Monday, October 29, 2012

பிரமிக்க வைக்குது ஃபிஜித் தீவு

Posted by பால கணேஷ் Monday, October 29, 2012
‘‘பூலா! பூலா!! லாக்கமாய்!!!’’

எனக்கு என்ன ஆச்சோன்னு யோசிக்கறீங்களா? ஒண்ணுமில்லீங்க. ‘‘வணக்கம்! வணக்கம்!! வாங்க!!!’’ அப்படிங்கறதைத்தான் பிஜியர்களின் மொழியில் சொன்னேன். உபயம் - ஃபிஜித் தீவு (கரும்புத் தோட்டத்திலே...) நூலின் ஆசிரியர் துளசி கோபால். நம்ம துளசி டீச்சர் தாங்க!  கோபால் சாரோட பணி நிமித்தமா ஆறு வருடங்கள் பிஜித் தீவில் வாழ்ந்திருந்த சமயம் அங்க அவங்க கவனிச்ச எல்லாவற்றையும் இந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்காங்க.

பிஜித் தீவில் தமிழர்கள் குடியேறிய விதம், தமிழர்களுடன் சம அளவில் குஜராத்திகளும் அங்கு வாழ்வதன் பின்னணி, ஃபிஜித் தீவு மக்களின் கலாசசாரம், வாழ்க்கை முறை, தீவி்ன் எழில், அவ்வப்போது விஸிட் அடிக்கும் புயல் விளைவிக்கும் கோரம், தத்துப் பிள்ளைகள் எளிதாகக் கிடைப்பது, பெண் கர்ப்பமானால் புரளி பேசியே சாகடிக்கும் பழக்கம் அங்கில்லை என்பது போன்ற விவரங்கள், ஃபிஜி்த் தீவின் அரசியல் வரலாறு -இப்படி எல்லாக் ‌கோணங்கள்லயும் அந்தத் தீவை அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்காங்க துளசி கோபால்.

புத்தகத்தைப் படிச்சு முடிச்சப்புறம், முன்னபின்ன ஃபிஜித் தீவைப் பார்த்திராதவங்க கிட்ட, நீங்களே அங்க பல வருஷம் வாழ்ந்ததா ரீல் விட்டு மணிக் கணககாப் பேசி அசத்தலாம். (நான் அந்த மாதிரி யார்ட்டயும் டூப் விடலீங்கோ!) அந்த அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்குது. அதுக்காக ஒரே புள்ளி விவரங்களும், தகவல்களுமா போரடிக்கிற புத்தகம்னு மட்டும் நினைச்சிடாதீங்க.
 துளசி டீச்சருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவை ததும்பற நடையில ஒரு கதைப் புத்தகம் படிக்கிற சுவாரஸ்யத்தோடதான் புத்தகத்தைப் படிக்க முடியுது.  தான் சந்திச்ச, கவனிச்ச அனுபவங்களின் ஊடாக நிறையத் தகவல் அறிவையும் தேன்ல மருந்தைக் கலந்து கொடுக்கற மாதிரி நமக்குள்ளே புகுத்திடறாங்க நூலாசிரியர்.

புத்தகத்தின் மின்னல்களில் சில : ஒரு சமயம் புயல் அடிச்சு ஓய்ஞ்ச நேரம் காரை எடுத்துக்கிட்டு வெளிய சுத்தறாங்க.  அப்ப...

வ்வளவா சேதாரம் இல்லைன்னு வீட்டுக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம். நம்ம தெருமுனைக்கு வரும்போது ஒரு பெரிய சத்தத்துடன் காத்து கிளம்புது. அப்படியே வண்டியை தூக்கப் பாக்குது. அடிச்சுப் புடிச்சு வீட்டுக்குள்ள போயிட்டோம். அப்புறம் தொடர்ந்து ஒரு 25 நிமிஷம் புயலடிச்சது பாருங்க... ஒரே நடுக்கம்தான்! கடைசியில்தான் விவரம் தெரியுது-

பெரிய புயல் சுழிச்சு சுழிச்சு உருவாகும் போது அதுக்கு நடுவில ஒரு வெற்றிடம் இருக்குமாம். அதுக்கு ‘புயலின் கண்’ னு பெயராம். (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே! அதைத்தான் புயல் நின்னு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் அமைதியாக் கடந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய புயலா இருக்கணும் பாருங்க!

* (ஃபிஜித் தீவின் கடற்கரையில்) பகலுணவுக்கு மணி அடித்தவுடன் அனைவரும் போய் தட்டுகளில் அவற்றை எடுத்துக் கொண்டு திரும்ப மணல்வெளியில் அமர்ந்து சுற்றிலும் உள்ள கடலை ரசித்த படி உண்ணலாம். கட்டிடத்தி் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லாரும் வெளியே இருக்கவே விரும்புவார்கள். ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்! ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது. அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல் பகுதி! ‘ஸ்நோர்கேல்’ செய்யும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.

* ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமானால் அடகுக் கடைக்குப் போவார்கள். இதிலென்ன அதிசயம்! அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைககும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது. அது பல்! சாதாரணப் பல் அல்ல, ‘திமிங்கலப் பல்!’ இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்புக் கூடும். ஒரு ‘பல்’லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக் கழுத்தில் அணிவார்கள். சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும். இதன் உருவம் ஃபிஜி நாணயத்திலும் பதிக்கப்பட்டு்ள்ளது. மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ, அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட விருந்தினருக்கோ இந்த ‘பல் மாலை’ அணிவிப்பார்கள்.

* அட்ரெனலின் வாட்டர் ஸ்போர்ட்ஸ். மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல் வந்து வாய்க்குள்ள விழுந்தாப் போலே அலறணுமாம். ஃப்ளையிங் ஃபிஷ்ன்னு ஒண்ணு. கையில பிடிச்சுக்க வாகாய் ஒண்ணுமே இல்லாத ரப்பர் / பிளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டு காலை மட்டும் கீழே இருக்கும் ஒரு பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு... அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி.... இதுக்கு 29 டாலர் டிக்கெட் :))))   நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும் போதே... வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு... :)))))

-இப்படித்தாங்க... எளிமையான சுவாரஸ்யமான நடையில நிறைய விஷயங்களையும் இந்த புத்தகத்துல இருந்து தெரிஞ்சுககிட்டேன். எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தை நீங்களும் பெறணும்னு விரும்பினீங்கன்னா... 208 பக்கங்கள் கொண்ட இந்தப் பயனுள்ள புத்தகத்தை சென்னை அசோ்க் நகர்ல 9வது அவென்யூவுல 53வது தெருவுல பு.எண்.77ல இருக்கற சந்தியா பதிப்பகம் ரூ.120 விலையில வெளியிட்டிருக்காங்க. போய் வாங்கிக்குங்க. அது செளகரியப்படாதவங்களுக்காக அவங்களோட தொலைபேசி எண் : 044-24896979 ங்கறதையும், www.sandhyapublications.com ங்கற அவங்களோட இமெயில் ஐடியையும் தெரிவிச்சுக்கறேன்.
===================================
பின்குறிப்பு : இந்த புத்தகத்துக்கு என்னைவிட அருமையா என் ஃப்ரண்ட் (என் நண்பரின் மனைவி) விமர்சனம் எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும் தான் இந்த நூலைப் படிக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். இங்க க்ளிக்கி அதை நீங்க படிக்கலாம்.
===================================

Saturday, October 27, 2012

சிரித்திரபுரம் - 6

Posted by பால கணேஷ் Saturday, October 27, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Friday, October 26, 2012

மொறு மொறு மிக்ஸர் - 14

Posted by பால கணேஷ் Friday, October 26, 2012

தெள கீர்த்தனாரம்பத்திலே... லோகத்திலே நல்ல விஷயங்களைச் சொல்றவா குறைஞ்சு போயிட்டா இந்தக் காலத்துல. அதனால நாம நல்லதா சில வார்த்தைகளை முதல்ல காதுல போட்டுண்டுரலாம். அப்புறமா மனசுலயும் போட்டுக்கலாம்...  இந்தப் புள்ளையாண்டான் வெளிநாட்டுக்காரனா இருந்தாலும் எவ்வளவு ‌ஜோராச் சொல்லியிருக்கான் பாருங்கோ...

)- நீ காட்டுவதை விட அதிகமாக வைத்திரு. நீ அறிந்தவற்றை விடக் குறைவாகப் பேசு. உன்னிடம் இருப்பதைவிடக் கொஞ்சமாகக் கொடு.

)- நீ கொடுப்பது பெரிய கொடையாக இருந்தாலும் அன்பு இன்றிக் கொடுத்தால் அது கொடையாகாது. தேய்ந்து போகும்.

)- உன்னுடைய நோக்கத்தை வாளின் மூலம் சாதிப்பதைவிட நகை முகத்தால் சாதிக்கக் கற்றுக் கொள்!

                                                                                                -ஷேக்ஸ்பியர்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

‘நன்றி’ என்கிற வார்த்தை ஏனோ நிறையப் பேரின் அகராதியில் மிக அபூர்வமான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. ஓட்டலில் உங்களின் விருப்பத்தையும், அவசரத்தையும் புரிந்து உடனே கவனிக்கும் சப்ளையருக்கோ, பெட்டிக் கடையில் அல்லது அருகில் நிற்பவரிடம் விலாசம் விசாரித்து அவர்கள் வழி ‌சொல்லும் போதோ... இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லை உதிர்க்காமல் பலர் சென்று விடுவதைக் கண்டிருக்கிறேன் நான்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் ‘வணக்கம், நன்றி, குட்பை’ ஆகியவைதான் என்று படித்திருக்கிறேன். அங்கெல்லாம் பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் வாடிக்கையாளரிடம் ‘நன்றி’ என்பார் கடைக்காரர் சில்லறை பாக்கியை கடைக்காரர் தரும் போது வாடிக்கையாளர் ‘நன்றி’ என்பார். ‘நன்றி’ என்கிற எளிய சொல்லும், ஒரு குறுநகையும் நிறையச் சாதிக்கும்.

நியாயமான தொகை கேட்கும் ஆட்டோக்காரருக்கு, கவுண்ட்டிங்கில் ஃப்ராடு பண்ணாமல் பெட்ரோல் போடும் பங்க் காரருக்கு, குறைந்த தொகை வாங்கும் மருத்துவருக்கு, தொகுதிப் பக்கம் வந்து நற்பணி செய்யும் (அப்படி எவரேனும் இருந்தால்) அரசியல் பிரமுகருக்கு, உங்களுக்காக வாகனங்களை நிறுத்தி நடக்க வழி செய்து தரும் போக்குவரத்துக காவலருக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ சொல்லப் பழகலாம் நாம் என்பது என் கருத்து. அந்தச் சொல் தரும் உற்சாகம் அவர்களை நிஜமாகவே சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

க்காலத் திரைப்படப் பாடல்கள் தமிழ்ப் பாடல்களாக இல்லாமல் ஆங்கிலம் கலந்து வருகின்றன. சில சமயங்களில் தமிழை விட ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது என்பதை முன்பொரு பதிவில் அங்கலாய்த்திருந்தேன். எ‌தேச்சையாக பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்றைப் புரட்டியபோது இந்தத் தகவல் கண்ணில் பட்டது. மிக வியப்பாக இருந்தது எனக்கு.



=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கும்பகோணத்தில் மாடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி.கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் டிஸ்பென்சரி என்று வைத்துக் கொண்டிருந்தார். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிகமிகச் ‌செங்குத்தாக இருக்குமாகையால் அதில் ஏறிப் பழக்கப்பட்ட அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது 32 படிகள் என்பது நெட்டுருப் பாடம்!

மாடியில் டாக்டரின் அறைக்கு வெளியே டாக்டர் உட்காருவதற்காக மேஜையும், நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறையப் புஸ்தகங்களாக அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோர் நாற்காலியும், ஓர் ஒற்றை பெஞ்சும் அங்கே காணப்படும். ஒற்றைப் பெஞ்சில் நெருக்கமாக நாலு பேர் உட்காரலாம்; அப்பது ஒருவர் முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கொள்வதானால் தாராளமாகப் படுக்கலாம். இந்த பெஞ்சியைக் காலியாகப் பார்த்திருக்கும் இருவர் இரவில் கடைசியாக அறையைப் பூட்டும் கம்பவுண்டரும், காலையில் விளக்குமாற்றுடன் வரும் வேலைக்காரியுமாகத் தான் இருக்க வேண்டும்!

                                                                        -‘கல்யாணி’ நாவலில் தேவன்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

விச்சந்திரன் நடித்து ‘மதறாஸ் டு பாண்டிச்சேரி‘ என்று ஒரு படம் நான் பிறந்த குழந்தையாக இருந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தத் திரைப்படத்தை இந்தியில் மெகமூத் என்று ஒரு தயாரிப்பாளர் ‘பம்பாய் டு கோவா’ என்ற பெயரில் எடுத்தார். அமிதாப்பச்சன் நடித்தும் அப்படம் இந்தியில் பப்படமாகியது.

இதில் ஒரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால் மெகமூத் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் அணுகியது அப்போதைய பாரதப் பிரதமரின் மகனை.

இந்திராகாந்தியின் மகனான ராஜீவ் காந்தியிடம் அவர் நடிக்க வேண்டுகோள் வைக்க. ராஜீவ் மறுத்து விட்டதால் அவரது நண்பரான அமிதாப் நடித்திருக்கிறார். 

‘த ஹிந்து’வின் ஞாயிறு இணைப்பில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிக வியப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்கு...?


 =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ரஸ்வதி பூஜை தினத்தன்று யதேச்சையாக விஜய் டிவி வைத்த போது ‘துப்பாக்கி’ படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘ஹீரோ ஒரு பரபரப்பான கேரக்டர்ங்க. மூணு வேலைய ஒரே நேரத்துல செஞ்சிட்டிருப்பாரு. செஞ்சிட்டிருக்கும் போதே நாலாவது வேலையப் பாக்கப் போயிடுவாரு. அந்த வேலை முடியறதுக்குள்ளயே அஞ்சாவது வேலையில இறங்கிடுவார். அப்படி ஒரு டைப்’’ -இப்படிச் சொன்னார் அவர். ஆகக்கூடி ஹீரோ உருப்படியா ஒரு வேலையும் செய்யத் தெரியாதவன்னுதானே அர்த்தமாகுது. என்னங்ணா இது? ஹி... ஹி...

Wednesday, October 24, 2012

சிரித்திரபுரம் - 5

Posted by பால கணேஷ் Wednesday, October 24, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Monday, October 22, 2012

மனம் திருடிய ‘குபேரவனம்’

Posted by பால கணேஷ் Monday, October 22, 2012

ரித்திரக் கதை அல்ல; ஆனால் சரி்திரம் பேசும்! காதல் கதை அல்ல; ஆனால் காதலைப் பற்றிப் பேசும்!  மாயமந்திரக் கதையல்ல; ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்! குடும்பக் கதை அல்ல; ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றிப் பேசும்! -இப்படி ‘குபேரவனக் காவல்’ நூலாசிரியர் தன் உரையில் சொல்லியிருந்தது படிப்பதற்கான என் ஆவலை ஏகத்துக்கும் விசிறி விட்டது. படிக்கத் துவங்கினேன்.

செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் வனத்தைக் காவல் காத்து வந்த புருஷாமிருகம் அபார ஆற்றல் பெற்றது. குபேர வனத்திற்குள் பிரவேசிக்கும் எவரையும் நொடியில் விழுங்கி விடும். தர்மரின் யாகத்திற்கு குபேரனை அழைக்க வந்த பீமன் (கண்ணன் ஆலோசனையின் பேரில்) புருஷாமிருகத்திடம் ‘வரும்போது என்னை விழுங்கு’ என்று சொல்லி குபேரனைப் பார்த்துவிட்டு, வருகையில் ஓட்டமெடுக்கிறான். துரத்தி வரும் புருஷாமிருகத்தின் முன் கண்ணன் தந்த 12 கற்களில் ஒன்றைப் போட கல், லிங்கமாக மாறுகிறது. சிவபக்தியில் தலைசிறந்த புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டால் குளித்து பூஜை செய்துதான் மற்ற வேலை செய்யும். எனவே அது சென்று விட, ஓடுகிறான். பூஜை ‌செய்து மீண்டும் துரத்துகிறது மீண்டும் கல் - லிங்கம். இப்படியே 11 முறை செய்து 12வது முறை அஸ்தினாபுர எல்லையை தொட்டுவிட்ட சமயத்தில் அதனிடம் அவன் கால் சிக்குகிறது அதனிடம் சிக்கிய கால் புருஷாமிருகத்திற்கே உரியது, அதை வெட்டித்தா என்று தர்மர் கூற, புருஷாமிருகம் அவர் நேர்மையில் மகிழ்ந்து பீமனை விட்டு விடுகிறது. பூமிக்கு வந்த அது சிவாலயங்களில் காவல் காக்கும் பணியைச் செய்கிறது.

புருஷாமிருகம் குபேரவனத்தை விட்டு நீங்கினால் தன் சக்தியை ம்ருகரஞ்சிகா என்கிற யட்சிணியிடம் தந்து, வனத்தை காவல் காக்க நியமிக்கும். ஒருமுறை ஒரு கந்தர்வன் குபேரவனத்திற்குள் நுழைந்துவிட, புருஷாமிருகத்தின் சக்தி பெற்ற ம்ருகரஞ்சிகா துரத்துகிறாள். இறைவன் அருளால் 11 ஜென்மங்களில் அவன் அவளிடமிருந்து தப்பி விடுகிறான். 12வது ஜென்மமாக 1919ல் சிதம்பரத்தில் ‘புரு‌ஷோத்தமன்’ என்ற பெயரில் பிறக்கிறான் அந்த கந்தர்வன்.

ஜாதகம், கைரேகை இவற்றை பார்க்காமல் மனித உடலில் உள்ள நாடிச் சக்கரங்களின் ஒட்டத்தைக் கொண்டு எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூறுபவர்கள் சகடவாக்கியர் எனப்படுவர்.அப்படி சகடவாக்கியான குடும்ப நண்பர் நம்பாடுவான், புருஷ்ஷின் பூர்வ பிறவிகளைப் பற்றியும், யட்சிணி துரத்துவதையும் எடுத்துக்கூறி, இந்தப் பிறவியில் அவளிடமிருந்து தப்பினால் இனி பிறவி கிடையாது என்கிறார். யட்சிணியின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறார். பதினொரு ஜன்மங்களாக அவனை அழிக்கத் துரத்தி வரும் யட்சிணியின் கண்ணில் படாமல் புருஷ் வாழ்ந்துவிட இயலுமா என்ன? இப்பிறவியிலும் யட்சிணியைச் சந்தித்து விடுகிறான்.

ப்படி ஒரு பரபரப்பான நிலைக்களத்தை அமைத்து, அவன் யட்சிணியிடம் சிக்கினானா? தப்பினானா? எனில் எப்படி? அவனுக்காய் யட்சிணி என்னவெல்லாம் செய்தாள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு வெகு சுவாரஸ்யமாக தன்னுடைய 4வது நாவலான ‘குபேரவனக் காவல்’ நூலில் விடை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மா. புதன்கிழமை காலையில் புத்தகத்தைக் கையிலெடுத்த நான், வியாழன் மாலைக்குள் 432 பக்கங்களையும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் வைத்தேன்.

ரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லரின் ஊடாக மெலிதான ஆன்மீக, புராணப் பின்னணியைக் கொண்டு, பயனுள்ள பல தகவல்களையும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கும் (இந்திராசெளந்தர்)ராஜ ரகசியம் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மாவுக்கும் நன்கு கைவரப் பெற்றிருககிறது. இந்த த்ரில்லரின் ஊடாகவும் அவரின் சிந்தனைகள் அங்கங்கே சிறகு விரித்துப் பறந்து கருத்துக் குவியல்களை நம்முன் கொட்டியிருக்கிறது. எனக்கு மிகப் பிடித்த இரண்டை இங்கே சாம்பிள்களாகத் தருகிறேன் :

===============================

‘‘ஒரு மனநல மருத்துவரோட புத்தகத்தைப் படிச்சேன். நம்ம நெத்தி மையத்துல இருக்கற திங்கிங் டிஷ்யூவை அலைகளால பாதிக்கச் செய்ய முடியுமாம். உதாரணத்துக்கு ‘குளிர் காத்து வீசுது’ன்னு நியூரான் செல்கள் திங்கிங் டிஷ்யூவுக்கு மெசேஜ் அனுப்புது. உடனே ‘ஸ்வெட்டர் போட்டுககோ’ன்னு திங்கிங் டிஷ்யூவும் பதில் மெசேஜ் அனுப்புது. அதனால உடனே ஸ்வெட்டர் போட்டுக்கறோம். இந்த திங்கிங் டிஷ்யூ, நம்ம நியூரான் செல்லுல ஏற்படற மின்சார அதிர்வலை மூலம் மெசேஜ் வாங்கி தன் உத்தரவை மூளைக்கு செலுத்தறது. அந்த நியூரான் செல்லுல இருந்து திங்கிங் டிஷ்யூவுக்கு மெஸேஜ் போகாதபடி வெளி அலைகள் மூலமா அந்த திங்கிங் டிஷ்யூவை கட்டுப்படுத்த முடியும்.

அந்த வெளி சக்தி இருக்கற உணர்வலைகளைத்தான் நாங்க வசியம்னு சொல்றோம். அந்த வெளி சக்திகள் நம்ம திங்கிங் டிஷ்யூவை பாதிக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நாங்க நாமம், திருநீறு, பொட்டுன்னு வெச்சு்கறோம். இந்த வசிய மையை நெற்றியில வெச்சா, வசியம் செய்யறவங்களோட எண்ண அலைகள், மை வச்சுட்டு இருக்கிறவங்களோட எண்ண அலைகளைத் தாக்கி தங்கள் இஷ்டப்படி அவங்களை ஆட்டிப் படைகக முடியும்...’’

‘‘மைகாட்! 20ம் நூற்றாண்டுல கூடவா இப்படி..!’’ மாடில்டா அசந்து போனாள்.

அமுதன் சிரித்தான். ‘‘நீங்க பிளாக் மாஜிக்கை சயன்ஸ் கண்ணோட்டத்துல பார்க்கறீங்க. நாங்க சயன்ஸையே பிளாக் மாஜிக்கா மாத்திக் காட்டறோம். அவ்வளவுதான்...!’’

===============================

‘‘இந்த மாதிரி புருஷனோட உடன்கட்டை ஏற எவ்வளவு தைரியம் வேணும்! எனக்கு அந்‌த தைரியம் வராதுப்பா. பட், அமுதன்... புருஷனோட உயிர் துறக்கணும்னா ஏன் கோரமா நெருப்புல எரியணும்? தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியா சாக முடியாதா?’’

‘‘அப்படியில்லை மாடில்டா. எங்க நாட்டுல ‌அக்னி... அதாவது நெருப்புதான் சுத்தத்துக்கு அடையாளம்! ஃபயர் இஸ் ப்யூர்! ஒருத்தர் சுத்தமானவர்னு காட்டணுமின்னா கிராமத்துல தீ மேல நடந்து, தாங்க பரிசுத்தமானவங்கன்னு நிரூபிப்பாங்க. எங்க சீதாதேவியே அக்னிப் பிரவேசம் செய்துதான, தான் பரிசுத்தமானவள்னு நிரூபிச்சா!’’

‘‘பெண்கள் ஏன் பரிசுத்தமானவள்னு நிரூபிக்கணும்? ஆணை மாதிரி அவளும் எல்லா உரிமையோட இருக்கலாமே...?’’

‘‘நோ மாடில்டா! ஃபாதர் இஸ் பிலீஃப், மதர் இஸ் ட்ரூத்! அப்பா ஒரு நம்பிக்கை! அம்மா ஒரு உண்மை! உண்மைதான் தான் தூய்மையானதுன்னு நிரூபிககணும். நம்பிக்கை இல்லை!’’

‘‘எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வெச்சிருக்கு உங்க தேசம்...’’

===============================

432 பக்கங்கள் கொண்ட ‘குபேரவனக் காவல்’ நூலை ரூ.175 விலையில் சென்னை தி.நகரில் தீனதயாளு தெருவில் 23ம் ‌எண்ணில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிதம்பரம், சென்னை, கேரளா, லண்டன், உத்தரப்பிரதேசம், ஊட்டி என்று வெவ்வேறு நிலைக்களன்களின் பின்னணியில் விறுவிறுவென்று நகர்கிறது இந்தக் கதை. ‘‘நகத்தைக் கடித்தபடி சுவாரஸ்யமாகப் படிகக ஒரு புத்தகம் வேண்டும்’’ என்கிற ரகமாக நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகத்தைத் தவற விடாதீர்கள்!

Thursday, October 18, 2012


ங்க இலக்கியப் பாடல்களை அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று இரண்டு பிரிவுகளில் ரசிக்கலாம். தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் மற்றும் இல்லறம் குறித்த பாடல்கள் அகப்பாடல்கள். அரசனின் வீரம், நாட்டின் நிலை போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்பவை புறப்பாடல்கள். நல்ல செந்தமிழில் இருக்கும் இந்தப் பாடல்களைப் படித்ததும் உடனே புரிந்து விடாது. சற்று சிரமம் மேற்கொண்டு பொருள் புரிந்து ரசித்தீர்களாயின்... அன்றைய தமிழர்களின் கற்பனை வளமும், சொல் வளமும் பிரமிக்க வைத்து விடும்.
 
காதல் தலைவன், தன் தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கிறான். அவளுடன் கூடி வாழ்தல் மட்டுமே வாழ்க்கையில்லையே...? அந்த வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த (எக்காலத்திலும்) பொருள் வேண்டுமே! அஃதில்லாது இவ்வுலக வாழ்வு உண்டோ? எனவே, வேறு வழியின்றி அவளிடம் விடைபெற்று பொருள் தேடுவதற்காக வெளியூர் சென்று விடுகிறான் அவன். 

தன் தலைவனைப் பிரிந்த அவளுக்கு இரவுப் பொழுது நெருப்பாக எரிகிறது. சுற்றுச் சூழலில் காண்பவையெல்லாம் அவள் இதயத்தில் எரியும் நெருப்பை விசிறி விடுபவையாகவே இருக்கின்றன. -இப்படி ஒரு சூழ்நிலையில் அமைந்த இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள். பாடலின் விளக்கம் (எனக்கு்த் தெரிந்த அளவில்) கீழே கொடுத்திருக்கிறேன். விளக்கத்தைப் படித்த பின்னர் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். கூடுதலாய் ரசிக்கும் என்பதே என் நம்பிக்கை.

பகலினும் அகலா தாகி யாமம்
தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளிமழை பொழிந்த தண்வால் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானென் உளனோ - தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனிஅன்றில் உய்வுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்‌ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

                                                               -வடவண்ணக்கன் பேரி சாத்தனார்



பாடலின் பொருள் :

கல் நேரம் நீண்டதாகிக் கொல்கிறது. இரவின் யாமங்களும் வெள்ளப் பெருக்கோடு மெல்ல மெல்லக் கழிந்தன. மேகம் கண் திறந்து மழையைப் பொழிந்து தள்ள, அதனால் வாடைக் காற்றும் வந்தது. பனி மிகுதியாகப் பொழிகின்ற, வருத்தம் தரும் நள்ளிரவு அது.

ஒருவர் உடலினுள்ளேயே மற்றவர் புகுந்துவிடுவது போல கைகளை வளைத்து அவ்வளவு இறுக்கமாகத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள் அந்த தம்பதி! ஒரே உயிர் போல இப்படி இணைந்திருக்கும் அவர்கள் கூடப் புலம்புவார்களா? ஆம்! புலம்புவார்கள்...! இதோ அந்தத் தலைவி இப்படிப் புலம்புகிறாள்...

இதயத்தில் சற்றும் இரக்கமில்லாத (அருளில்லாத) தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்று விட்டார். அந்தத் துயரத்தை தாங்கிக் கொண்டு கனத்த துன்பமுடைய நெஞ்சத்தோடு நான் எப்படித்தான் வாழ்கிறேனோ தோழி? பருத்த அடியை உடைய பனை மரத்தில் இருந்து கூரிய அலகு படைத்த துணையில்லாத ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலை எழுப்புகிறது. அது என்னுள் கனலை மூட்டி விட்டதால் உள்ளே கனல்கிறது என் உள்ளம்!

என் வருத்தம் பற்றி சற்றும் அறிந்திராத ஆயர்கள் ஆநிரைகளுக்காக இனிய புல்லாங்குழலை ஊதி இசை ‌எழுப்பி, என் உள்ளத்தின் கனலை மேலும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறார்களே...! இதையெல்லாம் என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள இயலும்?

--- என்ன நண்பர்களே... பாடலில் இயற்கையும் காதலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டிருப்பதை ரசீத்தீர்கள் தானே...!

Wednesday, October 17, 2012

சிரித்திரபுரம் - 4

Posted by பால கணேஷ் Wednesday, October 17, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Tuesday, October 16, 2012

ஜாலியா கொஞ்சம் சிரிங்க...!

Posted by பால கணேஷ் Tuesday, October 16, 2012
ஹாய்... நேத்து ராத்திரி பூரா ‘சிரி’யஸா யோசிச்சு சிரித்திரபுரம் எழுதினேனுங்க. பாழாப்போன் மின்சாரத்தை திடீர்னு கட் பண்ணினதுல (யுபிஎஸ் பெய்லியர், சர்வீசுக்கு போயிருக்கு) பிசி ஆஃப் ஆயிடுச்சு. காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.

எழுதினது மனசுல இருக்கறதால நாளைக்கு அது பதிவா வந்துரும். அதுவரைக்கும் ‘மேய்ச்சல் மைதானம்’ போய் அந்தக் குதிரை மேய்ஞ்சுட்டிருந்த புல்லுல கொஞ்சத்தை திருடிட்டு வந்துட்டேன். பார்த்துச் சிரிங்க. நாளைக்கும் சிரித்திர புரத்துக்கு தவறாம வந்துடுங்க. ரைட்டா?





Saturday, October 13, 2012

மரண வியாபாரி

Posted by பால கணேஷ் Saturday, October 13, 2012

ல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவன் அந்த பங்களாவின் முன் வந்து நின்றான். சிவப்புநிற டிஷர்ட். இது வரை சோப்பையும் தண்ணீரையும் கண்டிராத ஜீன்ஸ், பாலீஷ் பார்க்காத ஷு, முற்றிய முரட்டு முகத்தில் இரண்டு கத்தித்தழும்புகள்.

-இதுதான் மனோகர். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்பவன். யாருக்கும் பயப்படமாட்டான். யாரைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டான். உலகில் அவனுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்: 1. பணம், 2. இன்னும் பணம், 3. மேலும் பணம்.

முகத்தில் விழுந்த முடியை முன்னுச்சி விரல்களால் தள்ளிவிட்டுக் கொண்டு கூர்க்காவை முறைத்தான் மனோகர். பீடி பிடித்துக் கொண்டிருந்த கூர்க்கா இவனைக் கண்டதும் பீடியை அவசரமாக அனைத்து காதில் சொருகிக் கொண்டு பவ்யமாக ஒரு வணக்கத்தைச் சொல்லி கேட்டை திறந்து விட்டான்.

பங்களாவின் மாடியறையில் மெல்லிய குரலில் இசை ஒலித்துக் கொண்டிருக்க, சோபாவில் சாய்ந்தபடி ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் சோடாவையும் சமமாகக் கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார் தொழிலதிபர் ராஜேந்திரன். ‘‘எதுக்கு வரச் சொன்னீங்க என்னை?’’ என்றபடி அவர் முன்னால் போய் நின்றான் மனோகர்.

''வாடா... வா... மனோ! உனக்கு ஒரு வேலை வந்திருக்கு.என் பொண்ணு தீபாவை, ராஜான்னு ஒருத்தன் தினமும் கலாட்டா பண்றானாம்.நேத்து தீபா என்கிட்ட சொல்லி அழுதா.என்னோட பொண்ணுன்னு தெரிஞ்சும் கலாட்டா பண்ணியிருக்கானே.அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அதனாலே...'' நிறுத்திவிட்டு மனோகரை நிமிர்ந்து பார்த்தார் ராஜேந்திரன். அவரின் கையில் ராஜாவின் புகைப்படம் ­­இருந்தது.

''அவன் இனி உங்க பொண்ணுகிட்ட பேசவே மாட்டான். நாக்கு இருந்தாதானே பேசமுடியும்?'' என்றான் மனோகர்.

''நீ ரொம்ப புத்திசாலிடா! நான் மனசுல நினைத்ததை நீ சொல்லிட்டே.சரி எவ்வளவு வேணும்?''

"இருபத்தஞ்சாயிரம்''யோசிக்காமல் சொன்னான் மனோகர்..

"இத்தனூண்டு நாக்குக்கு இருபத்தஞ்சாயிரமாடா?''

‘‘ரைட்டு. நீங்களே பாத்துக்கங்க, நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் மனோகர்.

"இரு மனோ... சொன்னா சொன்னபடி செய்றவன் நீங்கறதாலதானே உன்னைக் கூப்பிட்டேன். முணுக்குன்னா கோவிச்சுக்கறியே...''என்றவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து டீபாயின் மேல் போட்டார்.

"இது அட்வான்ஸ். வேலைய முடிச்சிட்டு மீதியை வாங்கிக்க. அடுத்து உனக்கு ஒரு பெரிய வேலை காத்திருக்கு. எனக்குப் போட்டியா தொழில்லே செந்தில்ன்னு ஒருத்தன் குறுக்கிடறான்.அவனை குளோஸ் பண்ணனும். அதுக்கு அஞ்சு லட்சம் தர்றேன் மனோ!''

"நாளைக்கு சாயங்காலம் ராஜாவோட நாக்கோட வந்து உங்களைப் பார்க்கறேன்'' ராஜாவின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு, நூறு ரூபாய்க் கட்டை எடுத்து பாண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு அநாயசயமாக வெளியேறினான் மனோகர்.

றுதினம் மாலையிலேயே சொன்னபடி கண்ணாடி டப்பாவில் அடைபட்ட நாக்குடன் வந்தான் மனோகர். ராஜேந்திரன் இப்போதும் மது அருந்திக் கொண்டிருந்தார். (வேற வேலையே கிடையாதா இவருக்கு?). அவரிடம் நீட்டினான்.  "பேஷ்! நாக்குத் தவறாதவன்டா நீ! ஸாரி, வாககுத் தவறாதவன்டா நீ! ரொம்ப சந்தோஷம். உட்கார்.என்னோட ஒரு பெக் சாப்பிட்டுட்டுப் போகலாம்.’’

இன்னொரு டம்ளரை எடுத்து அவனுக்கும் மதுவை ஊற்றினார். மனோகர் உட்கார்ந்தான். ராஜேந்திரன் எழுந்து போய் பீரோவைத் திறந்தார். கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நோட்டுக் கற்றைகளிலிருந்து ஒரு நூறுரூபாய் கட்டையும், ஐம்பது ரூபாய் கட்டையும் எடுத்தார். "இந்தா மனோ..உனக்குச் சேரவேண்டிய மீதி பணம்'' என்று அவனிடம் வீசினார். கப்பென்று கேட்ச் பிடித்தான் அவன்.

மீண்டும் சோபாவில் அமர்ந்த ராஜேந்திரன், ‘சியர்ஸ்’ ஒரு சிப் சிப்பினார். மனோகர் தன் பங்கை ஒரே மடக்கில் உள்ளே தள்ளினான். அமைதியாக அவரையே கவனித்தான். அந்த ரவுண்டை முடித்திருந்த ராஜேந்திரனின் குரல் மது போதையையும் மீறி குழறலாய் வெளிவந்தது.

"மழோ... மழோ... எழக்கு எழ்ழமோ ஆயிழுச்சுடா. ஓவழா தலை சுத்துது.''

‘‘அதுவா ரா‌ஜேந்திரன்! நான் உங்களுக்கு விஸ்கியில கலந்த விஷத்தோட ஆரம்பக்கட்ட செயல்பாடு அது...’’

‘‘ழேய்... விஷம் கழந்தியா...? ஏழ்டா இப்படி?’’

‘‘ஸாரி மிஸ்டர் ராஜேந்திரன். நான் ராஜாவோட நாக்கை அறுத்த விஷயத்தைக் கேள்விபட்ட அவனோட அப்பா ஸிட்டில இருக்கற டாப் ரவுடிகளக் கூப்பிட்டு என்னை தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கார். அவங்க என்னோட மோதப் பயந்து வேலைய ஏத்துக்காததால அவரே நேரடியா என்னை வந்து சந்திச்சார். பத்து லட்ச ரூபாய் பணத்தை ஒரே பேமெண்ட்டாக் கொடுத்து உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்னார். அதான் நீங்க பணத்தை எடுக்கப் போனப்ப, விஷத்தைக் கலந்துட்டேன். நாளைக்கு ஹார்ட் அட்டாக்ல தொழிலதிபர் ராஜேந்திரன் இறந்ததா செய்தி வரும். சாகறதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கங்க... உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்ன ராஜாவோட அப்பா பேரு செந்தில். நீங்க கொஞ்சம் லேட். அவர் முந்திக்கிட்டாரு...’’

’’ழேய்... மனோ... எவ்வளவு பணம் கொழுத்திருக்கேன் உழக்கு? இப்பழி நன்ழி இழ்ழாமே...’’

‘‘நன்றியா? என் மாதிரி ஆசாமிங்களுக்கு அதுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது என்னமோ இலவசமா பணம் கொடுத்திட்ட மாதிரி நன்றியப் பத்திப் பேசறீங்க...? மிஸ்டர். ப...ண...ம்... அதான் எனக்குத் தெரிஞ்ச விஷயம். நீங்க  அவர் உயிருக்கு போட்ட மதிப்பு அஞ்சு லட்சம். அவர் உங்களுக்குப் போட்ட மதிப்பு பத்து லட்சம்! பிஸினஸ்ல எப்பவுமே எதிரியை குறைச்சு மதிப்பிடக் கூடாது ஸார்! யூஸ் திஸ் இன் நெக்ஸ்ட் ஜென்மா...’’ ராஜேந்திரன் மார்பை பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்க, ரசித்துச் சிரித்தபடி வெளியேறினான் மனோகர்.

Thursday, October 11, 2012

சிரித்திரபுரம் - 3

Posted by பால கணேஷ் Thursday, October 11, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Tuesday, October 9, 2012

மெல்லப் பேசுங்கள்!

Posted by பால கணேஷ் Tuesday, October 09, 2012

‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அக்கம்பக்கம் யாரும் இல்லையே என்று சோதித்துப் பார்த்துவிட்டு ரகசியங்களைப் பேச வேண்டும், இரவின் இருளில் எவர் மறைந்திருப்பதும் தெரியாது என்பதால் இரவில் பேசக் கூடாது என்றும் கருதிய காலத்திலிருந்த இன்றைய காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரவைப் பகலாக்கும் விளக்குகள் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் உண்டு.

முற்காலங்களில் சாலையில் ஒருவன் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தால், ‘‘ஐயோ, பாவம்’’ என்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். காதில் இயர்போன் செருகியிருக்கிறதா என்பதைத்தான் கவனிப்பார்கள். அலைபேசி என்று அழைக்கப்படும் செல்போனை இடுப்பில் வைத்துக்கொண்டு, வயர்‌லெஸ் இயர்போனை காதில் மாட்டிக் ‌‌கொண்டு, நினைத்த நேரம் பேசிக் கொண்டு அலைகிறார்கள் பலர்.

அதில் குற்றம்காண நான் முற்படவில்லை. ஏனென்றால் ‘செல் இல்லாதவன் அரை மனிதன்’ என்று பழமொழியை மாற்றி எழுத வேண்டிய காலகட்டத்தில் இரு்க்கிறோம். ஆகவே நான் குறிப்பிட விரும்புவது செல்போனில் பேசும் விதத்தைப் பற்றித்தான். முன்பொரு பதிவி்ல் பேருந்தில் ஒரு நபர் தன் மனைவியுடன் உரக்கப் பேசிக் கொண்டு வர, அவர் மனைவியின் பெயர், காத்திருக்கும் இடம் போன்ற அனைத்து விவரங்களும் பஸ் டிரைவரிலிருந்து கடைசி சீட் பயணி வரைக்கும் கேட்டது என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் கண்டதும் இதைப் பற்றி மீண்டும் சொல்ல வேண்டியதாகிறது இங்கே.

லுவலக வேலையாக வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்தில் நழைந்த அவர் படபடப்பாக இருந்தார். வந்ததும் பாட்டிலை எடுத்து அரை டம்ளர் தண்ணீரைக் காலி செய்தார். ‘‘என்னாச்சு... இதோ ‌பக்கத்து தெருவுல இருக்கற பேங்குக்கு போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?’’ என்றேன் நான்.

‘‘நீங்க வேற படு்த்தாதீங்க கணேஷ்! பாங்க்ல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்மேல சந்தேகப்பட்டு கேள்வியா கேட்டு தொளைச்சுட்டார்.என்னை. நல்லவேளை... ஆஃபீஸ் ஐடி கார்டு இருந்ததால காட்டிட்டு தப்பிச்சேன்’’ என்றார்.

‘‘போலீஸா? உன்னை சந்தேகப்பட்டாரா? உன் முகத்தைப் பாத்தாலே லேடீஸ் ஹாஸ்டலையே நம்பி உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு தோணிருமே. இந்தப் பால் வடியற முகத்தையா சந்தேகப்பட்டாரு?’’

‘‘ஆமா, வடியுது.. ஒரு டம்ளர்ல பிடிச்சுட்டுப் போங்க. சும்மா சத்தாயக்காதய்யா.. நான் வழக்கம்போல இயர் போன் மாட்டி செல்லுல பேசினதால வந்த வினை...’’

‘‘அப்படியா? என்ன நடந்துச்சு?’’

‘‘அதை ஏன் கேக்கறீங்க?’’

‘‘சரி, கேக்கலை விடுங்க’’ என்று நான் மானிட்டரிடம் திரும்ப, ‘‘அட, கேளுங்க சார்...’’ என்றார் எரிச்சலாக. ‘‘சொல்லுங்க’’ என்று மீண்டும் அவர் பக்கம் திரும்பினேன்.

‘‘பாங்க்குக்கு போனேனே... அங்க ஒரு வயசான கிழவி சலான் எழுதத் தெரியாம முழிச்சுட்டிருந்துச்சு...’’

‘‘வயசானா தான்யா அது கிழவி!’’

‘‘லொள்ளு பண்ணாம கேளுய்யா. அவங்களுக்கு உதவியா நான் சலான் எழுதிக் கொடுத்துட்டு கேஷ் கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு எதிர்ல இருக்கற சீட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்ப என் செல்லுக்கு ஒரு கால் வந்துச்சு. வழக்கம்போல காதுல இயர்ஃபோன் மாட்டிருக்கறதால நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். (நண்பருக்கு இயல்பாகவே வெண்கலத் தொண்டை, மெதுவாய்ப் பேச வராது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்) சொல்லு ரமணா, இன்னிக்கே போட்டுடறேங்கறியா? ‌நான் நாளைக்கு நீ போட்டாப் போதும்னு நினைச்சிட்டிருந்தேன். ம்ம்.... சரி, பரவாயில்லை, இன்னிக்கே போட்டுறு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். அட, புலம்பாதடா. நீ போட்று, நான் பாத்துக்கறேங்கறேன்ல -அப்படின்னு பேசிட்டு போனை வெச்சேன் கணேஷ்! பக்கத்துல இருந்த ஆசாமி என்னை முறைச்சுப் பாத்துட்டு, ‘மிஸ்டர் நீங்க யாரு? எங்கருந்து வர்றீங்க?’ன்னு கேட்டாரு. ‘நீங்க ஏன் சார் அதைக் கேக்கறீங்க?’ன்னு நான் கேட்டதுக்கு, ‘நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்’ன்னு ‌சொன்னாரு அவரு. ‘நீங்க பேசினதப் பாத்தா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. யார்ட்ட சார் பேசினீங்க?’ன்னு அவர் கேக்கவும், நான் என்ன பேசினேன்ங்கறதை மனசுல ஒரு தடவை ஓடவிட்டுப் பார்த்தேன். பளிச்சுன்னு மண்டையில பல்பு எரிஞ்சுச்சு.’’

‘‘அது ட்யூப்லைட்டுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே...’’

‘‘வெளையாடாதய்யா. நான் சட்னு அவரைப் பார்த்து ‘சார், நீங்க நினைக்கிற மாதிரி ஆளைப் போட்டுத் தள்ள போன்ல பேசற தாதா இல்லைங்க நான். அதுவும் இதுமாதிரி பப்ளிக் ப்ளேஸ் யாராவது பேசுவாங்களா. நான் ....... கம்பெனில ஒர்க் பண்றேங்க’ அப்படின்னு சொல்லி கம்பெனி ஐடி கார்டைக் காட்டினேன். ‘அப்படியா? போன்ல நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?’னு அவர் கேக்கவும், ‘சார்! மதுரைல இருக்கற என் ஃப்ரெண்டோட பையன் சென்னைல ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சுட்டிருக்கான். நாளைக்கு அவனுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட லாஸ்ட் டேட். அதனால என்னோட பேங்க் அக்கவுண்ட்ல இன்னிக்கே பணத்தைப் போட்டுடறேன்னு அவன் சொன்னான். நாளைக்கு போட்டாக்கூட பிரச்னை இல்லடா. நான் பாத்துக்கறேன்னு நான் சொன்னேன். அவ்வளவுதான் ஸார்’ன்னு அவருக்கு விளக்கிப் புரிய வெச்சுட்டு வர்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுச்சுப்பா...’’ என்றான் அவன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... உன் ‌காமெடி பீஸ் மூஞ்சைப் பாத்துட்டுக்கூட ஆளை போட்டு்த் தள்ள ப்ளான் பண்ற தாதான்னு சந்தேகப்பட்டிருக்காரே... அவரை நினைச்சாத்தான் சிரிப்பா வருது.’’ என்று வாய்விட்டுச் சிரித்தேன் நான். முறைத்தான்.

‘‘சரீ... சரீ... அப்படி முறைக்காத. பேசறதை சரியாப் புரிஞ்சுக்கற மாதிரி பேசலைன்னாலும் சரி, தப்பாப் புரிஞ்சுக்கிட்டாலும் சரி, இப்படி்த்தான் பிரச்னை வரும். முன்ன நான் ஒரு நாளிதழ்ல வேலை பார்த்தேன்ல... அப்ப அங்க சீஃப் எடிட்டர், தன் அசிஸ்டெண்ட்டைக் கூப்பிட்டு, ‘வைகோ நியூஸை கமப்யூட்டர் செக்ஷனுக்கு அனுப்பியிருந்தேன். நீ போய் அதை அடிச்சு வாங்கிட்டு வா’ அப்படின்னாரு. அந்தப் பையன் சமீபத்துலதான் டிகிரி முடிச்சுட்டு வந்த கிராமத்துப் பையன். அவர்கிட்ட தொழில் கத்துக்கிட்டிருந்ததாலயும், அவர் நாலெட்ஜ்னாயும் அவர் மேல தேவதா விஸ்வாசம் அவனுக்கு. நேரா எங்க செக்ஷனுக்கு வந்தான். செக்ஷன் இன்சார்ஜ் குனிஞ்சு ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டிருந்தார். அவர் தோள்ல பளார்னு ஒரு அடி வெச்சான். ‘ஹப்பா’ன்னு அலறிட்டு நிமிர்ந்த அவர்கிட்ட ‘வைகோ நியூஸ் ரெடியாயிடுச்சா? சப் எடிட்டர் கேட்டார்’ன்னான். ‘ப்ரூஃப் பாத்துட்டிருக்காங்க. இப்ப வந்துடும். அதக் கேக்க எதுக்குய்யா இப்படி சுளீர்னு அடிச்சே?’ன்னு அவர் கோபமாக் கேக்கவும், ‘சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்’ன்னான் அந்த அப்(படு)பாவி! ‘வெளங்காதவனே! அவர் டைப் அடிச்சு வாங்கிட்டு வரச்சொன்னா, ஆளையே அடிச்சா கேக்கறது?’ன்னு கோபமா திட்டி அவனுககுப் புரிய வெச்சாரு....’’

நான் இப்படிச் சொல்லவும், என் நண்பர் டென்ஷன் நீங்கி வாய்விட்டுச் சிரித்தார். ஆகவே தோழர்களே... தோழியர்களே... நான் சொல்ல விரும்புவது என்னன்னா... வேணாம், எதுக்கு வம்பு? ‘‘நீதியாவேய் சொல்றீரு? படிச்சாப் புரிஞ்சுக்கறதுக்கு எங்களுக்கென்ன ஐ.க்யூ கிடையாதா?’’ன்னு என் தலையில குட்ட, நண்பர் கண்பத் கைய ஓங்கிட்டு ரெடியா நிக்கிறார். அதனால... நீங்களே புரிஞ்சுக்கங்கப்பா...!

Saturday, October 6, 2012

மொறு மொறு மிக்ஸர்-13

Posted by பால கணேஷ் Saturday, October 06, 2012

பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... ‌சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?

===============================================

                                        மும்மத மொழிகள்

துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா? சிலருக்குத்தான் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. பலர் தங்கட்குக் கிடைக்கும் வேலையை விரும்புகிறார்கள். வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு. -நபிகள் நாயகம்

ல்ல மரமானது கெட்ட கனியைத் தராது. அதேபோல கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை. யாரும் முள் செடிகளில் அத்திப் பழங்களைப் பறிக்க எண்ணுவதில்லை. அதேபோல நெருஞ்சி முள் செடியில் திராட்சைப் பழங்களைப் பறிக்கவும் முடியாது. நல்ல பெற்றோரிடமிருந்து நல்ல பிள்ளைகளே பிறப்பார்கள். இதனால் உலகம் நல்ல வழியில் முன்னேறும். வெளியில் வராத மறைபொருள் எதுவுமில்லை. மற்றவர்கள் அறியப்படாத ரகசியமும் இல்லை. நீங்கள் யாரும் அறியாமல் இருளில் பேசுவதாக நினைப்பது வெளிச்சத்தில் மற்றவரால் கேட்கப்படும். ஏனெனில் எல்லா இடத்திலும் ஆண்டவன் இருக்கிறார். -இயேசு கிறிஸ்து.

‘‘கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா?’’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். ‘உண்மையான நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டு தன்னையே காண முயல வேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால் தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். ‘நான்’ என்கிற அகந்தை தான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள். -ஸ்ரீ ரமண மகரிஷி

===============================================

நாட்ல ரெண்டு மூணு பொண்டாட்டியக் கட்டினவன்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு சரிதாவக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. அய்யூய்யய்யய்யோ.... !  அப்படி என்ன பண்ணியிருப்பான்னு தானே யோசிக்கறீங்க? சொல்றேன்...

போன வாரத்துல ஒரு நாள் அவகிட்ட, ‘‘சரி, ஜபல்பூர்ருந்து வந்திருக்கற என் ஃப்ரெண்டோ ஃபாமிலியை ஞாயித்துக்கிழமை லன்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு சொன்னேன்ல... என்ன பண்ணப் போற நீ? நான் என்ன பண்ணனும்?’’ அப்படின்னு கேட்டேன். ‘‘நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும்.. நான் பாத்துக்கறேன். இதோபாருங்க... மெனுவே ப்ளான் பண்ணிட்டேன்’’ன்னு சொல்லி ஒரு சீட்டுல எழுதி வெச்சிருந்‌ததைக் கொடுத்தாள்.

படிச்சதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. ‌என்னத்தை எழுதியிருக்கா இவள்னு புரிஞ்சுக்கவே ரொம்ப நேரம் ஆச்சுது. உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க மக்கா...!

சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.

===============================================

செல்லப்பா : உனக்கு ஒண்ணும் தெரியாதுடா, இது சாதாரணக் காதல் இல்லை, தெய்வீகக் காதல்!

கோபி : மண்ணாங்கட்டி! மூணு மணி நேரம் ட்ராமா பாத்திருக்கே காய்கறிக்காரியா அவ நடிச்சா. Just 3 Hours! அதுக்குள்ள காதலா? ‌ஏதோ நல்லவேளை Social Drama போட்டோம். 3 மணில முடிஞ்சது. சம்பூர்ண ராமாயணம் போட்டிருந்தா நீ கல்யாணத்தையே முடிச்சிருப்பே போலருக்கே....

செல் : கண்டிப்பா.... அவ சீதையா நடிச்சிருப்பா!

கோபி : அப்போ உனக்கு No chance!

செல் : ஏண்டா?

கோபி : சீதைக்கும் அனுமாருக்கும் கல்யாணம் நடக்குமா? கொஞ்ச நேரம் பார்த்ததுமே லவ்? நான்சென்ஸ்!

செல் : காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.

                   -‘மனம் ஒரு குரங்கு’ என்கிற ‘சோ’ எழுதிய நாடகத்திலிருந்து...

===============================================

ன் நண்பர் ஒருவர் மின் மடலில் இரண்டு நண்பர்களின் கதை என்று சொல்லி இதை அனுப்பியிருந்தார். படிச்சதும் எனக்கு என்னாவும்னு அவருககு நல்லாத் தெரிஞ்சதால, அவரே கீழ தீர்வும் கொடுத்திருக்கார் பாருங்க...

2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.

I hope you have head ache now? cool down, no tension. Forward this to others and get relaxed, that is the remedy.

===============================================

லுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச் சொன்னான்: ‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான்!’’ மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன் சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்: ‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று. ஹி... ஹி... ஹி...

‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே!’’ அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற மேதை சொல்லியிருக்காருங்க. அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ? டவுட்டு! ஹி... ஹி... ஹி...

===============================================

ரைட்டு... அடுத்த பதிவுல சந்திக்கலாமா.... என்ன கேக்கறீங்க...? ஆங், மறந்துட்டேன். வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுச் சொல்லலாம்னு வெற்றியோட வீட்டுக்குப் போனா ‘‘அவன் ஊருக்குப் போயிருக்கான்பா, வர்றதுக்கு நாலு நாளாகும்’’னு அவங்கம்மா சொல்றாங்க. நான் என்னங்க பண்ணட்டும்? ஹி.... ஹி....

Thursday, October 4, 2012

சிரித்திரபுரம் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 04, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Wednesday, October 3, 2012

விளக்கைத் தேடும் விட்டில்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, October 03, 2012

ணிப்பொறியும், இன்டர்நெட்டும் பிரபலமாகாத காலத்தில் ‘பேனா நண்பர்கள்’ என்கிற ஒன்று இருந்தது. வேறு வேறு ஊர்களிலிருப்பவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் ரசனைகளைப் பரிமாறிக் கொண்டு, அந்த ஊருக்கு வரும் சந்தர்ப்பத்தில் எழு்த்தில் அறிமுகமான நட்பைச் சந்தித்து உரையாடி, உறவை வளர்த்துக் கொள்வார்கள். இன்றைய தேதியில் அந்த இடத்தை FACEBOOK ‌என்கிற முகநூல் பிடித்து வைத்திருக்கிறது. முகநூலின் மூலம் நிறைய நட்புகள் கிடைக்கின்றன. நமது கருத்தை (சுருககமாகவோ, விரிவாகவோ) உடன் பகிர முடிகிறது. ஸ்டேட்டஸ் பகிர்ந்த அடுத்த நிமிடத்திலேயே நண்பர்களின் கருத்துக்கள் சுடச்சுடக் கிடைககின்றன.

சுரேகா, கேபிள் சங்கர் போன்றவர்கள் ‘கேட்டால் கிடைக்கும்’ என்ற அமைப்பைத் துவங்கி நல்ல விஷயம் செய்கிறார்கள். ஆபரேஷனுக்கு ரத்தம் தேவையென்றாலும், இயலாதவர்களுக்கு மருத்துவத்துக்கு பணம் தேவைப்பட்டாலும் முகநூலில் பகிர்ந்து கொண்டால் உடன் உதவி கிடைக்கிறது. முகநூல் சாட்டிங்கின் மூலம் நண்பர்களின் பதிலை உடனுக்குடன் பெற்று எழுத்து மூலம் உரையாட முடிகிறது.

இப்படி நமக்குப் பயன்தரும் சாதகமான அம்சங்கள் மலிந்து கிடக்கும் இதே முகநூலின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால்தான் திடுக்கிட வேண்டியிருக்கிறது. முகநூலில் அறிமுகமான ஒரு இளைஞனும் இளைஞியும் புகைப்படங்களைப் பரிமாறிக் கொண்டு, பின் நேரில் சந்தித்து, காதலை வளர்த்து, கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் பார்க்க முடிகிறது. அதேசமயம் முகநூலில் அறிமுகமான நண்பனைச் சந்திக்க வந்து கற்பை இழந்த, பணத்தைப் பறிகொடுத்த பெண்களின் கதைகளும் நிறைய காணக் கிடைககின்றன.

ஒரு எழுத்தாளனின் படைப்புகளை, எழுத்தை ஆழ்ந்து படித்தீர்களென்றால் படைப்புகளுக்குள் அந்தப் படைப்பாளியின் குணாதிசயங்களும் அங்கங்கே தென்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக, கதை/கட்டுரையில் இரண்டு பேர் ‌ஹோட்டலில் டிபன் சாப்பிட ஆர்டர் கொடுப்பதாக எழுதியிருந்தால், அந்த இடத்தில் எழுத்தாளர் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களைத்தான் இயல்பாக எழுதியிருப்பார். கதாபாத்திரங்களுக்கு அணிவிக்கும் ஆடையில் எழுதுபவனின் விருப்ப நிறத்தை நாம் அடையாளம் காணலாம். இப்படி என் எழுத்தைப் படித்தால் என் கேரக்டரை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

ஆனால் ‘சாட்’டில் நிகழ்த்தும் உரையாடலில் இப்படி எதிராளியின் குணாதிசயத்தைப் படித்து விடுதல் முற்றிலும் இயலாத ஒன்று. பரம அ‌யோக்கியனாக இருக்கும் நான், எதிர்முனையிலிருக்கும் பெண்ணைக் கவர, உத்தமனாக என்னை வெளிப்படுத்துக் கொள்ளுவது மிகச் சுலபமாக முடியும். அப்படி வெளிப்படும் முகத்தை நம்பி விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைக் கண்டால் மனம் பதைக்கிறது. அதிலும் ஆண்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எந்தப் பிரச்னையென்றாலும் அதன் வீரியத்தை அதிகம் தாங்க வேண்டியிருப்பது பெண்கள்தான். இப்படி ஏமாறுகிற பெண்களைப் பற்றித்தான் எனக்குள் சிந்தனை அலை புரள்கிறது.

திருமணம் ஆன ஒரு ஆண் தனக்கு அறிமுகமான பெண்ணிடம முதலில் அவள் போட்டோவை அனுப்பச் சொல்ல வேண்டியது, பிறகு ‘டி’ போட்டுப் பேசுதல், அவள் எதிர்ப்புக் காட்டாமலிருந்தால் ‘இரட்டை’ அர்த்தம் வரும் வார்த்தைகளை வீசி, அதற்கும் அவள் இடம் கொடுத்தால் நேரடியாகவே இச்சை வார்த்தைகளை வீசி பெண்களைப் பிடிக்கும் விளையாட்டைக் கண்டால் கொடுங்கோபம் வருகிறது - அதற்கு இடம் கொடுக்கும் பெண்களின் மீது சற்றே அதிகமாக! அதிலும் திருமணமான பெண்கள், குழந்தைகள் உள்ள பெண்கள்கூட இப்படி என்பது தெரியவரும்போது ‘கொலைவெறி’யே வருகிறது. காரணம் கேட்டால் ‘என் கணவன் ரசனையில்லாதவன். இந்த நண்பன் என் படைப்பை என்னமாய் ரசிக்கிறான்’ என்று பதில் வரும்.

அதல்ல விஷயம்... அவன் ரசிப்பது உங்கள் படைப்பையல்ல... .உங்களையே! உங்கள் சிந்தனைகளை, திறமையை வெளிப்படுத்தினால் அவரைப் போல பல நண்பர்கள் ரசிக்கிறோம், பாராட்டுகிறோம் உங்கள் எழுத்தை. அதில் திருப்தியடைய வேண்டியதுதானே நியாயம். கணவன் இல்லாவிட்டால் என்ன, என் திறமையை ரசிக்க இத்தனை பேர் இருக்கிறார்களே என்று நிறைவடைவதை விட்டுவிட்டு, இப்படி இச்சக வார்த்தைகளை வீசும் ஆண்மகனை நம்பி முறைதவறி நடந்தால் பின்விளைவுகள் என்னாகும், தன் குழந்தைகளின் பிற்கால நிலை என்ன என்பதைச் சிறிதுகூட யோசிக்காமல் தன் சுகத்தை மட்டுமே எண்ணுவது ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம்! உங்களை முழுமையாக நம்பி வேலைக்கு அனுப்பும், இணையத்தில் உலாவ அனுமதிக்கும் உங்களின் இல்லறத் துணைக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகமல்லவா இது! இதுபோன்ற மனப்போக்கினால் தான் நிறைய விபரீதஙகள் நிகழ்கின்றன.

கணவனைப் புறக்கணித்து, விவாகரத்து வாங்கிவிட்டு, மனதுக்கு(?)ப் பிடித்தவனுடன் இணைவது இந்நாளில் வெகு சுலபம். அல்லது இணையாமலேயே யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவை வைத்துக் கொள்வது (வைப்பாட்டன்?) கூட சாத்தியம்தான். ஆனால் 50 வயதை நெருங்கினால் காம சிந்தனை தணிந்து உடலும் அதை விரும்பாத காலகட்டத்திலிருந்து இறப்பு வரை துணை வருவது இதுபோன்ற காமத் துணை அல்ல! புனிதமான மாங்கல்யத்தைத் தந்த கணவனும், ரத்தத்தைப் பகிர்ந்து பிறந்திருக்கும் குழந்தைகளும்தான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

‘உனக்கேன் இவ்வளவு அக்கறை? யாருக்குமே இல்லாத அக்கறை?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பே பலரும் முகநூல், கூகிள் டாக் போன்ற விஞ்ஞான விஷயங்களினால் ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சிககல்களை விரிவாக எழுதி அபாய அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். ஒரு ஆண், பெண்ணைக் கவர எப்படியெல்லாம் அஸ்திரங்களைப் பயன்படுத்தக் கூடும் என்பதை இங்கே க்ளிக்கினால் தெளிவாக, விரிவாக எடுத்துரைத்திருப்பதைப் படிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நான் கேள்விப்பட்டவைகளாக மட்டுமே இருந்த இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களை கண்கூடாகப் பார்க்கும் பாக்கியம்(?) வாய்த்தது. ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது. உடனே ந்ட்பு வட்டத்திலிருந்து அதை வெட்டி விட்டேன். அதனாலேயே பெண்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிற ஒருவன் என்கிற காரணத்தினால், பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைச் சங்கை ஊத வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் ஊதிவிட்டேன்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube