Wednesday, September 28, 2011

ம், ரைம், க்ரைம்!

Posted by பால கணேஷ் Wednesday, September 28, 2011
நான் ஊஞ்சல் இதழில் பணியாற்றிய போது சில சிறுகதைகளை எழுதியதுண்டு. எழுதும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்காததால் இப்போ தெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. நான் எழுதிய ஒரு க்ரைம் தடவிய மினி சிறுகதை உங்களுக்காக இங்கே:

கொலையின் விலை


Monday, September 26, 2011

வர்ணனைக் கடலிலிருந்து சில துளிகள்!

Posted by பால கணேஷ் Monday, September 26, 2011
பார்த்து ரசித்த ஒரு விஷயத்தை நாம் எழுதுவதற்கும், அதே விஷயத்தை சிறந்த எழுத்தாளர் ஒருவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வகையில் நான் படித்து ரசித்த சில ‘மின்னல் வரி’களை இப்போது  உங்கள் பார்வைக்கு பரிமாறியிருக்கிறேன்...


‘அவள் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்’ என்று ஒரு வரியில் நாம் சொல்வதை எழுத்தாளர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்...


‘சர்... சர்...’ என மத்து போகும் திசைகளில் மோரின் துமிகள் வெளியே சிதறுகின்றன. மிதந்து மிதந்து கப்பலாய் வெண்ணெய் திரள்கிறது. தயிர் சிலுப்பிக் கொண்டிருந்த மாதம்மா, கூடத்தில் தன் கணவர் அந்தியப்ப கவுண்டருக்கும் ஒரே மகன் சீவகனுக்கும் நடக்கும் உரையாடலில் கை ஓய்கிறாள்.


-‘நெஞ்செல்லாம் நெருஞ்சி’ புதினத்தில் ஹம்சா தனகோபால் 
 
===========================================

 
பெண்ணின் அழகை வர்ணிக்காத எழுத்தாளர் எவரும் உண்டோ?


முழங்காலைக் கட்டிக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அந்தத் தோரணையிலும் ஒரு ராஜகுமாரிக்கே உரிய கம்பீரம் இருந்தது. அவளது விழிகளின் இமை விளிம்புகளிலிருந்தும், கால் விரல், கை விரல், நகக் கண்களிலிருந்தும் உள்ளே ஊடாடிய பூரண எழில் நிரம்பித் தளும்பி பன்னீர்த் துளிகளாய் சிலுசிலுவெனச் சுற்றிலும் பரவிப் படர்ந்த மாதிரி இருந்தது.

-‘காகிதக் கமலங்கள்’ சிறுகதையில் திருப்பூர் கிருஷ்ணன்

===========================================

வள் சருமம் வெங்காயச் சருகு போல மெல்லியது. உற்றுப் பார்த்தால் அவள் உடம்பில் ரத்தம் ஓடுவது தெரியும். விரல்கள் முடிந்த பிறகு இன்னும் சிறிது தூரம் வளர்ந்து வடிவாக்கப்பட்டு சிவப்பு பூசிய நகங்கள். கையிலே ஒரு வளையம் மாட்டி, அதிலே சாவிகளைக் கோத்து வைத்திருந்தாள். கடற்கரை நண்டு போல நகர்ந்த படியே கோப்புகளைச் சேகரித்து விடுவாள்.

-‘அடைப்புகள்’ சிறுகதையில் அ.முத்
துலிங்கம்.

===========================================

வானத்தில் நிலவு இல்லை. இருள் கொடியில் நட்சத்திரப் பூக்கள் மட்டும் ஏராளமாகப் பூத்திருந்தன. அந்த நட்சத்திர ஒளியே மீனாவுக்கு ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கைப் போலப் பளிச்சென்று தெரியும் போலிருக்கிறது. அவள் ‘திடுதிடு’வென்று நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவன் மீனாவின் உருவத்தை விளக்காக நினைத்துக் கொண்டு அவள் நடக்கும் வழியில் காலை மாற்றி வைத்து போய்க் கொண்டிருந்தான்.

-‘நமக்கு நாமே’ நாவலில் டாக்டர் வாசவன்.


===========================================
 

பெண்ணை மட்டுமல்ல... குழந்தையையும் அழகாக வர்ணித்திருக்கிறார் இங்கே...
 
சு மாடுகள் தரிசில் மேய்ந்து கொண்டிருந்தன. சாயங்கால வெய்யிலில் அறுகம் புல்லும், ஆதாளையும், மத்தாங்கப் புல்லும் குளிர்ப் பசுமையாகச் சிரித்தன. புல்லுக்குள் என் மகள் பேச்சி உறங்கிக் கொண்டிருக்கிறாள். மூன்று வயசுப் பிஞ்சு. சின்னக் கன்னத்தில் வழிந்திருக்கிற எச்சிலில் சாயங்காலச் சூரிய இணுக்கு.

-‘மானுட மனம்’ சிறுகதையில் மேலாண்மை பொன்னுச்சாமி

===========================================

 
பெண்ணையும், குழந்தையையும் வர்ணித்ததை விட இயற்கையை வர்ணிக்கும் போது தமிழ் எப்படி அழகு பெறுகிறது பாருங்கள்...
 
பிறைமதி போன்று வளைந்திருந்த விந்திய மலைச் சாரலின் அடிவாரத்தை ஒட்டி அந்தக் கானாறு நெளிந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. பெருங் கற்பாறைகளின் இடையில் அது புகுந்து வரும் போது வெற்றிப் பெருமிதத்தில் உறுமியது. சுற்றிச் சுழன்று பள்ளத்தில் வீழ்ந்து மேலே தன்னைத் தடுத்தவர்களை நோக்கிச் சிரித்து விட்டு விரைந்தது. அந்தச் சிரிப்பின் ஒலி ஒரு சமயம் ‘கலகல’வென்றும் ஒரு சமயம் ‘குளுகுளு’வென்றும் வெவ்வேறு சமயம் ‘ஹோ ஹோ’வென்றும் ஒலித்தது.

-பரிவாதினி நாவலில் விக்கிரமன்.

===========================================


டர்ந்த பசுமையெல்லாம் குளிர் நிழலாகக் கவிந்து விதானம் வனையும் சாலை. தொலைவில் தெரிகிற மலையுச்சிகள் கனாவில் தோன்றும் லட்சியங்கள் போன்று தெளிவற்று ஆனால் அழகு சுடர, நெஞ்சை ரகசியமாக ஈர்க்கும் மர்ம உலகங்களாகக் காட்சி தந்தன. நீண்டு வளைந்த சாலையில் வழிப் போக்கர் யாருமில்லை. ஆனால் அந்தத் தனிமையே அந்த எழில் அரங்கில் ஏதோ புனிதமான பாதங்களின் வருகைக்‌காகக் காத்திருப்பது போல் ஆழ்ந்ததோர் உணர்ச்சியின் மெல்லிய உயிர்ப்பாகத் தோற்றம் அளித்தது.

-‘செடியாகி, மரமாகி’ சிறுகதையில் ஆர்.சூடாமணி.

===========================================

ந்த சல்லாப சுந்தரி சலசலவென்று தென்றலுடன் வந்து செம்பஞ்சு பாதத்தை எடுத்து வைத்த மறுகணம் அந்த மண்டபத்தின் மெல்லிய திரைகள் அவர்களைச் சூழ்ந்தன. ஓர் இன்பமான சதிக்குக் கட்டியம் கூறின. யவனன் முன் அவள் அமர்ந்து தங்கக் கோப்பையில் கருநீல நிறத்தில் பானத்தை அவனுக்கு ஊற்றிக் கொடுத்த போது, யவனன் அவளைத் தன்பால் இழுத்து கன்னத்தில் முத்தமிட்ட போது அவள் வசந்தகுமாரனைப் பார்த்தாள்.

-‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நாவலில் சுஜாதா

Saturday, September 24, 2011

புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்..?

Posted by பால கணேஷ் Saturday, September 24, 2011
புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் நேசிப்பவன் நான். அழகப்பா கலைக் கல்லூரியின் நூலகத்தில்தான் எனக்கு சாண்டில்யன், கல்கி, லக்ஷ்மி, தமிழ்வாணன், இன்னும் நிறையத் தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் படிப்பது அதிகமாகி வருகிறதே தவிரக் குறையவில்லை. ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும். என்னை நான் வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்கும் பழக்கம் பெருமளவில் உதவியாக இருக்கிறது.


நான் படிக்க விரும்பும் புத்தகங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். யாரிடமிருந்தாவது இரவல் பெற்றுப் படிக்க நேரிட்டால் படித்துவிட்டு பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விடுவேன். ஆனால் என்னிடம் படிப்பதற்காக புத்தகங்களை இரவல் வாங்கிப் போன பலர் திருப்பித் தந்ததில்லை. இப்படி நான் இழந்த நல்ல புத்தகங்கள் நிறைய.


சிலர் என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிச் சென்ற புத்தகங்களை திருப்பித் தரும்போது அழுகை வராத குறை எனக்கு. பளபளவென்று புதிதாய் நான் கொடுத்த புத்தகம் கற்பிழந்த கன்னியென கசங்கிப் போய் (சில சமயங்களில் பக்கங்களில் லேசான கிழிசல் வேறு) திருப்பித் தரப்படும் போது எரிச்சல் பொங்கி வரும் எனக்கு. ‘வீட்டில் குழந்தை கசக்கி விட்டது, தண்ணீரில் நனைந்து விட்டது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு ஆங்கிலேயன் நமக்குக் கொடுத்துச் சென்ற கொடையான ‘ஸாரி’ என்ற வார்த்தையும் இலவச இணைப்பாக எனக்குத் தரப்படும். ‘‘எல்லா மொழியிலும் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ஸாரி’’ என்று விஜயகாந்த் போல சொல்லத் தோன்றும். எதற்கு இந்த டென்ஷன் என்று இப்போதெல்லாம் யாருக்கும் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை நான்.


நம்மில் நிறையப் பேர் புத்தகங்களை வாழையிலையைச் சுருட்டுவது மாதிரி மடக்கியும், கசக்கியும் படிப்பதன் காரணம் என்ன? நாம் பணம் கொடுத்து வாங்கியவையாக இருந்தால் இப்படி கையாள்வோமா? நிறையப் பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டுமே இருக்கிறது. ‘‘வாய் இருக்கிறது. சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. டிபன் வாங்கித் தா’’ என்று யாரிடமேனும் கேட்பீர்களா? நீங்கள் சாப்பிட நீங்கள்தானே செலவழிக்கிறீர்கள்? ‘‘கண்கள் இருக்கின்றன, படிக்கும் பழக்கம் இருக்கிறது, புத்தகம் தா’’ என்று வாங்கிப் படிப்பது மட்டும் அசிங்கமாக சிலருக்குத் தெரியவில்லை. படிக்கும் விருப்பம் இருந்தால் வாங்கிப் படிக்க வேண்டியதுதானே?


நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு தினமலர் வாங்கிப் படிப்பவர், டீக்கடையில் தினத்தந்தி படிப்பதையோ, விகடன் படித்துக் கொண்டிருப்பவர் அருகில் குங்குமம் படித்துக் கொண்டிருப்பவரிடம் எக்ஸ்சேஞ்ச் செய்து படிப்பதையோ நான் குறை சொல்லவில்லை. இரவல் வாங்குவதை மட்டுமே பழக்கமாக வைத்திருக்கும் சிலரைத்தான் சொல்கிறேன். பரிமாற்றம் மிகவும் சரியான விஷயம். ஓசியில் பெற்றுக் கொள்வதுதான் எனக்கு எரிச்சல் தரும் விஷயம். ஓசிப் பேர்வழிகளைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு இப்படிச் செய்யத் தோன்றும் :

ரயில் பயணங்களின் போது புத்தகம் படிப்பது என் பழக்கம். எப்போதடா புத்தகத்தை மூடுவான் என்பது போலக் காத்திருந்து ‘‘சார், கொஞ்சம் படிச்சுட்டுத் தர்றேனே’’ என்று கேட்பார்கள். நான் நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவேன். (அழகான ஃபிகராக இருந்தால்கூட). ‘‘பாவிகளா... கேன்டீன்லருந்து ஆளுங்க வர்றப்பல்லாம் கட்லெட், பஜ்ஜின்னு கண்டதையும் வாங்கித் தின்னவும், நாலஞ்சு காபி குடிக்கவும் செலவு பண்றீங்களே..? வண்டில ஏறும் போது ஒரு விகடனோ, நியூஸ் பேப்பரோ வாங்கிட்டு வர மாட்டியா? படிக்கிறதுக்குச் செலவு பண்றவன் என்ன கேனையனா?’’ என்று மனதிற்குள் அவர்களை சகஸ்ரநாம அர்ச்சனையே செய்வேன்.


‘மிகவும் கொடூரமாகச் சிந்திக்கிறாய்’ ‘சின்ன விஷயத்துக்கு உன் ரியாக்ஷன் ஓவர்’ என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? உண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் தெரியவில்லை. நான்தான் இப்படி இருக்கிறேனா, மற்றவர்களுக்கும் இப்படி எண்ணங்கள் தோன்றியதுண்டா? என்னுடைய இந்த அணுகுமுறை சரியா, தவறா? இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?


நல்லவங்க நீங்க (என் போஸ்ட்டை படிக்கிறீங்களே...) ல்லாம் சொல்லுங்களேன். தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

Thursday, September 22, 2011

நகரைத் தேடிய விமானி

Posted by பால கணேஷ் Thursday, September 22, 2011
ரித்திரக் கதைகளிலும் சரி, பழைய சரித்திர திரைப்படங்களிலும் சரி தவறாமல் ஒரு விஷயம் வரும். மன்னன் தன் மந்திரியைப் பார்த்து, ‘‘மந்திரி! மாதம் மும்மாரி பொழிகிறதா?’’ என்று கேட்பார். அவர் ஏன் அப்படிக் கேட்க வேண்டும்? நாட்டில் மழை பொழிந்தால் அவருக்கு மட்டும் தெரியாமல் போய்விடப் போகிறதா... இல்லை மன்னர் ஃபாரின் டூர் எதுவும் போயிருந்தாரா? எதற்கு இப்படி அபத்தமாகக் கேட்பதாக எழுதுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.


வசந்த் டி.வி.யில் திரு.டெல்லிகணேஷ் இப்படிச் சொன்னார்: ஒரு நாட்டில் வேதம் அறிந்த அந்தணர்கள் சரியானபடி தர்மங்களை கடைப்பிடித்து வருவார்களேயானால் அவர்கள் பொருட்டு ஒரு மழை. மன்னனாய் இருப்பவன் நீதி நெறி வழுவாது சிறப்பான ஆட்சி புரிந்தால்  அவன் பொருட்டு ஒரு மழை. பெண்கள் கற்புநெறி வழுவாமல் பத்தினிகளாய் இருந்தால் அவர்களின் பொருட்டு ஒரு மழை. ஆக, ஒரு மாதத்தில் இந்த விஷயங்களுக்காக மும்முறை மழை பொழிய வேண்டும். நாட்டில் இந்த மூன்று விஷயங்களும் சரிவர நடக்கிறதா என்பதைத்தான் அப்படி ஒரு கேள்வியாக மன்னர் கேட்கிறார்.


இந்தச் செய்தி எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?

 
-----------------------------------------------------------

 
ழுத்தாளர் என்.சொக்கன் அவருடைய வலைத்தளத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் கதாநாயகன் செம்பட்டை (சிவகுமார்) வண்டிச்சோலை கிராமத்திலிலிருந்து யாருக்கு என்ன தேவையோ அதை சேலம் போய் வாங்கி வந்து தருவார். ‘‘வெத்தல வெத்தல வெத்தலயோவ்’’ என்று ஒரு பாடலில் கிராமத்தவர்களிடம் அவர் என்ன வேண்டும் என்று கேட்பதும், அதைப் பாடலாகப் பாடியபடி வழிநடப்பதும் வரும். அதில் ஒரு பயில்வான், ‘‘டேய், நாலு தோலாவுக்கு பாதாமும் பிஸ்தாவும், மூணு தோலாவுக்கு முந்திரியும் திராட்சையும் வாங்கிட்டு வாடா’’ என்பார். தோலா என்றால் என்ன அளவு? -இதுதான் சொக்கன் கேட்டிருந்த கேள்வி.

 
எனக்கும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. என் சித்தப்பாவிற்கு போன் செய்து கேட்டேன். தோலா, பலம், சேர், வீசை மணங்கு என்றெல்லாம் அளவுமுறைகள் அக்காலத்தில் இருந்ததாகக் கூறினார். இக்கால அளவுகளில் அவை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்பிக் கேட்டபோது ஒரு வாய்ப்பாடு சொன்னார்.

 
ஒரு ரூபாய் எடை    =    1 தோலா
3 தோலா எடை          =    1 பலம்
8 பலம் எடை              =    1 சேர்
5 சேர் எடை                =    1 வீசை
8 வீசை                         =    1 மணங்கு

 
இதுதான் வாய்ப்பாடாம். இதில் வீசை என்பது 1400 கிராம் என்றால் தோலா எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள் என்றார். நான் கணக்கில் கொஞ்சம் வீக். ஹி... ஹி... தோலா என்றால் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டு கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் சொக்கன் சார்!

 
இந்த விஷயம் எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?


-----------------------------------------------------------


கீழே நான் கொடுத்திருப்பதை திரு.பாக்யராஜ் அவர்களின் குரலில் கற்பனை செய்து கொண்டு படிக்கவும்.


வாழ்க்கைல சமயோசிதமா நடந்துக்கறது ரொம்ப முக்கியமான விசயங்க. ஒரு பாகவதர் ஹரிகதை சொல்லிட்டிருந்தார். ஏதாவது ஒரு கதைய வசனம் பாதி, பாட்டு பாதியா கலந்து சொல்றதுக்கு ஹரிகதைன்னு பேருங்க. அவரு தலைவனை சந்திச்ச தலைவி தன் தோழிகிட்ட அவனைப் பத்தி விசாரிக்கிற சீனைச்  சொல்லிட்டு பாட ஆரம்பிச்சாரு. ‘‘அழகுள்ள துரை இவர் யாரடி?’’ என்று தலைவி கேட்பதாக பாட்டை ஆரம்பிக்கறப்ப அந்த ஊர் பெரிய மனுசன் ஒருத்தர் அங்க வந்தாரு. நம்ம ஆளு அவரைக் காமிச்சு ‘அழகுள்ள துரை இவர் யாரடி?’ன்னு கேட்டு பாடவும், எல்லாரும் கை தட்டினாங்க.


தொடர்ந்து அவர் பாடிக்கிட்டே வர்ற நேரத்தில இன்னொரு ஊர் பெரிய மனுசன் வந்து சேர்ந்தாரு. அவரு நல்லா ஆறடி உயரமான ஆசாமி. நம்ம ஆளு அவரைக் கை காட்டி, ‘அழகுள்ள துரை இவர் ஆறடி’ ன்னு ‘ஆறடி’க்கு அழுத்தம் குடுத்துப் பாடவும், செமையா கை தட்டல் வாங்கிக்கிட்டாரு.


அந்தக் கைதட்டல் அடங்கறதுக்குள்ள இன்னொரு ஊர்ப் பெரிய மனுசன் வந்தாரு. இவரு அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி குள்ளமான ஆசாமி. நம்ம ஆள் அவரைப் பார்த்ததும் சட்டுன்னு, ‘‘அழ குள்ளதுரை இவர் யாரடி?’’ ன்னு ‘குள்ள துரை’க்கு அழுத்தம் கொடுத்துப் பாடவும், முன்னெல்லாம் விட பலமா கை தட்டிப் பாராட்டினாங்க ஊர் சனங்க.


இப்படி சமயத்துக்குத் தகுந்த மாதிரி சமயோசிதமா யோசிச்சு சமாளிக்கிற புத்திசாலிங்கதாங்க எல்லாத்துலயும் ஜெயிக்க முடியும். இந்த விசயத்தை என்னோட கேள்வி பதில் பகுதியிலயும் எழுதியிருக்கேன் என்று ஒருமுறை அவரைச் சந்தித்த தருணத்தில் கே.பாக்யராஜ் அவர்கள் சொன்னார்.


இந்தக் கதை எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?


-----------------------------------------------------------


லைஞரின் ஆட்சியில் ‘சிங்கார சென்னை’, ஜெயலலிதாவின் ஆட்சியில் ‘எழில்மிகு சென்னை’ -இப்படியெல்லாம் அழகாகத்தான் சொல்லுகின்றனர். ஆனால் பலமாக ஒரு மழை பெய்தால் சிங்காரமும், எழிலும் காணாமல் போய் விடுகிறது. பல ஏரியாக்களில் தண்ணீர் வடிவதற்கு சரியான ஏற்பாடு இல்லாததால் தேங்கி நிற்கும் குட்டைகளும், சேறுமாக பாதசாரியாக அதைக் கடப்பதற்குள் பரதம், கதகளி, குச்சுப்புடி என்று எந்த இலக்கணத்திலும் அடங்காத நாட்டியம் ஒன்றை ஆடித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. சைதாப்பேட்டை அண்டர் பிரிட்ஜில் என் வாகனத்தில் சென்றபோது ‘நாடோடி மன்னன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போல, மேலே இரண்டு பக்கமிருந்தும் குழாய்களில் மழைத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. விளைவாக, என் வாகனம் நனைந்துதான் அந்த அண்டர் ப்ரிட்ஜிலிருந்து மேலே வர வேண்டியிருந்தது. புதுச்சேரியில் சாலைகளில் இப்படி மழை நீர் தேங்குவதில்லை. ஹும்! அதை நினைத்துப் பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.


-----------------------------------------------------------


ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாமா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ்! நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது அசோகனின் கேள்வி. ‘‘கொஞ்சம் இரு... வெளில எட்டிப் பார்த்துச் சொல்றேன். மைல்கல் அங்கதானே நட்டிருப்பாங்க... பாத்துட்டாப் போச்சு’’ என்று பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... எதற்கும் சிரிக்காத சொர்ணமும் அவருடன் சேர்ந்து மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.


சாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாமலிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ் இது..? கீழே கீழே இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’  நாகேஷின் பதில்: ‘‘அது ஒண்ணுமில்ல... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடறான்...’’ -இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?


-- ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்கிற நூலின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். (புரட்சித்தலைவர் தான்) இப்படிக் குறிப்பிடுகிறார்.

Monday, September 19, 2011

நான் ரசித்த நகைச்சுவைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, September 19, 2011
தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.

Thursday, September 15, 2011

இதுவும் ஒருவித வன்முறைதான்!

Posted by பால கணேஷ் Thursday, September 15, 2011
என்னுடைய அப்பாவின் காலத்தில் இல்லாத பல விஞ்ஞான வசதிகளை இன்று என்னால் அனுபவிக்க முடிகிறது. ‘‘அது சரியான ‌வேகத்தில் வீசப்பட்ட பந்து. அதை அவர் தடுத்து ஆடியிருக்க வேண்டும். பேட்டில் பட்ட பந்தை ஸ்லிப்பில் கேட்சாகி விட்டது’’ -இப்படி காதருகில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு, எங்கோ நடக்கும் கிரிக்கெட்டின் வர்ணனையைக் கேட்டவர் என் அப்பா. எங்கோ நடக்கும் கிரிக்கெட்டை என் வீட்டு ஹாலில் இருந்தே தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி பெற்றிருக்கிறேன் நான். சினிமா பார்க்க தியேட்டருக்கு ஓடியவர் அவர். வீட்டிலேயே டிவிடி வாங்கி போட்டுப் பார்ப்பவன் நான். லேண்ட் லைன் தொலைபேசியை மட்டுமே பார்த்தவர் அவர். செல்போனைப் பயன்படுத்துகிறவன் நான்.


செல்போன் என்பது மிகவும் வசதிதான். கைக்கு அடக்கமாக இருப்பது, எங்கிருந்தும், யாரையும் அழைத்துப் பேசும் வசதி என்று இதில் கிடைக்கும் வசதிகள் பல. ஆரம்பத்தில் செங்கல் சைசுக்கு தொலைத் தொடர்பு வசதியை மட்டும் தாங்கி வந்த செல்போன்கள் இன்று கையடக்க அளவுக்கு மாறியது மட்டுமின்றி, அதிலேயே கேமரா, இன்டர்நெட், ஆடியோ, வீடியோ ப்ளேயர்கள் என்று பல வசதி(?)களை உள்ளடக்கியவையாக வருகின்றன. இது வரமா, சாபமா என்பதுதான் எனக்குப் புரியவில்லை.


செல்போனைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பாக என்னால் என் நண்பர்கள் பலரின் தொலைபேசி எண்ணை என்னால் நினைவிலிருந்து கூற முடிந்தது. ஆனால் இன்று... எவர் எண்ணும் நினைவில் நிற்காமல் செல்லில் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செல்போனை ஒருமுறை திருட்டுக் கொடுத்தபோது என் கான்டாக்ட்ஸை மீட்டெடுப்பதற்குள் திணறி விட்டேன். இந்த நிலை இன்று நிறையப் பேருக்கு ஏற்பட்டிருக்கும்.


முன்பெல்லாம் கடிதங்கள் எழுதும் பழக்கம் கொண்டிருந்தேன். நாவல்களைப் படித்ததும் எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது, நண்பர்களுக்கு எழுதுவது என்று அதிகளவில் தபால் துறையைப் பயன்படுத்தி வந்தேன். இப்போது இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமே எல்லோரையயும் தொடர்பு கொள்ள முடிவதால் கடிதம் எழுதும் பழக்கமே என்னிடம் இல்லாமல் போய் விட்டது.


செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் அபராதம் என்றெல்லாம் அறிவித்த பின்னும் பலர் செல்லில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதை இன்றும் பார்க்கிறேன். சிலர் ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாதனத்தின் உதவியுடன் செல்லை எடுக்காமல் பேசுகின்றனர். சிலர் தோளில் இடுக்கியபடியே பேசிக் கொண்டு போகிறார்கள். எப்படியாயினும் போக்குவரத்தி்ல் கவனம் சிதறுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘‘அப்படி என்னடா அவசரம்? --------- (இந்த இடத்துல ஜாக்கிசேகரின் டிரேட்மார்க் வார்த்தையைப் போட்டுக் கொள்ளவும்) வண்டி ஓட்டிக்கிட்டே பேசி என்னத்தடா சாதிக்கப் போறீங்க?’’ என்று கத்தவேண்டும் போல எனக்குக் கோபம் வரும்.


செய்தித்தாள்களைப் பிரித்தால் செல்போனில் பேசியபடி ரயில்வே ட்ராக்கை க்ராஸ் செய்ய முயன்றவர்கள் ட்ரெய்னில் அடிபட்டு உயிரிழக்கிறார்கள் என்ற செய்தியை அடிக்கடி காண முடிகிறது.


நான் கவனித்த வரை ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் செல்போன் பயன்படுத்துகிறார்கள். பேருந்தில் பயணிக்கும் போது பார்த்தால் இரண்டு ஆண்கள் செல்போன் பேசியபடி இருந்தால், எட்டுப் பெண்கள் செல்போனில் பேசியபடி இருக்கிறார்கள். அதுவும் ஆண்கள் பேசுவது ஐந்து நிமிடம் என்று வைத்துக் கொண்டால் பெண்கள் பேசுவது இருபத்தைந்து நிமிடங்களுக்குக் குறையாமல்தான் உள்ளது.


செல்போனில் இன்டர்நெட் மற்றும் வெப்சைட் பார்க்கிறார்கள் பலர். கணினித் திரையில் வசதியாகப் பார்ப்பதை விட்டு இப்படி சின்னத் திரையில் பார்ப்பதால் கண்கள் கெடும் என்பதும், அருகில் இருக்கும் பலர் உங்கள் செல்போனின் திரையைப் பார்க்கிறார்கள் என்பதும் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்.


என் செல்போனில் எம்.பி.3 ப்ளேயர் தவிர வேறு வசதிகளை வைத்துக் கொள்ளவில்லை. தொலைத் தொடர்புக்காக ஏற்பட்ட கருவிக்கு அந்தப் பயன்பாடு மட்டும் இருந்தால் போதும் என்பது என்னுடைய எண்ணம். மற்ற வசதிகளை அனுபவிப்பதில் தவறில்லை. இன்று தவிர்க்க இயலாததும்கூட. ஆனால் நான் குறிப்பிட விரும்புவது, மற்றவரையும், உங்களையும் பாதிக்காத வண்ணம் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான்.


நான் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் ஆசிரியராக இருந்த ஊஞ்சல் இதழில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தேன். நான் எம்.ஜி.ஆரின் ‘உன்னை அறிந்தால்’ பாடலை காலர் டியூனாக அப்போதெல்லாம் வைத்திருந்தேன். அவர் காலர் டியூன் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.


அது பற்றிக் கேட்டபோது, ‘‘நான் ஏதாவது சோகமான மனநிலையில் ஒருவனுக்கு போன் செய்யும் போது ‘நாக்கமுக்க’ மாதிரி பாட்டைக் கேட்டால் எரிச்சல் வரும். நான் மகிழ்ச்சியான மனநிலையில் நண்பரை அழைக்கும்போது எதிர்முனையில் ‘எங்கே நிம்மதி’ பாடினால் என் சந்தோஷ மூட் போய் விடும். ஏன் இப்படி உங்களுக்கு்ப் பிடித்த பாட்டை அடுத்தவர் மீது திணிக்க வேண்டும்? இதுவும் ஒருவிதமான வன்முறைதான்.’’ என்று குறிப்பிட்டார். மிகவும் நியாயமாகவே தோன்றியதால் நானும் காலர் டியூனை எடுத்து விட்டேன். இப்போது என் போனிலும் ட்ரிங்... ட்ரிங்... தான்.


செல்போனைப் பொறுத்தமட்டில் என் நிலைப்பாடு இப்படி! உங்களுக்கு எப்படி?

Sunday, September 11, 2011

எனக்கு இப்படி! உங்களுக்கு...?

Posted by பால கணேஷ் Sunday, September 11, 2011
அனைவருக்கும் வணக்கம்! இது என்னுடைய முதல் பதிவு. தவழும் குழந்தைக்கு விரல் கொடுத்து நடக்க உதவும் பெரியவர்கள் போல உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.


குழந்தை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய நீண்டநாள் சந்தேகம் ஒன்று. `எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து' என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் எது என்று நானும் நினைவு தெரிந்த நாளாய் யோசித்துப் பார்க்கிறேன்... தெரியவில்லை. உங்களுக்கு நினைவு தெரிந்த நாள் எது என்பது உங்களுக்குத் தெரியுமா?


அதை விடுங்கள்... என்னுடைய சிறு வயதில் பண்டிகைகள் வருகிறது என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பே ஒருவித ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி என்றால் இந்த வாரமே பரபரப்பாக குன்றி மணிகள் சேகரிப்பது துவங்கி தயாராகிக் கொண்டிருப்போம். அதிலும் தீபாவளிப் பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம்... எத்தனை புது டிரெஸ் வாங்குவது என்பதில் துவங்கி எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்குவது என்பது வரை ஒரு மாதத்திற்கு முன்னாலிருந்தே பிளான் பண்ணி வீட்டில் நச்சரிக்கத் துவங்கி திட்டும் வாங்கிக் கட்டிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக பட்டாசுகளின் சத்தம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஆங்காங்கே கேட்கத் துவங்கி விடும். 


ஆனால் எனக்கென்னவோ இக்காலத்து சிறுவர்களிடம் அத்தகைய ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறதாகத் தோன்றவில்லை. இப்போது தீபாவளியை நெருங்க ஒரு மாதமிருக்கும் நிலையில் எந்த வெடிச் சத்தத்தையும் நான் கேட்கவில்லை. (கல்யாண மண்டபங்களிலும், பிணத்தின் முன்பும் வெடிப்பது இந்த வகையில் சேராது). ஏராளமான டி.வி. சேனல்கள் வந்து இயல்பான சிறு வயது ஆர்வங்கள் பலவற்றைப் பறித்துக் கொண்டு விட்டன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


எனக்கு இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி? 


டிஸ்கி 1  பதிவுக்காக ஷொட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


டிஸ்கி 2  நான் பதிவுகள் எழுதத் தூண்டுதலாக இருந்த மூவர்˜ நண்பர்கள் ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார் மற்றும் அண்ணன் சேட்டைக்காரன். குட்ட விரும்புபவர்கள் இவர்களைக் குட்டவும்.  ஹி! ஹி!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube