ஸ்டீன் வாசிப்பதை நிறுத்திவிட்டு, ‘‘நீங்கள்கூடத்தான் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறீர்கள். நான் என்றைக்காவது சிரித்திருக்கிறேனா?’’ என்று கேட்டார். பக்கத்து வீட்டுக்காரர் தலையைப் பிய்த்துக் கொண்டார். அவ்வளவு இம்சை‌ செய்தது ஐன்ஸ்டீனின் வயலின்.

வயலின் இசையால் துன்பப்பட்ட இன்னொரு அறிஞர் பெர்னார்ட்ஷா. உலகப்புகழ் பெற்ற நாடக ஆசிரியரான அவர் ஒரு நல்ல இசை ரசிகரும், விமர்சகரும் கூட. அவர் ஒரு வயலின் இசைக் கச்சேரிக்குப் ‌போயிருந்தப்ப, வாசிச்சவர் படு திராபையா வாசிச்சிருக்காரு. பெர்னார்ட் ஷாவுக்குப் பொறுக்கலை. ரெண்டு பாட்டு வாசிச்சவர், மூணாவது பாட்டு வாசிக்கறதுக்கு முன்னால முன் வரிசையில இருந்த ஷாவைப் பாத்து, ‘‘வாட் கேன் ஐ ப்ளே நெக்ஸ்ட் ஸார்?’’ன்னு கேட்டார். எரிச்சலின் உச்சியிலிருந்த ஷா, ‘‘பெட்டர் யூ ப்ளே கோலிகுண்டு!’’ என்றார். அப்படிக் குசும்பு பிடிச்ச பெர்னார்ட் ஷாவையே மூக்குடைபட வெச்சவர் சர்ச்சில்.

நானே தானுங்கோ...!
சர்ச்சில் பிரிட்டின் பிரதமரா இருந்த சமயம், தன்னோட நாடகத்துக்கு ரெண்டு டிக்கெட்டை ஒரு கவர்ல வெச்சு கூடவே ஒரு லெட்டரையும் வெச்சாரு. ‘‘இத்துடன் என் நாடகத்துக்கு இரண்டு டிக்கெட் அனுப்பியுள்ளேன். உங்கள் நம்பரையும் அழைத்து வரவும். பின்குறிப்பு: அப்படி ஒருவர் இருந்தால்’’ என்று எழுதி அனுப்பினார். சர்ச்சில் பார்த்தாரு.. அதே டிக்கெட்டுகளை வேற கவர்ல போட்டு கூடவே அவர் ஒரு லெட்டர் வெச்சாரு: ‘‘நீங்கள் அனுப்பியுள்ள தேதியில் பிஸியாக இருப்பதால் என்னால் நாடகத்துக்கு வர இயலாது. இரண்டாவது முறை நாடகம் நடக்கும்போது டிக்கெட் அனுப்பவும். பின்குறிப்பு: அப்படி இரண்டாம்முறை நடந்தால்’’ன்னு எழுதி அனுப்பினார். ஷாவுக்கு சரியான மூக்குடைப்பு! சர்ச்சில் பேச்சுலகூட வல்லவருங்க. பாராளுமன்றத்துல ஒருமுறை அவர் பேசிக்கிட்டிருந்தப்ப, அவர் பேச்சுக்கு ஈடுகொடுத்து வாதாட முடியாத எதிர்க்கட்சி பெண் எம்.பி. ஒருவர் கோபமாயி, ‘‘நீங்க மட்டும் என் கணவரா வாய்ச்சிருந்தா, காப்பியில விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்’’ அப்படின்னாங்க. சர்ச்சில் ரொம்பக் கூலா... ‘‘உங்களை மாதிரி எனக்கு மனைவி வாய்ச்சிருந்தா, அதை சந்தோஷமா வாங்கிக் குடிச்சிருப்பேன்’’ன்னு சொன்னாரு பேச்சில் வல்ல அந்த மேல்நாட்டு அறிஞர்.

மேல்நாட்டு அறிஞர்
மட்டுமில்லீங்க..  நம்நாட்டு அறிஞர்களும் பேச்சில் வல்லவங்கதான். அறிஞர் அண்ணா முதல்வரா இருந்தப்ப, பார்லிமென்ட்ல ஒரு எதிர்க்கட்சி நபர், ‘‘எங்க ஆட்சியிலதான் புளிய மரங்கள் நிறைய நட்டு. புளி விளைச்சல் அதிகமாகி புளியின் விலை குறைஞ்சது. இது யாருடைய சாதனை?’’ன்னு மேஜையில குத்திக் கேட்டாரு. அறிஞர் அண்ணா அலட்டிக்காம, ‘‘அது புளிய மரத்தின் சாதனை’’ என்று சொல்லி அவையை கலகலக்க வைத்தார். அரசியலுக்கு அடுத்தபடியா அண்ணாவுக்குப் பிடிச்ச விஷயம் சினிமா.

சினிமா
ன்னதும் கண்ணதாசன் நினைவு வருது. ஒரு படக் கம்பெனியில அவரை பாட்டெழுதக் கேட்டாங்க. அவர் பிஸியா இருந்ததால அப்புறம் பாக்கலாம்னாரு. ‘‘மேயில சிங்கப்பூர்ல ஷூட்டிங் நடத்தணும் கவிஞரே...’’ன்னு அடுத்த வாரம் வந்து கேட்டாங்க. அப்பவும் பிஸி. ஏப்ரல் மாசம் முடிய ஒரு வாரம் இருந்தப்ப, எம்.எஸ்.வி.யோட வந்தாங்க. அவர் ‘‘கவிஞரே... மேயில ஷூட்டிங் போகணும்கறாங்க. பாட்டு...’’ன்னு கேக்கவும், கவிஞர் கோபமா, ‘‘என்னடா விசு மே... மேன்னுக்கிட்டு... இந்தா பாட்டு! அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் ‌எழில் வண்ணமே, கன்னித் தமிழ் வண்ணமே’ன்னு மே மேயாப் போட்டு அஞ்சே நிமிஷத்துல பாட்டு எழுதிக் குடுத்து அசர வெச்சாராம் அந்த மகத்தான கவிஞர்.

நான், திரு.அசோகமித்திரன், சீனு.
கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் ஒரு பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல வாத்யாருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா உங்க படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது’’ அப்படின்னாரு. எம்.ஜி.ஆர். வியப்பா, ‘‘ஏன் அப்படிச் சொல்றே?’’ன்னு கேக்கவும், ‘‘என் பேர் டைட்டில்ல வராம உங்க படம் வந்தா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு அசிங்கமா இருக்கும் அண்ணே!’’ன்னு வாலி சொல்லவும் கோபத்தை மறந்த குபீர்னு சிரிச்சுட்டாரு எம்.ஜி.ஆர்.

அதாங்க சிரிப்போட சக்தி! மனம் விட்டுச் சிரிச்சா எப்படிப்பட்ட கோபமும் போய்டும். கோபப்படறதுக்கு உடம்பில 247 நரம்புகள் செயல்படணுமாம். ஆனா சிரிக்கறதுக்கு 27 நரம்புகள் மட்டும செயல்பட்டா போதும், மனசும் லேசாயிடும். அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற சிரிப்பை எல்லாருக்கும் அள்ளி வழங்கி மகிழ்விக்கிற இந்த சிரிப்பரங்கத்துல,‌ பெரிய எழுத்தாளர்களுக்கு மத்தியில இந்த சிறியவனும் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்த நண்பர் சிரிப்பானந்தாவுக்கும், பொறுமையாக் கேட்ட உங்க எல்லாருக்கும் என்னோட மனம் நிறைந்த நன்றி!

....என்ன பாக்கறீங்க...! நேத்துக்கு அம்பத்தூர்ல நடந்த ‘சிரிப்பரங்கம்’ நிகழ்ச்சியில நான் பேசின உரை (சந்தடிசாக்குல சுயதம்பட்டம் அடிச்சுக்கலைன்னா நாமல்லாம் பதிவரே இல்லியே... ஹி... ஹி...) இது. எழுத்தாளர் அசோகமித்திரனும், லதா சரவணனும் சிற(ரி)ப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். ‘பிரபல பதிவர்’ நம்ம சீனுவும் வந்திருந்தார். மனதுக்கு மகிழ்ச்சி தந்த அந்த மாலைப் பொழுதில் நான் பேசிய இந்தப் பேச்சை ரசித்துக் கேட்ட பலரும் பாராட்டியதில் மன நிறைவோடு வீடு திரும்பினேன்.

=============================================================
மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-2
=============================================================

Saturday, March 9, 2013

மொறுமொறு மிக்ஸர்-16

Posted by பால கணேஷ் Saturday, March 09, 2013
 ‘‘டாக்டர்... எனக்கு மூச்சு விடறதுல ப்ராப்ளம் டாக்டர். ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்றபடி டாக்டரிடம் வந்தான் ஒருவன். ‘‘நோ ப்ராப்ளம்... நான் கம்ப்ளீட்டா நிறுத்திடறேன் -மூச்சு விடறதை!’’ என்றாராம் டாக்டர். CCTP என்கிற சென்‌னை போக்குவரத்துக் காவல் துறையும் அந்த டாக்டர் மாதிரிதான் நடந்து கொள்கிறது. அசோக் நகரிலிருந்து வடபழனி கங்கையம்மன் தெருவுக்கு போக வேண்டுமென்றால் நான் அம்பேத்கர் சிலையருகில் வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். இப்படி திரும்புபவர்களால் டிராஃபிக் ஜாம் ஆகிறது, அதை கவனிக்க கஷ்டமாக இருக்கிறது என்று எந்த கான்ஸ்டபிள் புண்ணியவானோ புலம்பியிருக்க வேண்டும்...! ‘நோ ரைட் டர்ன்’ என்று ‌போட்டு, போகிற வழியெல்லாம் இடைவெளிகளில் டூ வீலர் திரும்ப முடியாதபடி கற்களைப் போட்டு (நல்லா இருப்பீங்கடா!) என்னை லக்ஷ்மன் ஸ்ருதி வரைக்கும் கொண்டு போயிட்டாங்க படுபாவிங்க. வேற வழியில்லாம மெயின்ரோடுல வடபழனி போய், சுத்தி வந்தேன். மூணு கிலோமீட்டர் வெட்டி பெட்ரோல் செலவு.

இதுக்கு ஒரு வயித்தெரிச்சலான பின்கதை என்னன்னா... கங்கையம்மன் ‌கோயில் தெருவுல என் வேலைய முடிச்சுக்கிட்டு வர்றப்ப, எந்த இடத்துல வலதுபக்கம் திரும்பக்கூடாதுன்னு என்னை கான்ஸ்டபிள் விரட்டினாரோ அதே இடத்துல நாலஞ்சு மோட்டார் பைக் காரங்க, ஒரே நேரத்துல ‘போடாங்க...’ என்கிற மாதிரி அவர் கண்ணெதிரி‌‌லேயே வேகமாக திரும்பிக் கடந்து சென்றார்கள். தனி ஆளா செஞ்சா தப்பு, கும்பலா செஞ்சா தப்பில்லங்கற சென்னைவாசிகளோட மனோபாவம் சரிதான் போலருக்கு!

===============================================

ப்ப ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். தமிழில் சில புகழ்பெற்ற நாவல்களி்ன் பெயர்களை இங்கே குறிப்புகளாகக் கொடுத்திருக்கேன். தலைப்புகள் என்னங்கறதை நீங்க கண்டுபிடியுங்க (இந்த முறை நிச்சயமா விடை நான் சொல்ல மாட்டேன்பா)

1. ஒரு ஆள் அடை அணியாம இருந்தா நிர்வாணம் என்போம். ஒரு சிட்டியே ஆடை அணியாம இருந்தா என்ன சொல்வீங்க? சுஜாதா எழுதிய த்ரில்லர் இது.

2. பெரிய பெண் உருவ விளக்கு அல்லது  Explain The Poetry -இந்த வாக்கியத்தை தமிழ்ப்படுத்துங்கள். அகிலன் எழுதிய புகழ்பெற்ற நாவல் இது!

3. மன்னர்கள் அனுப்பும் ஓலைகளில் விஷயங்களை எழுதினதுக்கப்புறம் பதிக்கப்படறது இது. சாண்டில்யன் எழுதிய நாவல்!

4. விமானம் பறக்கறதைப் பாக்கறதே தனி அழகு! இவங்க குறிப்பிடற விமானங்களைப் பாக்கறது இன்னும் ரசனையானது! இந்துமதியின் பெயரை இன்றும் அழுத்தமாய் பதிவு செய்து கொண்டிருக்கும் படைப்பு இது.

5. ‌கொலை பண்றது பாவம்ங்க. ஆனா மருத்துவர்கள் இந்தக் கொலையப் பண்ண அனுமதிக்கணும்னு ஒரு கோரிக்கையும் அதுக்கு மறுப்புகளும் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. சிவசங்கரி எழுதிய மனதைத் தொடும் நூல் இது!

மீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. தமிழ் உணர்வுள்ளவர், போராட்ட குணமுள்ளவர் என்றெல்லாம் அறியப்படும் ஒருவர் எழுதியிருந்த நூல் அது. புத்தகத்தில் அவர் சொல்லவந்த கருத்துகள் தமிழர்களுக்கு எழுச்சியூட்டறதா அமைஞ்சிருந்தது. ஆனா நாலைஞ்சு பக்கங்கள் படிச்சதுமே நான் புக்கைத் தூர எறிஞ்சிட்டேன். காரணம்...? அவர் எழுதியிருந்த் வாக்கியங்கள் - தமிழ்க் கற்றவன் நான் - செய்துக் கொண்டிருந்தேன் - இப்படி எங்க எங்க ஒற்று வரக்கூடாதுன்னு கூடத் தெரியாம ஏராளமா ‘ப்’ ’க்’ ‌போட்டு எழுதியிருந்தார். அடப்பாவிகளா...! இப்படில்லாம் நீங்க ‘வாழ’ வெக்காம இருந்தா தமிழ் தானா வாழ்ந்துரும்டா... இலக்கணத்தைப் படிச்சு, பிழையில்லாம எழுதத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் தமிழ் உணர்வைப் பத்திப் பேசுங்கய்யா...! (எழுத்துப் பிழைகள் யாருக்கும் வரும். அவை மன்னிக்கப்படலாம் என்ப‌தை நான் நன்கறிவேன். இங்க நான் சொல்லியிருக்கறது தமிழை வாழ வைக்கிறேன்னு புலம்பற, கர்ஜிச்சுக்கிட்டிருக்கற சிங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்) முண்டாசுக் கவிஞர் இதையெல்லாம் மனசுல தீர்க்கதரிசனமாப் பாத்துட்டுதான் ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’னு எழுதினாரோ!

===============================================

ப்பாதுரை ஸார் கிட்ட அப்ரெண்டிஸாச் சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தமி்ழ்ப் பாடல்களை ஆங்கிலத்துல என்னமா முழிபெயர்த்து... ஸாரி, மொழிபெயர்த்து சப்-டைட்டில் எழுதறாரு! இங்கே க்ளிக்கி படியுங்க! நானும் ஒன்றிரண்டு ட்ரை பண்ணினேன்...

Why? Why? Why?                         Went to buy air
Lifting a Bowl - why?                      bought a poetry
Swimming in many thoughts       she asked and bought
Why? Why? Why?                          what happend to that virgin?


என்ன அப்பா ஸார்... என்னை அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குவீங்கதானே? ஹி... ஹி... ஹி...

===============================================

முன்னணி தமிழ் நாளிதழ்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது. முந்தாநேத்து ஒரு முன்னணி நாளிதழ்ல போஸ்டர் நியூஸ் இப்படி - ‘பெண்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்! அடப்பாவிகளா... மூளை வேலை செய்யாமலா மேரிக்யூரி ரெண்டு நோபல் பரிசு வாங்கினாங்க? விண்வெளில பறந்த கல்பனா சாவ்லாவுல இருந்து கல்வியறிவு இல்லாத மதுரை சின்னப்பொண்ணு வரை எத்தனையெத்தனை பெண்கள் சாதிச்சிருக்காங்க!  ‘பெண்களின் மூளை வேலை செய்யும் விதம்- அதிர்ச்சி தகவல்கள்’னு தலைப்பு குடுத்திருந்தா நியாயம்! அதவிட்டுட்டு மணிமேகலை பிரசுர புத்தகத் தலைப்பு மாதிரி இப்படியா வெப்பீங்க?

இன்னொரு முன்னணி நாளிதழ்ல இப்படி நியூஸுக்குத் தலைப்பு தந்திருந்தாங்க. ‘மெரீனாவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!’ என்னது...? பாலச்சந்திரன் மெரீனாவுல கொல்லப்பட்டாரா?ன்னு அதிர்ந்து போய் செய்தியப் படிச்சதும்தான் புரிஞ்சது... பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து மெரீனாவில் ஆர்ப்பாட்டம்’னு தலைப்பு வந்திருக்கணும்கறது. என்ன க்வாலிபிகேஷன்ல நிருபரையும், உதவி ஆசிரியரையும் வேலைக்கு வெச்சு இப்டில்லாம் வெளியிடறாங்களோ... என்னமோ போடா மாதவா...!

===============================================

Ohkay! To end with a smile...

* One spelling error or omission of a letter can destroy your life- A husband messaged his wife: "I'm having a wonderful time, Wish you were her"

* The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!

Ha..! Ha..! Ha...!
See you, Bye!

===============================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-1

=============================================== 

Thursday, March 7, 2013

சண்டைகள் பற்றி வாத்யார்!

Posted by பால கணேஷ் Thursday, March 07, 2013

ங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?

வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!

டத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா‌கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

ங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்‌ நம்பக் கூடாது? அர்ஜுனன் ‌போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

ங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

த்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்‌களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
.

============================================

ல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு வருடங்களில், பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் திலகம் அளித்த பேட்டிகளைத் தொகுத்து, ‘‘‘எம்.ஜி.ஆர். பேட்டிகள்’ என்று ஒரு தொகுப்பு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் எஸ்.கிருபாகரன் என்பவர். 208 பக்கங்களில் 130 ரூபாய் விலையில் மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. (Manonmani Pathipagam, 35/14, East Rajaveethi, Opp: Babu Suriya Hote near bus stand, Kanchipuram-631 501. Email: kirubakar08@yahoo.com) அந்த நூலிலிருந்து சண்டைக் காட்சிகள் பற்றி வாத்யார் கூறியவற்றை மட்டும் தொகுத்து இங்கு அளித்திருக்கிறேன். புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்: நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!

============================================

Wednesday, March 6, 2013

அடங்கொண்டு போராடிய சீனு!

Posted by பால கணேஷ் Wednesday, March 06, 2013

தி்ங்கள்ன்று மாலை பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த பார்க்கில் நாம் சந்திக்கலாம் என்று போன வாரமே சீனு சொல்லியிருந்தான். ஸாரி, ‘ர்’. நேற்று மாலை கிளம்பும்முன் அவரின் செல்லுக்கு போ்ன செய்தால் முழு ரிங் போயிற்று. எடுக்கவே இல்லை. சரி, பார்க்கில் பேசிக் கொள்ளலாம் என்று 6.30 மணிக்குச் செல்ல வேண்டியதை என் வழக்கப்படி 6.25க்கு அடைந்து விட்டேன். பார்க் வாசலில் என் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தேன்.

என் கண்களையே நம்ப முடியவில்லையே... நடைபாதைகள் சுத்தமாய் துடைத்து வைக்கப்பட்டு ஒரு அழுக்கை காணோம். செடிகள் அழகாய் கத்தரித்து ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. ‘சார் டீ’ என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டு அலையும் ஒருவரையும் காணோமே... ஏதோ தவறிப் போய் சிங்கப்பூர் பார்க் ஒன்றில் நுழைந்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது. இப்படிப் பராமரிக்கும் மாநகராட்சிக்கு ஜே!

-இப்படியெல்லாம் எழுதத்தான் ஆசை எனக்கு. ஆனால் முடியலையேஏஏஏஏ! வழக்கம் போல முன்னால் வரும் வட்ட பீடத்தின் மத்தியில் அதிகம் அழுக்குப் படாத ஒரு இடமாகப் பார்த்து அமர்ந்தேன். தவறாமல் அருகில் வந்து ‘டீ வேணுமா சார்?’ என்றார் வியாபாரி. சீனு வரும் வரை பொழுதுபோகட்டுமே என்று அங்கு வட்டப்பாதையைச் சுற்றி நடந்து கொண்டிருந்த ஜனங்களை நோட்டமிட்டேன். நடையர்கள்தான் எத்தனை விதம்! மிலிட்டரி மார்‌ச் போல கைகளை வீசி சீரான ஒழுங்குடன் நடந்து செல்லும் முதியவர், ‘என்னையாடா சண்டைக்குக் கூப்பிட்டே?’ என்கிற தினுசில் கைகளை வீசி அதிர அதிர நடந்து வரும் ஒரு குண்டு மாமி, அது நடையா இல்லை ஓட்டமா என்று தெரியாதபடி நடையோட்டமாகச் சென்ற ஒரு மத்திய வயது நபர், பின்னாலேயே அவர் நடந்து வருகிறாரா, இல்லை காற்று அவரைத் தள்ளிக் கொண்டு வருகிறதா என்ற குழப்பம் ஏற்படும்படி நம்ம ‘சேட்டையண்ணா’ மாதிரி ஊசி உடம்புடன் ஒருவர், அதற்குப் பின்னால் ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு.. காதலன் - என்றுதான் நினைக்கிறேன். கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, தோளில் கை போட்டிருக்க மாட்டான் - அப்பப்பா... விதவிதமான மனிதர்களைப் பார்த்ததில் பொழுதுபோனதே தெரியவில்லை.

சீனு வந்து சேர்ந்ததும் கோபமாக, ‘‘ஏண்டா பாவி இவ்வளவு லேட்?’’ என்றேன். அவரின் டிரேட் மார்க்கான ‘ஹீ... ஹீ...’ என்கிற சிரிப்பை உதிர்த்துவிட்டு ‘ஆதிபகவன்’ படத்தை மேட்னி ‌‌ஷோவில் பார்த்துவிட்டு வந்த ‘ஆனந்த அனுபவ’த்தை புலம்பித் தள்ளினார். அவஸ்தைப்பட்டது அவர்தானே, நானல்லவே... ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கையோடு கொண்டு வந்திருந்த நான் கேட்டிருந்த ‘டாலர் நகரம்’ புத்தகத்தை எனக்களித்தார் சீனு. ‘‘ஏன் வாத்தியாரே எப்பவும் பழைய படங்களையும் பாட்டுகளையும் ரசிச்சு எழுதறீங்க...? புதுப் படங்களை எழுதினா என்ன?’’ என்று கேட்டார் சீனு. அதன் பின்விளைவுகளை அறிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டார்.

‘‘அதில பார் சீனு... புதுசா ஒரு படம் வெளியானதும் அதைப் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுதறதுக்கு கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பி.பிரபாகரன், மெ.ப. சிவகுமார், இப்ப நீயின்னு ஒரு குரூப்பே இருககு. இவங்களோட போட்டி போட்டு புதுப்படங்களை எழுதற அளவுக்கு எனக்கு ஸ்பீட் பத்தாதுங்கறது ஒரு காரணம். பழைய படங்களைப் ப்த்தி எழுதறதுக்குக் காரணம்... அப்பல்லாம் ஹீரோங்கறவன் நல்லவனா இருந்தான், கெட்ட காரியங்களைச் செய்யறதுக்கு வில்லன் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ டபுள் ஆக்ட் பண்ணினா மட்டும் ஒரு கேரக்டர் வில்லனாவும், ஒண்ணு ஹீரோவாவும் நடிப்பாங்க. 

ஆனா இப்ப... நீ பாத்துட்டு வந்த படத்தையே எடுத்துக்க... ஆதி அயோக்கியன், பகவன் பரம அயோக்கியன். படம் பூரா வர்றதுனால அந்த நடிகர் ஹீரோ! அப்படித்தானே?. விளங்கிரும்! ஹீரோயின் ஓவரா எக்ஸ்போஸ் பண்ண முடியாதுங்கறதால ஐட்டம் சாங் பண்றதுக்குன்னு அப்ப தனி ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க. இப்ப... ஹீரோயினே எல்லாத்தையும் பண்ணிடறாங்க. பழைய படங்கள்ல ஒரு கிறிஸ்தவர் கெட்ட காரியம் பண்றதா காட்டினா, அதே படத்துல இன்னொரு கிறிஸ்தவர் கேரக்டர் நல்லவரா, நல்லதுக்காக உயிரையும் விடறவரா காட்டப்படும். இப்ப... ரியலிஸத்தை காட்டறேன் பேர்வழின்னு தீவிரவாதம், பயங்கரவாதம்லாம் அப்படியே படமாகுது. அந்தக் கண்றாவியத்தான் பேப்பர்லயும், ஊடகங்கள்லயும் பாத்துத் தொலைக்கறோமே... இவிங்கவேற காட்டணுமா?

அன்பை வளர்க்கற மாதிரி படங்கள்தான் இப்பத் தேவை. தன் சித்தப்பா ஹார்ட் அட்டாக்ல ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாக்கூட சாத்துக்குடியும், ஹார்லிக்ஸும் குடுத்துட்டு, ஒரு தடவை பாத்துட்டு வந்துட்டா ‌போதும்கற அளவுலதான் இப்பல்லாம் பாசம் இருக்குது. இன்னொரு குடும்பத்தை கெடுக்கவும்... சில சமயங்கள்ல சொந்தக் குடும்பத்‌துலயே ஒருத்தரை வாழ விடாம செய்யவும் திட்டம் போடறதை விஸ்தாரமா காட்டி நம்ம டி.வி. சீரியல்கள் கட்டிக்கிட்ட புண்ணியம் அது! ஆகவே அன்பு, நட்பு மாதிரி நல்ல விஷயங்களைச் சொன்ன பழைய படங்களதான் என்னோட சாய்ஸ் சீனு! நீ குறிப்பிடற பழைய படங்கள் வந்த காலத்துல 20 படங்கள் வந்தா அதுல மூணு சொத்தையா இருக்கும். இப்ப... 20 படங்கள் வந்தா அதுல மூணுதான் நல்லதா இருக்குது... என்ன சொல்றே?’’ என்றேன்.

‘இப்பிடி தனியா வந்து மாட்டிக்கிட்டேனே’ங்கற மாதிரி சீனு ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டே தலையாட்டினாரு. பார்வை மட்டும் சுத்திலும் அலைபாய்ஞ்சுட்டிருந்துச்சு. (என்னை மாதிரி) வாலிப வயசு பாருங்க... ஹி... ஹி..! நான் விடாம, ‘‘சரி... அடுத்த மேட்டரை கவனி. நகைச்சுவைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ படம் சமீபத்துல ஹிட்டாச்சு. நான் கவனிச்ச வரைக்கும் சந்தானம் அடிக்கற பஞ்ச் பூராவுமே பவர்ஸ்டாரை கலாய்ச்சுதான். இல்லாட்டி மத்த படங்கள்ல கூட வர்ற (ஹீரோ உட்பட) கேரக்டர்ஸை வார்றார். இதப்பாத்து ஜனங்க சிரிக்கறாங்க. இது எத்தனை நாள் தாங்கும்? ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்ள புகுந்த ஒரு பெருச்சாளியை அடிச்சுக் ‌‌கொல்றேன்னு மத்த நகைச்சுவை நடிகர்கள் துணையோட ஒரு கலாட்டா பண்ணுவாரு பாரு... அது காமெடி! சாப்ளின் ஸ்டைல்! வெறும் டயலாக் பேசி சிரிக்க வெக்கறது மட்டுமில்ல காமெடி...’’ என்றேன்.

‘‘கரெக்ட் வாத்யாரே... உலகத் தலைவர்கள் பத்தி நீங்க எழுதறது ரொம்ப நல்லாயிருக்கு’’ என்று வேகமாக டாபிக் மாற்றினார் சீனு. சரி, பயல் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டு, ‘‘அதுசரி... நீ நகைச்சுவை சிறுதை எழுதப் போறதா சொன்னியே... எங்கப்பா இன்னும் காணம்? அடிக்கிற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கி, நானும் சேட்டைக்காரனும், பேட்டைய விட்டே ஓடியிருக்க வேணாமா?’’ என்று கேட்டேன். இடுப்பில் கை வைத்து (நோ... நோ...அவர் இடுப்புல தாங்க..!) முறைத்தார் சீனு. ‘‘வாத்யாரே... நீங்க பேசறது உங்களுக்கே ஓவராத் தெரியலையா? ‌எழுதறேன்னு மட்டும்தானே நான் சொன்னேன்... கொஞ்சம் முக்குனதுல கழு்த்துவரை வந்துட்டுது. விரல் வழியா இறகக வேண்டியதுதான் பாக்கி’’ன்னார். ‘‘அவலோட... ச்சே, ஆவலோட காத்திருக்கேன். சீக்கிரம் இறக்கிடுய்யா ராசா’’ என்றேன் நான். அதன்பின் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டி விட்டதால் காற்று வரவில்லை, அதற்குப் பதில் கொசுக்கள்தான் அதிகம் வரத் துவங்கின என்பதால் எங்கள் ‘கச்சேரி’யை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

====================================================

பி.கு.: அப்பனே சீனு! ‘நான் எப்போ வாத்யாரே பார்க்குக்கு வந்தேன்? இப்பிடி என்னை மாட்டி விட்டுட்டீங்களே’ன்னு அப்பாவித்தனமா கமெண்ட் போட்டுராத! நேத்து போன் அடிச்சும் நீ எடுக்காதததால நான் மட்டும் பார்க் போய் காத்து வாங்கினேன். அப்படியே நீ வந்தா என்ன பேசியிருப்போம்ங்கறதை மனசுல ஓட்டி எழுதிட்டேன்கற விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்! யார்ட்டயும் சொல்லிராத! அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பயும் சொல்லிராத! (இனிம போன் பண்ணினா பயபுள்ள எடுக்காம இருக்கும்கறீங்க... ஹி... ஹி...)

====================================================

Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013

==============================================================
முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.
==============================================================

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’  பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்‌ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்‌னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

==============================================================
ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா? சொன்னீங்கன்னா, அவரோட பழைய பேட்டிகள்லருந்து தொகுத்து ஒரு பதிவா தந்துடறேன். (ஹையா! இன்னொரு பதிவு தேத்த ஐடியா கிட்டிருச்சு. ஜாலி!)
==============================================================

Friday, March 1, 2013

தெரியுமா இவரை? - 4

Posted by பால கணேஷ் Friday, March 01, 2013
========================================================
‌எச்சரிக்கை : சற்றே நீண்ட பயணம்! கவனமாகச் செல்க!
========================================================

                         ஹோசிமின் (Ho Chí Minh)

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில் சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்‌துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘‌ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்‌கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.

வியட்நாமுக்கு அவர்  திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த  கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.

1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.

போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.

அசைவின்றி, சத்தமின்றி எரியும் புத்தபிட்சு!
பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா  பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.

எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.

1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அது‌வரைக்கும் ‌ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.

கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட ‌கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube